கருவறை கீதம் -7


 

அத்தியாயம் 7


வருடம் 2003


பாஸ்கரனின் தங்கை நிர்மலா அன்று அம்மா வீட்டிற்கு சீராட சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் வந்திருந்தாள். அவளின் பூரித்த முகமும் தேகமும் கணவன் வீட்டில் அவள் வாழும் நல்வாழ்க்கையைப் பறைசாற்றியது. வரவேற்பு, மாப்பிள்ளை உபச்சாரம் எல்லாம் முடிந்ததும் மெல்ல வந்த விடயத்தைச் சொன்னாள் நிர்மலா.


“நாள் தள்ளி போயிருக்குதும்மா. நேத்து தான் டாக்டர்கிட்ட போய் கன்ஃபர்ம் பண்ணிட்டு வந்தோம்.”


“நல்ல சேதி சொன்னே!” என்ற சித்தி அவள் வாயில் சர்க்கரையை அள்ளிப் போட்டார்.


“எத்தனை நாளுடி?”


“நாப்பத்தஞ்சு நாள் ஆகுது சித்தி.”


“அப்புறம் ஏன் இவ்ளோ தூரம் டிராவல் பண்ணி வரணும்?”


“ட்ரெய்ன் தானேம்மா. எனக்கு உன் கைல சாப்பிட ஆசைன்னு சொன்னேன். அதான் கூட்டிட்டு வந்தார்.”


“சந்தோஷம்டி! இதைத்தான் நல்லது நடந்தா வரிசையா நடக்கும்ன்னு சொல்லுவாங்க.” -மங்கை.


“வரிசையாவா?”


“ம்ம் ம்ம்! உன் அண்ணிக்காரி நம்ம வழிக்கு வந்துட்டா இல்ல?” -சித்தி.


மகிழ்ச்சியில் விரிந்தது நிர்மலாவின் கண்கள். “அம்மா?”


“எல்லாம் உங்கப்பாதான்! பாஸு அவர் பிள்ளையே இல்லன்ற மாதிரி அவனையும் அவளையும் தள்ளி வச்சிட்டாரு. எங்க பையனை எங்கக்கிட்டே இருந்து பிரிச்சிட்ட’ன்னு இவ அடிக்கடி அனு காதுப்பட பேச, புருஷன்கிட்ட அவ என்னத்தைச் சொன்னாளோ தெரியலை. திடீர்னு நல்ல சேதி சொல்றேன்மான்னு சொல்லிட்டு போனான்.” -அம்மா.


“அப்டி சொல்லியும் மாசமாச்சு. இந்த மாசம் அவக்கிட்ட கேட்கணும்கா.” -சித்தி.


“எப்டியோ நல்லது நடந்தா சரிதான்.” - நிர்மலா.


மாலையில் வீடு திரும்பினர் பாஸ்கரனும் அனுவும்! தங்கையின் வரவில் மகிழ்ந்தவன், அவர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்றான்.


வாயெல்லாம் பல்லாக, “தாய்மாமன் சீர் செய்ய ரெடியா இருடா பாஸு!” என்றார் சித்தி.


பாஸ்கரன் புரியாமல் விழிக்க, அனு புரிந்துகொண்டு, “கங்கிராட்ஸ் நிர்மலா!” என,


சட்டென இவன் மூளைக்குள் ஒளி பரவியது. “வாவ்! வாழ்த்துக்கள் மாப்பிள்ளை.”


“நீங்க எப்போ மச்சான் எனக்கு மாமா பிரமோஷன் தரப் போறீங்க?” எனக் கேட்டான் நிர்மலாவின் கணவன் ராஜேஷ்.


“உங்களுக்கு போட்டியா வர்றேனா இல்லையா பாருங்க.”


வீடு கலகலத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், தாங்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் தெரிய வந்தால் அனைவரின் எதிர்வினை எப்படி இருக்குமென நினைத்து அனுவிற்கு அடிவயிறு கலங்கியது.


மூன்றாம் தரப்பு ஏஜென்ஸி ஒன்றின் மூலமாக தம்பதியருக்கு, வாடகைத் தாயாக அறிமுகப்படுத்த பட்டிருந்தாள் அந்தப் பெண். நல்ல ஆரோக்கியமான பெண் அவள். அவளைப் பற்றிய தேவையான விபரங்கள் அனைத்தும் இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருவருக்கும் அவளின் ஆரோக்கிய உடல்நிலைக் குறித்து பரம திருப்தி!


அனுவின் கருமுட்டையும் பாஸ்கரனின் விந்தணுவும் வெற்றிகரமாக In Vitro Fertilization (IVF) மூலம் கருவாக உருவாக்கப்பட்டு, அவளின் கருப்பையில் சேர்க்கப்பட இருக்கிறது. இன்னும் ஒரே வாரம்! விடைத் தெரிந்துவிடும் எனும் நிலைமை!


அந்த ஒரு வாரம் முழுவதும் நிர்மலா தாய் வீட்டில் சீராடினாள். அதைக் கண்ட அனுவிற்கு மனதில் சிறு சலனம் வந்து போனது. தானும் தன் வயிற்றில் கருவைத் தாங்கியிருந்தால் தனக்கும் இது போன்ற அனுசரணையும் அன்பும் கிடைத்திருக்குமோ என நினைத்தவள், மறுகணமே ‘அப்புறம் முழுநேர அம்மாவா மாறி, உடம்பும் ஒத்துழைக்காம போய், ஆஃபீஸ்ல இத்தனை நாள் உழைச்ச உழைப்புக்கு அர்த்தமே இல்லாம போயிடும்.’ என்று ஏளனமாக உதடு வளைத்தாள்.


அடுத்த வார இறுதியில் இருவரும் கருத்தரிப்பு மையத்திற்கு சென்றார்கள். காத்திருந்த நேரத்தில் ஜில்லிட்ட தன் கையை பாஸ்கரனின் கையோடு பிணைத்துக்கொண்டாள் அனு.


“ஃபீல் ஃப்ரீடா. எவ்ரிதிங் வில் கோ வெல்.”


உள்ளே அழைக்கப்பட்டார்கள். மருத்துவர் வெற்றிக்குறி காண்பித்துவிட்டு வாழ்த்துகள் சொன்னார். இருவரின் பதட்டநிலை தணிந்து, மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போய் வந்து, ஆசுவாசம் கொண்ட பின், மேற்கொண்டு செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து சொல்லி, அதற்குண்டான பணத்தைப் பெற்றுக்கொண்டார். இவர்களும் அந்தப் பெண்ணுடன் சற்றுநேரம் அளவளாவி, அறிவுரைகள் சொல்லிவிட்டு வந்தனர்.


“தாங்க்ஸ் பாஸ்கர்.”


“ரொம்ப ஃபார்மலா இருக்குது.” என்று தன் பிரத்யேக குறும்பு சிரிப்பை உதிர்த்தான்.


“அச்சோ! எனக்கு எப்டி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னே தெரியலைங்க. பட் ரொம்ப சந்தோஷமா இருக்குது. நீங்க இந்த ப்ராசஸ்க்கு சரின்னு சொல்லலைன்னா இது சாத்தியமே ஆகியிருக்காது.”


“......”


“இனி நம்ம வீட்ல யாரும் என்னைப் பேச மாட்டாங்க இல்ல? அத்தைக்கு உடனே கால் பண்ணி சொல்லிடவா?”


“அவசரப்பட வேணாம் அனு. இன்னும் ஒண்ணு ரெண்டு மாசம் வெய்ட் பண்ணலாம்.”


“என்ன? ஏன்?”


“அப்பாவைப் பத்தி எனக்குத் தெரியும். அத்தனை சீக்கிரம் இதுக்கு ஒத்துக்கமாட்டார். நாம நிறைய போராட தான் செய்யணும்.”


“என்ன பாஸ்கர் சொல்றீங்க? அதான் அவங்க பேரனைப் பார்க்கப் போறாங்களே? இன்னும் என்ன?”


“ப்ச்! எப்போ தான் மனுஷங்களைப் புரிஞ்சிக்க போற அனு?”


“??”


“சரி, இவ்ளோ பேசறியே? உங்கம்மா கிட்ட இந்த விஷயத்தைக் கன்வே பண்ணிட்டியா?”


“இல்லை… இனிதான்… என்ன சொல்லுவாங்களோன்னு ஒரே நெர்வஸா இருக்குது.”


“ஹ்ம்ம்! அதான் சொல்றேன். இன்னும் ஒரு ரெண்டு மாசம் போகட்டும். அந்தக் குழந்தையை அக்ரிமெண்ட் போட்டபடி நாம வாங்கித்தான் ஆகணும்ன்னு சொல்வோம்.”


“சரி.”


“அப்டி வாங்காம போனா நம்ம மேல கேஸாகும்ன்னு லாக் பண்ணனும். பின்னாடி குழந்தையைப் பார்த்த அப்புறம் மனசு மாறிடுவாங்க.”


“ஹ்ம்ம்.”


அப்பாவின் ஒதுக்கத்தைத் தாங்கவியலாமல், அனுவின் காதலை விலக்கி அவளின் வேலை குறித்த ஆசைக்கு தடை சொல்லவும் முடியாமல், இறுதியில் இருவருக்கும் இதுவே நல்லது என்று நம்பி, இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் பாஸ்கரன்.


இதனால் யாருக்கும் பாதகமில்லை என்று நம்பிய அவன், அவனுடைய உயிர்நீரில் உதித்த உயிரை நினைக்கத் தவறிவிட்டான்.


வருடம் 2034


விசைப்பலகை அற்ற, இரண்டு தொடுதிரைகளை மட்டும் கொண்ட, அந்த மிக மிக மெலிந்த மடிக்கணினியின் திரையில் தன் பார்வையை உன்னிப்பாக பதித்திருந்தான் பிரபஞ்சன். அருகே ரூபிக் க்யூபை உருட்டியபடி அக்னிஸ்வரூபன்!


அவினாஷ் குடும்பத்தில் மொத்தம் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்?, அவர்கள் என்னென்ன வேலையில் இருக்கிறார்கள்?, அவர்களின் பழக்கவழக்கங்கள் எப்படிப்பட்டது?, அவர்களின் கை சுத்தமா?, ஏதேனும் கரும்புள்ளி இருந்திருக்கிறதா?, அவர்களின் முன்னோர்கள் எப்படிப்பட்டவர்கள்? என அவர்கள் தலைமுறையின் மொத்த ஜாதகத்தையும் நீண்ட அறிக்கையாகத் தயாரித்து எடுத்து வந்திருந்தான் அக்னி.


அதைத்தான் பிரபஞ்சன் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். “வெல்… எல்லாம் பெட்டரா தான் தெரியுது. வாட் யூ ஸே, அக்னி?”


“ஹ்ம்ம்’ப்பா!”


“என்னடா?”


“எனக்கும் ஓகேதான்ப்பா. ஏதாவது தப்பிருந்து நாம வேணாம்னு சொன்னா கூட இந்த ப்ரூ காஃபி அழ ஆரம்பிச்சிடும்.”


“ஹாஹா… என்னால நம்பவே முடியலடா. எப்டி இருந்த உன் தங்கச்சி இப்டி ஆகிட்டா! நிறையப் பேர் நல்லா இருந்தவனுங்க கூட காதலிச்சிட்டு கண்டமேனிக்கு உளருறதைப் பார்த்து, ‘என்னடா மூளையை அடகு வச்சவன் மாதிரி பேசறான்’னு நினைச்சிருக்கேன். ஆனா இப்போ என் பொண்ணே இப்டி ரிவர்ஸ் சேஞ்ச் காட்டறதைப் பார்க்கும்போது நம்பாம இருக்க முடியல. இந்த லவ்ல என்னவோ இருக்குதுடா அக்னி. ஹாஹா…”


தந்தையின் கூற்றில் இவன் இதழிலும் குறுஞ்சிரிப்பு படர்ந்தது. “ஏன்ப்பா நீங்க லவ் பண்ணதில்லயா?”


“அந்த காலத்துல லவ் பண்ற சூழல் எனக்கு இல்லை அக்னி. உனக்குத் தான் தெரியுமே… நான் செகண்ட் இயர் படிக்கும்போதே உங்க தாத்தா தவறிட்டார். அப்போதான் உங்கத்தைக்கு (பிரபஞ்சனின் அக்கா வசுதா) கல்யாணம் ஆகியிருந்தது. சொல்லிக்கற மாதிரி வீடோ, சொத்துக்களோ ஒண்ணுமில்லை. பாட்டி அந்தக் காலத்துலயே எம்.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடிச்சிருந்ததால, அந்த சமயம் காலேஜ் லெக்சரரா வேலை கிடைச்சு அதுல என்னைப் படிக்க வச்சாங்க. சோ எனக்கு பொண்ணுங்களைப் பார்க்கும்போது பட்டாம்பூச்சி பறக்காம குற்றவுணர்வுதான் வரும். 


ஏன்னா அப்பா இருக்கும்போது அம்மாவை ராணி மாதிரி பார்த்துக்கிட்டார். இப்போ அம்மா வேலைக்கு போய்க் கஷ்டப்பட்டு நம்மளைப் படிக்க வைக்கறாங்க. நாம சரியா இருக்கணும்ன்ற பொறுப்புணர்வுதான் என்கிட்ட அதிகமா இருந்ததே தவிர, காதலைப் பத்தி யோசிக்கக் கூட என் மனசு இடங்கொடுக்கலை.”


அப்படி பொறுப்பாக வளர்ந்து, பணியில் அமர்ந்து அதில் அம்மாவிற்கு ஓய்வளித்து, அக்காவிற்கு செய்ய வேண்டிய செய்முறைகளை வருடா வருடம் சரியாக செய்து, தானும் முன்னேறி, சுயமாய்த் தொழில் தொடங்கி அதில் வெற்றியும் கண்டவன் இந்த பிரபஞ்சன். அவன் ஆசைப்படி, அப்பாவைப் போல் அம்மாவை ராணியாகவே உணர வைத்திருக்கிறான்.


“யூ ஆர் கிரேட்ப்பா!”


“ம்ம்! உங்கம்மாதான் என்னோட ஃபர்ஸ்ட் லவ்!”


“இதெல்லாம் போங்கு! அம்மா பாட்டி பார்த்த பொண்ணுதானே?”


“அப்டி இருந்துமே வீட்ல ரெண்டு பேருக்கும் அக்கப்போரா இருக்கும்டா. பஞ்சாயத்து பண்ணியே ஒரு வழி ஆகிடுவேன்.”


தந்தையின் செல்ல அயர்ச்சியில் வெடித்து சிரித்தான் அக்னி.


“நீ ஏண்டா யாரையும் லவ் பண்ணல?”


“தோணலைப்பா.” என்றவன், இயல்பு போல் தலைக்கோதிக் கொண்டு, தன் மடிக்கணினியை மூடி எடுத்துக்கொள்ள,


“சீக்கிரம் கல்யாணத்துக்காவது சரின்னு சொல்லு அக்னி. உங்கம்மா உன்னை நினைச்சுதான் ரொம்ப கவலைப்படறா.” என்றான் பிரபஞ்சன்.


“.....”


“அப்போ அவினாஷ் வீட்டுக்கு பேசி தட்டு மாத்துறதுக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணிடுவோமா?” 


“பண்ணிடலாம்ப்பா.” 


தங்கள் வீட்டு மாப்பிள்ளையாகப் போகும் அவினாஷ் யாரென்று தெரிந்து போன பின்னர், தனிப்பட்டு சில வேலைகள் பார்க்க ஆரம்பித்திருந்தான் அக்னி. அதைக் குறித்து மேலோட்டமாக பிரபஞ்சனிடம் சொல்ல, அவன் புருவங்கள் சுருங்கியது. “இப்போ எதுக்குடா? பிரகதிக்காகவா?”


“இல்லப்பா. டைம் வரும்போது கண்டிப்பா உங்களுக்கும் அம்மாவுக்கும் சொல்லுவேன்.” என்று சொல்லிவிட்டு போன மகனை சிந்தனையுடன் பார்த்திருந்தான் பிரபஞ்சன்.


அப்பாவின் அலுவலக அறையில் இருந்து வந்த அண்ணனைப் பார்த்ததும், மணிக்கட்டில் இல்லாதத் திரையில் (invisible screen) தெரிந்த அவினாஷிடம், “சரி சரி. நீங்க அதைப் பார்த்து வைங்க. நான் அப்புறம் பேசறேன் அஷ்ஷூ.” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு, தடதடவென மாடியேறிக் கொண்டிருந்த அக்னியைப் பின்தொடர்ந்தாள் பிரகதி.


“அண்ணா!”


“ஹேய் ப்ரூ காஃபி! என்ன உன் மொபைல் சும்மா இருக்குது?” என அவள் மணிக்கட்டைக் கேலியாகப் பார்த்தான்.


“டோண்ட் கிட்டிங்! நீயும் லவ் பண்ணினா தெரியும்.”


பக்கென சிரித்துவிட்டு, “சரி என்னை எதுக்கு கூப்பிட்ட?” எனக் கேட்க,


“அதான்’ண்ணா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னேன்ல?” என நினைவுப்படுத்தினாள்.


“ம்ம், சொல்லு!” என்றபடி மாடி ஹாலில் போட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்துகொண்டான்.


“உன்கிட்ட நான் முன்னாடியே சொல்லிருக்கேன். உனக்கு ஞாபகம் இருக்குதோ என்னவோ!” கேட்டபடி அண்ணனருகே அமர்ந்தாள் பிரகதி.


“விஷயத்தைச் சொல்லு. ஞாபகம் இருக்குதா இல்லையான்னு பார்ப்போம்.”


“காலேஜ்ல நான் ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்தப்போ, ராகிங் நடந்ததுல்ல?”


“ம்ம்! ஏதோ ஒரு பொண்ணு மிரட்டினான்னு அழுதுட்டு வந்து நின்னியே?”


“ஹான்! அவங்களைப் பத்திதான் சொல்ல வந்தேன். மறந்துட்டியா? அன்னிக்கு ராகிங் செஞ்சது அவங்க இல்ல.”


“ப்ச்! குழப்புற ப்ரூ காஃபி! அப்புறம் ஏன் நீ அழுத?”


“நீ எல்லாத்தையும் மறந்துட்டடா! நான் அழுதுட்டு வந்து நின்னது மட்டும் ஞாபகம் இருக்குது.” என்று தன்மானம் தாக்கப்பட்டதாய் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள,


“ஷ்ஷ்! சரி இப்போ அவளுக்கென்னடி?” என்று அலுப்புடன் கேட்டான்.


“அவங்கதான் அஷ்ஷூவோட தங்கச்சியாம்! அன்னிக்கு கோவில்ல பார்த்ததும் எனக்கு கொஞ்சம் ஷாக்காகிடுச்சு.” என்று விஷயத்தைப் பட்டென்று சொல்ல,


“உன்னை அழ வச்ச பொண்ணா?”


அண்ணன் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்தவள், “நான் அழுததுலயே நிற்காதே! காண்டாவுது. அவங்க மேல எந்த தப்புமில்லை.” என,


“இப்போ அவ அவினாஷ் தங்கச்சி ஆகிட்டா இல்ல? தப்பிருக்காதுதான்.” என்றவனின் இதழில் அத்துணை ஏளனம்!


“இப்போ நான் சொல்லவா? வேணாமா?”


“சொல்லித் தொலையும்!”


தன் கல்லூரி நாட்களுக்கு அண்ணனின் கரம்பிடித்து நடந்தாள் பிரகதி. அது இவர்கள் குடும்பத்திற்கு ஏற்கனவே பரிச்சயமான கல்லூரி. அதாவது பிரபஞ்சனின் அக்கா வசுதா அங்கே ஒரு பேராசிரியராக பணிபுரிவதால், சில சந்தர்ப்பங்களில் பிரபஞ்சனோ அல்லது அக்னியோ அவரைக் கொண்டுவிட அல்லது அழைக்க போய் வந்திருக்கிறார்கள்.


அந்த மாவட்டத்திலேயே முதன்மையான கல்லூரியும் கூட! அத்துடன் பிரகதி விரும்பிய பிரிவில் இடமும் கிடைத்ததால் அங்கேயே சேர்ந்திருந்தாள். தன் அத்தை வசுதா இருக்கும் தைரியத்தில் கல்லூரியின் முதல் நாளைச் சற்று துணிவுடனே எதிர்கொண்டாள்.


அதில் நிதின் என்னும் ஒரு சீனியர் மாணவன் பிரகதியிடம், அப்போது கன்னடத்தில் வெளிவந்த திரைப்படத்தில், நாயகி நாயகனிடம் மழையில் நின்றவாறு காதலில் உருகிப் பேசுவதாக வரும் காட்சியை

அந்த நடிகையைப் போலவே நடித்துக் காட்டச் சொன்னான். 


சும்மா என்றால் நடித்துக் காட்டியிருப்பாள் இவள். அவன் தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு அவளைப் போலவே ஈர உடையுடன் நின்று பேசவேண்டும் என்று சொன்னதுதான் இவளுக்கு ஏற்புடையதாக இல்லை. அதை அவனிடமும் சொல்ல, சீனியரை மதிக்கவில்லை என்று அவன் எகிற, இவள் தன் அத்தையிடம் சொல்வதாக அவனை மிரட்ட, அப்போதுதான் அவ்விடம் வந்தாள் அவள். சனா; அவினாஷின் தங்கை. பிரகதிக்கு அப்போது அவளைத் தன் சீனியராக மட்டுமே தெரியும். 


விஷயத்தைக் கேட்டவள் அவனை விட்டுவிட்டு‍, பிரகதியை மிரட்டினாள். “அப்போ மேடம் ஹெவி ரெகமெண்டேஷனோட தான் வந்திருக்கீங்க?”


அவளின் தோரணையில் பிரகதி சற்று மிரளத்தான் செய்தாள். “ரெகமண்டேஷன்லாம் இல்ல… நான் சும்மா…”


“ராகிங்ன்னா பசங்க இப்டித்தான் நடந்துப்பாங்க. தெரியும்தானே?”


“ம்ம்!”


பிரகதியின் தோளில் கையிட்டு சற்று நகர்ந்து வந்தவள், “உன்னால செய்ய முடிஞ்சா செய். இல்லன்னா தைரியமா எதிர்த்து செய்ய முடியாதுன்னு சொல்லிட்டு போ! அதை விட்டுவிட்டு முதல்நாளே கம்ப்ளெய்ண்ட் சொல்லப் போறியே? அது அவனோட ஸ்டடீஸைப் பாதிச்சு, ஃப்யூச்சர் ஸ்பாயிலாயிடும்னு கூடவா தெரியாது? மேபீ தட்’ஸ் வாட் யூ வான்ட்?” என்று கேட்க 


“நோ! நோ!” என்று அலறிய பிரகதி, ஒரு மன்னிப்புடன் கடந்திருந்தாள். போகும்போது பின்னால் சனா தன் நண்பனைக் கண்டிப்பதும் தெரிந்தது.


பிரகதியின் கெட்ட நேரமோ என்னவோ, அன்று மாலையே மீண்டும் அவளை ராகிங் செய்த மாணவன் நிதினைச் சந்திக்க நேர்ந்தது. அது இரண்டு சீனியர் மாணவர்களுக்கிடையே நடந்த கைகலப்பு.


முதல்நாள் என்பதால் பிரகதி கல்லூரியைச் சுற்றி பார்க்கும் பொருட்டு நூலகத்தின் புறம் வர, அங்கேதான் அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அதில் மற்றவன் நிதினைக் கையில் கீறியிருந்தான். தங்களைப் பார்த்து அதிர்ந்து நின்ற பிரகதியைக் கண்டுவிட்டு ஓடியுமிருந்தான்.


நிதினுக்கோ கையில் இருந்து இரத்தம் வழிகின்றது. ஏற்கனவே மற்றவனிடம் அடிவாங்கியிருந்ததால் இன்னும் சில நொடிகளில் மயக்கத்திற்கு சென்றுவிடுவான். இவளோ அதிர்ச்சி விலகாமல் வியர்த்துப் போய் நிற்கின்றாள். அவனுக்கு முதலுதவி செய்யவில்லை என்றாலும், குறைந்தபட்சம் அவன் மயங்கி கீழே விழாமல் பிடித்திருக்கலாம். அதுதான் பிரகதி இழைத்தத் தவறு!


நூலகத்தின் பக்கமிருந்து ஒருவன் அதிவேகத்துடன் ஓடி வந்து, காரிடாரில் நடந்து செல்பவர்களை எல்லாம் தள்ளிவிட்டுக் கொண்டு ஓடியதில், அங்கிருந்தவர்களுக்கு என்னவோ ஏதோவென்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து அவர்களும் நூலகத்தின் பக்கம் வர ஆரம்பிக்க, அதில் முதலாவதாக இருந்தாள் சனா.


அவள் வந்ததும் முதலில் பார்த்தது ஏதோ காணக்கூடாத உயிரினத்தைக் கண்டதைப் போல் நின்றிருந்த பிரகதியைத்தான்! பின்னரே அவள் பார்வையைப் பின்பற்றிப் போய் தன் நண்பனைக் கண்டாள். அவன் கையில் வழிந்த இரத்த ஆற்றுடன், மயங்கி விழுந்ததால் அருகேயிருந்த பெரிய பூந்தொட்டியில் தலையை இடித்து அதிலிருந்தும் இரத்தம் வழிந்து ஓட ஆரம்பித்திருந்தது.


அதன்பின் மின்னல் வேகத்தில் நண்பனுக்கு முதலுதவி செய்து, கல்லூரித் தலைமைக்கும் தகவல் அளிக்க செய்து, அவனைக் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள். அதுவரை அவள் பின்னேயே ஏதோவொரு மரத்த நிலையில் சுற்றினாள் பிரகதி. 


நண்பனை அனுப்பிவிட்டு நிமிர்ந்த சனா, பிரகதியை ஓங்கி அறைய முனையும் கையை அடக்கிக்கொண்டு கேட்டாள். “அப்டியே விட்டிருந்தா செத்திருப்பான்ல?”


இவளிடம் ஆம் என்ற தலையசைப்பு மட்டும்!


“உன்கிட்ட ராகிங் பண்ணதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை தேவையில்லையே?” ஆழ்ந்த நிதானத்துடன் கேட்க,


அதைக் கேட்டதும் பிரகதி என்ற பொம்மை உயிர்ப்பெற்று வேகமான தலையாட்டலுடன் பேசியது. “நிஜமா என்ன பிரச்சினைன்னு கூட எனக்கு தெரியாது சீனியர். லைப்ரரி பக்கம் போகும்போது தான் ரெண்டு பேரும் அடிச்சிக்கறதைப் பார்த்தேன். எனக்கு வேற எதுவும் தெரியாது. காலைல நடந்ததை நான் எப்பவோ மறந்துட்டேன்.”


தீர்க்கமாக இட வலமாக தலையசைத்த சனா, “நிச்சயமா நீ மறக்கல! மறந்திருந்தா ரெண்டு பேரும் அடிச்சிக்கும்போதே குறைஞ்சபட்சம் ஹெல்புக்கு மத்த ஸ்டூடெண்ட்ஸைக் கூப்பிட்டிருப்ப! அதுக்கப்புறமாவது அவனுக்கு ஹெல்ப் பண்ணிருக்கலாம். அவனைப் பழிவாங்கணும்ன்னு நினைச்சதாலதான் அப்டியே க்ரூயல் மைண்ட்டோட பார்த்துட்டு நின்னுட்டிருந்திருக்க!” என்று அவளைச் சாட,


தன் மேல் சுமத்தப்படும் குற்றத்தை ஏற்கவியலாமல் தடுமாறினாள் பிரகதி. “இல்ல… நான்… பயத்துல…”


“ஷட் அப்! காலைல அவனை லெக்சரர் கிட்ட சொல்லுவேன்னு மிரட்டினவளுக்கு இப்போ பயமா?” இன்னும் அங்கே நின்றால் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் பிரகதியை அடித்துவிடுவோமோ என்று நினைத்த சனா, வேறெதுவும் பேசாமல் கண்களில் கனலைத் தேக்கி, “இனி எப்பவும் என் முன்னாடி வந்துடாதே!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு போனாள்.


பிரகதியின் இளங்கலை முதல் வருடத்தின் போது, சனா முதுகலை முதல் வருடத்தில் இருந்தாள். அந்த சம்பவத்தில் உடனேயே எதிர்வினையாற்றி அவனைக் காப்பாற்றியிருந்ததில் சனாவின் பங்குதான் அதிகம். அதனால் அவள் மீது இவளுக்கு நிரம்பவே மரியாதை உண்டு. 


அக்னிஸ்வரூபன் தன் தங்கை மேல் தவறிருப்பது புரிந்து அதைப்பற்றி மேற்கொண்டு பேச முனையவில்லை. “சரி விடுடா! இத்தனை வருஷத்துக்கப்புறம் இன்னுமா அவ அதை ஞாபகம் வச்சிட்டிருக்கப் போறா?”


“அவங்களோட மெமரி பவர் அண்ட் க்ளவர்னெஸ் பத்தி உனக்கு தெரியாது அக்னி. ஷி ஹாஸ் அ ஷார்ப் பிரசென்ஸ்! சில புரஃபஸர்ஸ் கூட புத்திசாலித்தனத்துக்கு உதாரணமா சொல்லணும்னா, அவங்களைத்தான் சொல்லுவாங்க.”


“சரி, இப்போ அவ மறுபடியும் உன்னை மிரட்டுறாளா என்ன?”


“ச்சச்ச! இல்லை. என்மேல பழைய கோபம் எதுவும் இருக்கற மாதிரி தெரியலை. என்கிட்ட அதைப் பத்தி பேசவுமில்லை. மேபீ அவங்க அண்ணனுக்கு என்னைப் பிடிச்சதால இருக்கலாம்.” அன்று கோவிலில் சனா சொன்னதை மனதில் வைத்து சொல்ல,


“யாரா இருந்தாலும் இத்தனை வருஷம் கோபத்தைப் பிடிச்சு வச்சிட்டு இருக்கமாட்டாங்கதான்.” என தன் அபிப்பிராயத்தைச் சொன்னவன், கேட்டான்.  “இதுல உனக்கு வேறென்ன பிரச்சினை ப்ரூ காஃபி?”


“இல்ல… நான் அன்னிக்கு அப்டி உயிருக்கு போராடற ஒருத்தருக்கு சின்ன ஹெல்ப் கூட பண்ணாம இருந்தேன்னு… அவங்க அஷ்ஷூ கிட்ட சொல்லிட்டா… அவர் என்னைப் பத்தி தப்பா நினைக்கமாட்டாரா அக்னி?” தவிப்பாய்க் கேட்கும் தங்கையைச் சமாதானம் செய்தான் அக்னி.


“இல்லடா. க்ளவர்னெஸ், ஹெல்பிங் மைண்ட்ன்னு இவ்ளோ நேரம் அவளைப் பத்தி நல்ல விதமாதானே சொன்ன? அப்டிப்பட்ட பொண்ணுக்கு இந்த மாதிரி வத்தி வைக்கற சின்னப்புத்தி இருக்காதுடா. அப்டியே சொன்னாதான் என்ன போச்சு? நீ வேணும்னே அப்டி இருக்கலைன்னு சொல்லு. உன்னோட அவினாஷ் உன்னைப் புரிஞ்சிக்க மாட்டானா என்ன?”


“ம்ம்… நான் அன்னிக்கு இருந்த என் நிலைமையை முழுசா சொன்னா புரிஞ்சுப்பார்.” 


“அப்புறம் ஏன் உன் முகம் இன்னும் டல்லா இருக்குது?”


“அது சந்தனாதான்… அவங்க கோபப்படலைன்னாலும் ஒரு விஷயம் பிடிக்கலைன்னா லாஸ்ட் வரை ஒதுக்கி வச்சிடுவாங்க. அதான் என்னையும் லாஸ்ட் வரை ஒதுக்கி வச்சிடுவாங்களோன்னு கவலையா இருக்குதுண்ணா.”


முதலில் கல்லூரியில் குற்றவுணர்வில் சந்தனாவிடம் நல்ல பெயர் எடுத்துவிட வேண்டி அவளைத் தொடர ஆரம்பித்தவளுக்கு, ‘இனி எப்பவும் என் முன்னாடி வந்துடாதே!’ என்ற உஷ்ணம் கக்கும் கண்கள் நினைவு வந்து, அப்படியே பம்மிவிடுவாள்.


அந்த இரு வருடங்கள் முழுவதும் அதுவே தொடர்கதையாகிப் போனது. “சீனியர் சனாவை சைட்டடிக்கறியாடீ?” என்று இவள் தோழிகள் கேட்குமளவிற்கு சந்தனாவைத் தேடி ஓடி, பார்வையால் தொடர்ந்திருக்கிறாள். அவளின் நேர்மறையான குணாதிசயங்கள் கண்டு அவளிடம் பேச ஆசை வரும். ஆனால் இதுவரை பேசியதில்லை.


தங்கை சொன்னதைக் கேட்ட அக்னிஸ்வரூபனுக்கு அவள் சொன்ன பெயரிலேயே சிந்தனை நின்றுவிட்டது. “பிரகதிம்மா… அவ… அவ முழுப்பேர் என்ன?” முயன்று சாதாரணம் போல் கேட்டான்.


“சந்தனா! எல்லாரும் ‘சனா’ன்னுதான் கூப்பிடுவாங்க.”


அந்த சந்தனம் அக்னிக்குள் ஜூவாலையை மூட்டியது.


இசைக்கும்...

Comments

  1. ஓகோ... சனாதான் சந்தனாவா..
    அப்பறம் சனாக்கு பிடிச்ச அருண்.. அருண் ஐஸ்கிரீம்தான!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25