கருவறை கீதம் -16

 


அத்தியாயம் 16


வருடம் 2012


“அவங்க தேட மாட்டாங்க. என்னை வித்துட்டாங்க!” என்ற சஞ்சயின் வார்த்தைகளில் அறையிலிருந்த மற்ற மூவருக்கும் நிரம்ப அதிர்ச்சிதான்!


சற்று பிசகினாலும் விடயம் சிக்கலாகிவிடும் என்று புரிந்த பிரபஞ்சன் தன்னை நிலைபடுத்திக்கொண்டு சின்னவனுக்கு நம்பிக்கை வரும்படி பேசினான். 


தொண்டையைச் செருமிக்கொண்டு, “சரி, இனி நீ எதுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம போலீஸைக் கூட்டிட்டு போய் உங்க வீட்டுல பேசலாம். இந்த லிட்டில் சாம்ப் தான் இனி வீட்டோட ப்ரின்ஸ்! அவனை யார்க்கிட்டேயும் விற்க முடியாது அப்டின்னு போலீஸ் மிரட்டிடுவாங்க. அப்புறம் யாரும் உன்னை அசைக்க்க முடியாது. ம்ம்?” என்று நீட்டி முழக்கி பேசி சிரிக்க,


இத்தனை நேரம் உன் முகத்தைப் பார்த்ததே களைப்பாக இருக்கிறது என்பது போல், மீண்டும் நிரஞ்சனாவின் வயிற்றிற்கு தன் பார்வையைத் திருப்பிக் கொண்டவன் கேட்டான். “உங்க வயித்துக்குள்ளே இருந்து வர்றதுனாலே இந்த பாப்பா உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்தானே?”


அவன் பாஸ்கரனின் வித்தல்லவா? வயிறு வேறாக இருந்தாலும் கலியபெருமாளின் குலம்தானே? உருவத்தில் சற்றே பாஸ்கரனையும் பண்பில் அனுவையும் கொண்டிருந்தவன், அழுத்த குணத்தில் துல்லியமாக தாத்தாவைக் கொண்டிருந்தான்.


அவன் செயலில் சின்னதாய்க் கோபமெழுந்தாலும் அவன் கேள்வியில் மீண்டும் ஸ்தம்பித்தான் பிரபஞ்சன். 


“குழந்தைன்னாலே ஸ்பெஷல்தானே? எப்டி வந்தாலும் எனக்கு பிடிக்கும்.” -நிரஞ்சனா.


“சாக்கடைல இருந்து வந்தா கூட பிடிக்குமா?”


நிரஞ்சனாவுக்கும் அபிராமிக்கும் லேசாக கண்ணீர் துளிர்த்துவிட்டது.


“ஏண்டா கண்ணா இப்டியெல்லாம் கேட்கற? எல்லா குழந்தையும் அம்மா வயித்துல இருந்துதான் வரும்.” என்ற அபிராமியின் கூற்றில் அவரிடம் திரும்பியவன், இல்லையென்று இடம் வலமாகத் தலையசைத்தான்.


யாரோ அவனைப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் குழந்தை மனதைக் குற்றுயிராக்கி வைத்திருக்கிறார்கள் என்று அவதானித்த நிரஞ்சனா சொன்னாள். “பாட்டி சொல்றதுதான் நிஜம். நாம எல்லாரும் அம்மா வயித்துல இருந்துதான் வருவோம்.”


மீண்டும் இல்லையென்ற தலையாட்டல்!


அவன் அனுவின் வயிற்றில் இருந்து வரவில்லை என்பது அவனுக்கு அடித்து அடித்து போதிக்கப்பட்டிருக்கும் பாடமல்லவா! அனுவே அவன் கேள்விகளின் முன் எத்தனையோ முறை தோற்றுப் போயிருக்கிறாள்.


பிரபஞ்சன் முறைப்பதையும் மீறி அவன் கன்னம் பற்றி முத்தம் வைத்து சொன்னாள் நிரஞ்சனா. “சரி, நீ நம்ப வேண்டாம். ஆனா உன்னை எங்க எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சிருக்குது.”


அம்மா, அப்பா, அவனின் அத்தை மகள் சந்தனமாரியைத் தவிர்த்து முதன்முறையாக, அவன்மேல் எந்த துவேஷமும் இல்லாத முற்றிலும் வேறொரு நபரிடம் இருந்து முத்தம் பெறுகிறான். திராட்சைக் கண்கள் நீரில் மிதக்க ஆரம்பித்தது. நிரஞ்சனாவின் வயிற்றில் தலைசாய்த்து கொண்டான். அவன் கத்தி அழவில்லை. என்னவோ ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைத்திருந்ததைப் போல் விசும்பல் ஒலி மட்டும் வந்து கொண்டிருந்தது. அப்போது அவனிடம் வெளிப்பட்ட பெரிய மனித தோரணையைக் கண்டு மற்ற மூவருக்குமே மனதைப் பிசைந்தது.


தன் மனைவியின் வயிற்றில் தலைசாய்த்து நின்ற அந்த சின்னக் குருத்தை வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுக்க, பிரபஞ்சனுக்குமே மனம் வலித்தது. ஆனால் நேரம் போய்க் கொண்டிருக்கிறதே!


“போகலாம். வா!” என்று அவன் கைப்பிடிக்க,


கையை உருவிக்கொண்டவன், “நானே போயிடுவேன்.” என்று வெளியேற பார்க்க,


அவனைப் பாய்ந்து தூக்கிக்கொண்டான் பிரபஞ்சன். “எங்கேடா போற?”


அவனிடம் மௌனம்.


இந்த அழுத்தமும் மௌனமும் மட்டும் அவனை மற்ற குழந்தைகளிடமிருந்து தனித்துக் காட்டியது.


“தனியா போனா மறுபடியும் பூச்சாண்டி வாயை மூடித் தூக்கிட்டு போயிடுவான்!” என்று கண்ணை உருட்டி சொல்ல,


‘தாத்தாவுடன் வந்தபோது கூட தான் பூச்சாண்டி வாயை மூடித் தூக்கினான்!’


“நான் தப்பிச்சு ஓடிடுவேன்.” என்றான்.


நிரஞ்சனா கைப் பிசைந்து நிற்க, இப்போது அபிராமி சொன்னார். “பிரபு, எங்கேயோ போய் கஷ்டப்படப் போற பிள்ளை நம்மளோட இருந்தா என்னடா?” 


அவருக்கு மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிந்த பிறகும் அந்த குழந்தையை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லை‌.


சஞ்சய்யைப் பெண்கள் உணர்வு ரீதியாக அணுக, பிரபஞ்சன் சட்ட ரீதியான சிக்கல்களைப் பற்றி சிந்தித்தான். “அம்மா, இதுல எவ்ளோ சிக்கல் இருக்குதுன்னு புரியாம பேசிட்டிருக்கீங்க! இவனை மாதிரி ஒரு நாளைக்கு எவ்வளவோ குழந்தைங்க காணாம போறாங்க தெரியுமா? அவங்களையெல்லாம் நம்மளோட வச்சிக்க முடியுமா?”


நிரஞ்சனா, “அவங்க எல்லாம் இவனை மாதிரி நம்ம கைல கிடைக்கலன்னு சொல்லுங்க அத்தை!” என்றாள் ஊடலுடன்.


“ரஞ்சி!”


“நாம குழந்தைக்காக தவிச்சிட்டிருந்தப்போ கூட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க நமக்கு தோணலை. அதுக்கு பிராயச்சித்தமாவாவது இவனை என் பிள்ளையா தத்தெடுத்துக்கறேன்ங்க!”


பிரபஞ்சன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். “பார்த்து ஒரு மணிநேரம் கூட ஆகல. அதுக்குள்ள என் அம்மாவும் பொண்டாட்டியும் உனக்காக என்கிட்ட வாதாடிட்டு இருக்காங்கடா! பின்னாடி ஒளிவட்டம் எதுவும் வச்சிருக்கியா என்ன?” என,


சட்டென தனக்கு பின்னால் திரும்பிப் பார்த்தான் குழந்தை. அதில் மற்றவர்களுக்கு சிரிப்பு வர, “ஒளிவட்டம் மீன்ஸ்?” எனக் கேட்டான்.


“ஃபயர்!” - நிரஞ்சனா.


பிரபஞ்சனுக்கும் குழந்தை மேல் அனுதாபமும் ஆசையும் இருந்ததுதான். ஆனால் சட்டம் என்ன சொல்லும்?


“யோசிக்காதே பிரபு! நீ சட்டத்தை நினைச்சுதானே தயங்குற? மாப்பிள்ளைக்கு ஃபோன் போடு. நான் பேசறேன்.” 


பிரபஞ்சனின் விழிகள் பிரகாசமானது. இது ஏன் தனக்கு தோன்றவில்லை? இவனின் அக்கா வசுதாவின் கணவன் கண்ணன் பெங்களூருவில் பிரபல கிரிமினல் வக்கீல்! அவரிடம் சொன்னால் காரியம் முடிந்தாற் போல்தான்! உடனேயே அழைத்து அவரிடம் விபரம் சொன்னான். அபிராமியும் பேசினார்.


அனைத்தையும் செவிமடுத்த கண்ணன், “நீ என்ன நினைக்கற பிரபு?” என்று கேட்க,


“எனக்கும் அப்டியே விட்டுட மனசில்லைதான் மாமா… ஆனா நாளபின்ன ஏதாவது பிரச்சினை ஆச்சுன்னா…” என தயங்கினான்.


“நீ கூட்டிட்டு வா பிரபு. பார்த்துக்கலாம்.” என்று கண்ணன் உத்தரவாதம் கொடுத்த பின்புதான் சஞ்சய்யை தங்களோடு பெங்களூருக்கு அழைத்துச் செல்ல முழுமனதுடன் ஒத்துக்கொண்டான் பிரபஞ்சன்.


விடுதியில் யாரும் பார்க்கும் முன்பு சஞ்சய்யை அபிராமியுடன் காரில் அமர வைத்துவிட்டு தான், அறையைக் காலி செய்து ஏனைய நடைமுறைகளை முடித்து வந்தான். அதன்பின் அனைத்து காரியங்களும் ஜரூராக நடந்தன. 


கண்ணன் முதல் வேலையாக பெங்களூரில் அவர் எப்போதும் நன்கொடை வழங்கும் ஆசிரமம் ஒன்றில் தலைமை நிர்வாகியிடம் நேரில் சென்று பேசினார். கண்ணனின் செல்வாக்கின் பேரில், சஞ்சய் வழி தவறி ஆசிரமத்திற்கு வந்த குழந்தை என்று பதிவு செய்யப்பட்டது. தேதியை மட்டும் மாற்றி ஒரு வருடத்திற்கு முன்பே வந்தாற் போல் எழுதிக்கொண்டார்கள். ஏனெனில் குழந்தையில்லா தம்பதிக்குதானே தத்துக் கொடுப்பார்கள்? நிரஞ்சனா தற்போது கர்ப்பமாக இருக்கிறாளே?


ஆக அவன் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த இரு மாதங்களில் - அதாவது நிரஞ்சனா கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே, பிரபஞ்சன் - நிரஞ்சனா தம்பதியர் குழந்தையின்மையின் பொருட்டு அவனைச் சட்டப்படி சுவீகாரம் செய்துகொண்டதாய்ப் பதிவு செய்தார்கள்.


இதில் பிரபஞ்சன், குழந்தையின் வீட்டிலிருந்து யாரேனும், எப்போது தேடி வந்தாலும் அவர்களுடன் அவனை முழுமனதுடன் அனுப்பி வைக்கவேண்டும் என்று நிரஞ்சனாவிடமும் அபிராமியிடமும் சத்தியம் வாங்கிக்கொண்ட பின்னர்தான் கண்ணனின் திட்டத்திற்கும் சஞ்சயின் சுவீகரிப்பிற்கும் ஒத்துக்கொண்டான்.


“உன் பேரென்ன?” என்று ஆசிரமத்திலும், கண்ணன், பிரபஞ்சன் என்று மற்றவர்களும் ஒவ்வொரு விதத்தில் கேட்ட போதிலும் கூட மௌனம் சாதித்தான் சஞ்சய்.


அவனுக்கு ஊரையும் பேரையும் சொன்னால் அனு செத்துப் போவாள் என்று தாத்தா சொன்னதே ஆழமாக பதிந்திருந்தது. அனு மட்டுமல்ல; இவனும் கூட அவள்மேல் கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கிறானே! இவனின் ‘தங்க அம்மா’ அவள்! தினம் தாத்தாவிடம் இவனுக்காக சண்டையிட்டு, அவரிடமிருந்து இவனை ரட்சிக்கும் தேவதை அம்மா!


“கமான் ஓப்பன் அப், மை பாய்!”


“ஃபயர்!” என்றான்.


“வாட்?”


“ஒளிவட்டம் மீன்ஸ் ஃபயர். ஐ ஹாவ் அ ஒளிவட்டம். சோ மை நேம் இஸ் ஃபயர்.”


அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் விழித்தார்கள் பெரியவர்கள். ஆனால் அபிராமி அவனை ஊக்குவித்தார். “கற்பூர புத்திடா இவனுக்கு! நிரஞ்சனா சொன்னதை என்ன அழகா ஞாபகம் வச்சிருக்கான்! அவன் சொல்ற பேரையே நாம வச்சா என்ன?”


“அம்ம்மா!”


“நீங்க அக்னின்னு எழுத சொல்லுங்க மாப்பிள்ளை. இவன் மனசும் நாம நெருங்க முடியாதபடி அக்னி ஸ்வரூபமா தானே இருக்குது?”


“சோ, அக்னிஸ்வரூப்?” என்று அந்த நிர்வாகி கேட்க, அந்தப் பெயரே பதிவேட்டில் நிலைத்தது. அன்றிலிருந்து, ‘சஞ்சய் பாஸ்கர்’ ‘அக்னிஸ்வரூப் பிரபஞ்சன்’ ஆக மாறினான்.


ஈரம் கப்பிய மண்ணில் புதிதாய் உதிர்ந்த பூவை யாரும் மிதித்து மண்ணுக்குள் புதைக்கும் முன், பூவுக்கு நோகாமல் எடுத்து இறைப் பூஜையில் சேர்த்தாற் போல், சஞ்சய்யை அக்னியாக தங்கள் வாழ்வில் இணைத்துக் கொண்டனர் அம்மாமனிதர்கள்!


அக்னிஸ்வரூபனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பின்னர் மாமியாருக்கும் மருமகளுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடனே நாட்கள் கழிந்தன. பிரபஞ்சனுமே மனம் லேசாக உணர்ந்தான். தங்கள் மகனைப் பள்ளியில் சேர்த்தனர். ஆரம்பத்தில் கன்னடம் பயில சிரமப்படவே செய்தான். 


அக்னியிடம் யாரும் அவனின் கடந்த காலத்தைப் பற்றி கேட்பதில்லை. ஆனால் அவனின் ‘அம்மா வயிற்றிலிருந்து’ வரும் பாப்பா குறித்த கேள்விகளும், அதனால் அம்மா அனுபவிக்கும் வலிகள் குறித்த கேள்விகளும் தொடர்ந்து கொண்டே இருக்க, இது நல்லதிற்கில்லை என்று மனோதத்துவ நிபுணர் ஒருவரிடம் அழைத்துப் போனான் பிரபஞ்சன்.


அங்கே அவர் அவனுடன் விளையாடியவாறே, சிறு சிறு கேள்விகள் கேட்டார். ‘தான் சாக்கடையில் இருந்து வந்தவன்’ என்பதை சொல்ல,


‘அப்படி சொன்னது யார்?’ என்று கேட்டதற்கு, ‘தாத்தா, பாட்டி, சித்தி பாட்டி, அத்தை’ என்ற பதில் கிடைத்தது.


‘தாத்தா பெயரென்ன?’ என்று கேட்கப்பட்டதில் சுதாரிப்பிற்கு வந்தவன், அதன் பின்னர் எந்தக் கேள்விக்கும் வாய் திறக்கவில்லை.


அவனைத் தூங்க வைத்து விவரங்கள் சேகரித்து தருவதாக மருத்துவர் சொல்ல, பிரபஞ்சன் மறுத்துவிட்டான். “வேணாம் டாக்டர். அவன் எனக்கு பிறந்திருந்தா எப்டி வளர்ப்பேனோ அப்டியே வளர்க்கத் தான் ஆசைப்படறேன். என் வளர்ப்பு அவனோட கடந்த காலத்துக்கு மருந்து போடறதா இருந்துட வேணாம்.”


“சரி, நெக்ஸ்ட் சிட்டிங்ல ஏன் இந்த மாதிரி தான் அம்மா வயித்துல இருந்து வரலைன்னு சொல்றான்னு கேட்போம்.”


ஆனால் அடுத்த முறை அவரிடம் செல்கிறோம் என்றதையறிந்து ஓடிப்போய் அபிராமியைக் கட்டிக் கொண்டான்.


“நல்லா காக்கா பிடிக்க தெரிஞ்சிருக்குதுடா அக்னி.”


“இனி நான் பாப்பா பத்தி கேட்க மாட்டேன்ப்பா. ப்ளீஸ் டாக்டர் வேணாம்.” என்றதில், அவனின் கொஞ்ச நஞ்ச மன வெளிப்பாடுகளையும் முடக்கிவிட்டோமோ என்று நொந்துபோனான் பிரபஞ்சன். 


நாட்கள் செல்லச் செல்ல அக்னியின் குணம் அவர்களுக்கு பிடிபட்டது. ஒரு விடுமுறை நாளில் நிரஞ்சனாவிற்கு இடுப்பு வலியெடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, விடுமுறை என்பதால் அக்னியைத் தனியே விடாமல் அவனையும் அழைத்துச் சென்றிருந்தனர். கிட்டத்தட்ட ஐந்து மணிநேரங்கள் போராடி, பிரகதியைப் பிரசவித்தாள் நிரஞ்சனா. அதுவரை அவளின் வலிக்குரலை வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்தான் அக்னிஸ்வரூபன்.


‘இவ்ளோ வலிக்கும்ன்னு தான் அம்மா (அனு) என்னை அவங்க வயித்துல பெத்துக்கலயா?’ என்ற கேள்வியும் கோபமும் அவன் மனதில் அழியா இடத்தைப் பிடித்துக்கொண்டது.


நிரஞ்சனா அக்னியைத் தன் வயிற்றில் பிறந்த மகனாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டாள். புத்திர பாக்கியத்திற்காக ஏங்கிய நிரஞ்சனாவின் கண்ணீர் நாட்களைப் பார்த்தவர்களாதலால், வசுதா, கண்ணன், நிரஞ்சனா குடும்பத்தினர் என மற்ற அனைவரும் கூட பட்சபாதமின்றி அவனைத் தங்களுக்குள் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்கள். சுற்றியுள்ள சொந்தங்களுக்கு தத்துப் பிள்ளை; இனி எங்கள் பிள்ளை என்றே சொல்லப்பட்டது.


பிரபஞ்சன் சொன்னாற் போல் யாரும் அக்னியைத் தேடி வந்துவிடுவார்களோ என்று அபிராமிக்கும் நிரஞ்சனாவிற்கும் ஓர் பதைப்பு அடி மனதில் இருந்துகொண்டே இருந்தது. ஒரு வருடமான பின்னரும் அவனைத் தேடி யாரும் வரவில்லை என்ற பின்னர்தான் அப்பதைப்பு சற்று மட்டுப்பட்டது‌.


வருடம் 2034


“அத்தை என்னை நினைச்சு ரொம்ப கவலைப்படறாங்க அஜூ!” இடக் காதிலிருந்த ப்ளூடூத்தைச் சரிப்படுத்தியவாறே பேசினாள் சந்தனா.


மறுபுறத்தில் அர்ஜூன். “ம்ம்! நேத்து ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிட்டாங்க. நானும் அப்பாவும் டேப்லெட் கொடுத்து தூங்க வச்சோம். அதான் காலைலயே உன்கிட்ட பேசிருப்பாங்க.”


“ஆமா, அவ்ளோ காலைல கூப்பிட்டதும் என்னவோ ஏதோன்னு நினைச்சு பயந்துட்டேன்.”


“நீ பயப்படறளவுக்கு நத்திங் சீரியஸ்! நீ கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டா ஷி வில் பீ ஆல்ரைட்!”


“அஜூ!”


“சரின்னு சொல்லு சனா! இன்னும் எவ்ளோ நாள் இப்டியே இருக்கறதா ஐடியா?”


“அதை அப்புறம் பார்க்கலாம். நீ என்னடா அன்னிக்கு ஏதோ கண்டுபிடிச்ச மாதிரி சீன் போட்ட? நானும் அத்தை முகத்துல கொஞ்சம் சந்தோஷத்தைப் பார்த்துடலாம்ன்னு நினைச்சேன்.”


“சீக்கிரமே பார்ப்போம். அத்தானும் ஹெல்ப் பண்றார்தானே?” என்று பட்டும் படாமல் பதிலளித்தான் அர்ஜூன்.


“ஓகே அஜூ. இன்னிக்கு எனக்கு வெளியே வேலை இருக்குது. ஈவ்னிங் வீட்டுக்கு போயிட்டு வீ.சி (video call) வர்றேன். முடிஞ்சா இந்த வீக் எண்ட் வந்து அத்தையைப் பார்க்கறேன்.”


“டோண்ட் திங்க் ட்டூ மச் சனா! அம்மாவை நானும் அப்பாவும் பார்த்துப்போம். அவி அத்தான் டெய்லி வர்றார். நோ நீட் ட்டு வொர்ரி.”


அவள் பேசி விட்டு வைக்க, இத்தனை நேரம் அவள் முன் நேரமாகிவிட்டது என செய்கைக் காட்டிக் கொண்டிருந்த பெண் இப்போது சந்தனாவிடம் காய்ந்தாள். “இஸ்ட்டு காயப்பேக்கு? (எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது)” 


அவள் அபிந்தா. கன்னடப் பெண். 

இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். பல ப்ராஜெக்ட்களை ஒன்றாக செய்திருந்ததால் இருவருக்குமிடையே நல்ல நட்பும் இருந்தது.


“கம்மிங்! அதுக்காக பேக்குன்னுலாம் திட்டாதேடி” என்ற சந்தனா அவளுடன் சேர்ந்து நடந்தாள்.


                          *******


பிரகதியின் திருமணத்திற்கு தன் நிறுவனம் மற்றும் பிரபஞ்சனின் நிறுவன ஊழியர்களுக்கு புத்தாடைகள் வாங்க வேண்டும் என்று பெங்களூருவின் பிரபல ஆடையகத்தை அணுகியிருந்தான் அக்னிஸ்வரூபன். அவர்கள் தங்கள் தொழிற்சாலைக்கே நேரில் வந்து துணி ரகங்களைப் பார்த்து தேர்ந்தெடுக்கலாம் என்று சொன்னதால், உதவியாளர் ஒருவரை மட்டும் அனுப்ப நினைத்தவன், என்ன நினைத்தானோ அவரை அழைத்துக்கொண்டு அவனும் புறப்பட்டுவிட்டான்.


அக்னியின் தேர்வுகள் எப்போதும் தனித்தும் தரத்துடனும் இருக்கும் என்பதால் வீட்டிலும் அவனையே போக சொல்ல, பெங்களூரின் ஓர் இளவெயில் பொழுதில் ஊரை விட்டு தள்ளி தூரத்திலிருக்கும் அந்த பிரபல கார்மெண்ட்ஸிற்கு வருகை தந்திருந்தான். அங்கே முதல் தளத்தில் கட்டு கட்டாய் பல வண்ணங்களில், விற்பனைக்கு செல்லும் துணிகள் மூட்டைக் கட்டப்பட்டிருக்க, தனது தேவைகள் பற்றி சொல்லி திருப்திகரமான மாதிரிகளைத் (samples) தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டு, எண்ணம் (nos), அளவுகள், விலைகள் பற்றிய விவரங்களை தன் உதவியாளரைப் பார்த்துக் கொள்ளும்படி பணித்துவிட்டு படிகளின் வழி கீழிறங்க, படிகளுக்கு எதிர்ப்புறத்திலிருந்த லிஃப்டின் கதவுகள் திறந்து வெளியே வந்தாள் சந்தனா.


சந்தனா பணிபுரியும் நிறுவனம் அந்த கார்மெண்ட்ஸுடன் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் பொருட்டு, துணிகளின் தரம், உற்பத்தி செயல்முறை வடிவமைப்பு, அவர்களின் தேவைகள் குறித்து பேச அங்கே வந்திருந்தாள் அவள். இவன் மேல்தளத்தில் துணிகளைப் பார்க்க போயிருந்த நேரத்தில், அவள் அடித்தளத்தில் தன் வேலைகளை முடித்துக்கொண்டு வந்தாள்.


இருவரும் இந்த சந்திப்பை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை விழிகளில் வெளிப்படுத்தினர். சந்தனாவிற்கு ஏனோ ஆரம்பத்திலிருந்தே அக்னியிடம் ஒரு தயக்கம் இருந்தது. அவன் பெயரைச் சொல்லி அழைப்பதில் கூட ஒரு தடுமாற்றம்! விளக்கமுடியா ஓர் உணர்வு!


“ஹாய்!” என்றாள் மரியாதை நிமித்தமாக!


பரபரப்பில்லாத இவன் குரல் மெல்லிய ஆச்சரியத்துடன், “ஹேய்!” என்றது.


இவன் குரல் ஏன்தான் 

இவளை இம்சிக்கிறதோ!


“இங்கே…” என்று அவள் இழுக்க,


“கல்யாணத்துக்கு நம்ம வொர்க்கர்ஸ் எல்லாருக்கும் துணி எடுத்து தரணும்னு அப்பா சொன்னார். அதான் இங்கே!” என்றவனின் கண்களின் கேள்வியை உணர்ந்து,


“எனக்கு டெஸ்க் வொர்க் கிடையாதே! சோ, இன்னிக்கு டிஸைனிங், இம்ப்ளிமெண்ட்டிங்ன்னு இங்கேதான் வேலை!” என்று சொன்னாள்.


“ஓ! முடிஞ்சதா?”


“ஆல்மோஸ்ட்!”


பேசியபடி இருவரும் வரவேற்பறை போல் இருந்த இடத்திற்கு வந்திருந்தனர். 


“ம்ம்… கேன் ஐ கிவ் யூ ரைட்?” என்ன பேசுவது என்று தெரியாமல் அவன் கேட்க,


“ஓ தாங்க்ஸ்! ஆனா நான் கோ வொர்க்கர் கூட வந்திருக்கேன்.” என்று திரும்பி, கண்ணாடி கேபினுக்குள் உற்பத்தி மேலாண்மை குறித்து உற்பத்தி பிரிவு தலைவரிடம் பேசியபடி ஏதோ தனது மடிக்கணினியில் குறித்துக் கொண்டிருந்த அபிந்தாவைப் பார்த்துவிட்டு மீண்டும் இவளிடம் திரும்பினாள். “என் ஃப்ரெண்ட்தான்! அவ டூவீலர் வச்சிருக்கா! தாங்க்ஸ் அகெய்ன்.”


அவள் அபிந்தாவைப் பார்க்கத் திரும்பிய இரு நொடிகளில், அவள்மேல் இவன் கண்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணித்திருந்தது.


அடர் ஊதாநிற காலர் வைத்த, கலம்காரி ஷார்ட் குர்தி அணிந்திருந்தாள். உடையில் பூவின் இதழ் போல் வெட்டப்பட்டிருந்த முன்பக்கக் கழுத்து, அவளின் சந்தன வண்ண வெற்றுக் கழுத்தைப் பளிச்சென்று காட்டியது.


இவன் வாங்கித் தந்த சங்கிலியை அவள் அணியவில்லை‌ என்ற சுணக்கம் வந்த போதும், இவன் ஆண்மையை ஈர்க்கும் அந்த வெற்றுக் கழுத்து, வந்த சுணக்கத்தை விரட்டியடித்தது. அவள் பார்க்கும் முன் பட்டென்று பார்வையை அவள் கண்களுக்கு நிமிர்த்தியிருந்தான்.


‘எந்தப் பொண்ணையாவது கண்ணை விட்டு வேற எங்கேயும் பார்த்திருக்கியாடா அக்னி? உன் அத்தை மவகிட்ட மட்டும் ஏன் இப்டி மண்ணைக் கவ்வுற?’ என்ற மனசாட்சியின் கேள்வியில் சற்றே குற்றவுணர்வு கூட தோன்றியது.


கூடவே அவளைப் பார்க்கும் போதெல்லாம், ‘சின்ன வயசுலயே அருணுக்குத்தான்…’ என்ற குரல் வேறு அவனை ஏகத்துக்கும் எரிச்சலில் ஆழ்த்தியது.


அவளின் பதிலுக்கு இவன் தலையசைக்க, “ஆன்ட்டி, பிரகதி எல்லாம் எப்டி இருக்காங்க? பாட்டி?” எனக் கேட்டாள். 


வெறும் மரியாதை நிமித்தமாக மட்டுமே அவள் இவனுடன் பேசுவது வேறு அக்னிக்குள் எரிந்தக் கங்குகளை இன்னும் விசிறிவிட்டது. அர்ஜூனுடன் இவள் தோள்கள் எப்படி பசைப் போட்டது போல் ஒட்டியிருந்தது என்பதையும் அவனுடன் சிறு பிள்ளைக் குணத்துடனும் விளையாடுவதையும் பார்த்திருக்கிறானே? 


உள்ளுக்குள் தகிக்கும் அத்தனை உணர்வுகளையும் அடித் தள்ளி அமிழ்த்திவிட்டு, இவனும் மரியாதை புன்னகையுடனே சொன்னான். “நல்லா இருக்காங்க.”


ஆனால் அதிக நேரம் அப்படியே இருந்துவிட முடியாது என்பதால், அவள் அடுத்த கேள்வி கேட்க வரும் முன், “ஓகே, யூ கேரி ஆன் சந்தனா. கட்டா கோ!” என விடைபெற்றுக் கொண்டு புறப்பட,


வேலை முடிந்து சந்தனாவை நோக்கி வந்தாள் அபிந்தா. இருவரும் பேசிக் கொண்டிருந்ததை வரும்போதே பார்த்திருக்க, “இவர்தான் நீ சொன்ன உன்னோட பாய் ஃப்ரெண்டா சனா? யூ ஆர் ஸோ லக்கி! ஹீ இஸ் டும்பா ஹேண்ட்சம்! ” என்ற அபிந்தாவின் ஆர்ப்பாட்டமானக் கன்னட குரலும்,


“மூச்சிபிடு! (வாயை மூடு)” என்ற சந்தனாவின் அதட்டல் குரலும் காரை நோக்கி நடந்து கொண்டிருந்த அக்னிக்கு அட்சர சுத்தமாகக் கேட்டது.


திரும்பி சந்தனாவின் முக பாவத்தை அவதானிக்க சொன்ன மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவன் நடக்க, வழியனுப்பும் பண்பின் பொருட்டு அவனுடன் கார் வரை வந்தாள் அவள்.


இப்போது அவனும் மரியாதைக்காக அவள் முகம் பார்த்தே ஆகவேண்டும். பார்த்தான். அவள் முகம் இயல்பாகவே இருந்தது. கண்ணைத் தொடாத சிரிப்பொன்றை உதிர்த்து, தலையசைத்துவிட்டு காரில் ஏறி பறந்துவிட்டான்.


இப்போது அவளுக்கு ஒரு ‘பாய் ஃப்ரெண்ட்’ இருப்பது உறுதியாக தெரிந்துவிட்டது. ஆத்திரம் தலைக்கேறியது. அன்று அவள் ‘அருண்’ என்று சொன்னபோது கூட, ‘நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்’ என்ற ரீதியில் நகர்ந்தவனுக்கு, அவள் தன் அத்தை மகள் என்று தெரிந்ததும் உரிமை வந்து தொலைத்ததாலோ என்னவோ, ‘அவன்’ அர்ஜூனோ அருணோ, எவனாக இருந்தாலும் இவள் தனக்கில்லை என்ற சினம் இவனின் ‘சிங்கிள்’ நிலையை வெகுவாக சீண்டியது.


இவனை வேறு அந்த அத்தைக்கு பிடிக்காது. இவனுக்கும் சதா இவன் அம்மாவைத் திட்டும் அவரைப் பிடிக்காது. ஆனால் அவர் மகளை மட்டும் இத்தனை தூரம் இவன் மனம் சொந்தம் கொண்டாடலாமா?


காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, ‘கண்ட இடத்தையும் பார்க்க வச்சு, மனுஷனைக் கேடுகெட்டவனா மாத்திட்டு இருக்கா! இனி அந்த மாரியாத்தா பக்கம் கண்ணு போச்சு…’ என்று தன் மனதைக் கட்டுக்குள் வைக்க முயன்றான்.


முடியவில்லை. ஆரவாரமாய் நெஞ்சுக்குள் புகுந்துகொண்டு தகராறு செய்கிறாள்.


‘பிரகதி கல்யாணம் முடியற வரைக்கும் அமைதியா இருடா அக்னி!’ 


‘அதன்பின்னர்?’ என்று கேள்வி கேட்டது மனம்!


திருமணம் முடிந்தால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடுமா என்ன? 


தீயென தெரிந்தும் அடி நானே…

திரும்பவும் உனைத் தொட வந்தேனே…

தெரிந்தே சுகமாய் எரிந்தேனே…


இசைக்கும்...

Comments

  1. ☺'திராட்சை கண்கள்'
    என்ற வார்த்தையில், அப்படியே சிறு குழந்தையின் கண்கள் கண் முன்னே வருகின்றன🤩

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25