கருவறை கீதம் -17

 


அத்தியாயம் 17


வருடம் 2012


பாஸ்கரன் தன் மகனை மீட்டுக் கொள்வதற்காக அப்பாவின் சட்டையையும் பிடித்து உலுக்கிவிட்டான். அதற்காக நீலிக்கண்ணீர் வடித்தவர் உண்மையிலேயே தனக்கெதுவும் தெரியாதென்றே சாதித்தார்.


“அப்போ சஞ்சு ஃபோட்டோஸ்லாம் எப்டி காணாமப் போச்சு?”


“அவனே போயிட்டான். அப்புறம் எதுக்கு அதெல்லாம்ன்னு நான்தாண்டா தூக்கிப்‌ போட்டேன். நீயும் அனுவும் இப்டி அவனுக்காக ஆலா பறந்து வருவீங்கன்னு நினைக்கலைடா. நமக்குதான் அர்ஜூன் இருக்கானே… வாம்மா அனு.” என்றபடி அவளிடமிருந்த அர்ஜூனைத் தொட கை நீட்டினார்.


விருட்டென வாசலில் போய் நின்றுகொண்டாள் அவள்.


அப்பாவுக்கு தன் மூத்த மகனைப் பிடிக்காது என்ற வரையில் அறிந்திருந்த பாஸ்கரன், அவர் இதுநாள் வரை அவனுக்கு இழைத்தக் கொடுமைகளைத் தற்போது வரை அறியாது போனான். இல்லையெனில் இப்போதும் அவர்மேல் துளி நம்பிக்கையைப் பிடித்து வைக்க நினைத்திருக்கமாட்டான். அவரின் நடிப்பின்மேல் உண்மை இருக்குமோ என்று நம்பியிருக்கமாட்டான். அப்பாவின் மேலுள்ள நம்பிக்கையும் மகனின் மேலுள்ள பாசமுமாக நெரிசல் சாலையில் சிக்கிக்கொண்ட சிறுவனைப் போல் நின்றான் பாஸ்கரன்.


அனு! இவனின் இதய அணுக்கள் ஒவ்வொன்றிலும் நிறைந்திருப்பவள்! இவனின் காதலையும் சத்திய வார்த்தைகளையும் மட்டுமே நம்பி திருமணத்திற்கு சம்மதித்த பெண்ணவள்! ஆனால் இவன் அவளின் காதலுக்கும் சத்தியத்திற்கும் துளி நியாயமும் செய்யவில்லை. இப்படியாக ஏதேதோ மனதோடு பயணித்து குற்றவுணர்வில் குமைந்து நின்றவன், தன் வீட்டினரை விரக்தியாய்ப் பார்த்துவிட்டு, அர்ஜூனைத் தூக்கிக்கொண்டு விருட்டென வெளியேறிச் சென்ற மனைவியைப் பின்தொடர்ந்தான்.


கலியபெருமாள் இந்தத் திருப்பத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. மூத்த மகனைக் காணவில்லை என்றதும் அனு அழுவாள்; ஆர்ப்பாட்டம் செய்வாள்; காவல் நிலையத்தில் புகாரளிப்பாள் என்று கணித்திருந்தவர், இப்படி அர்ஜூனைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்து செல்வாள் என்று நினைக்கவேயில்லை.


பதறிப்போய் பின்னால் ஓடினார். “பாஸு! பாஸு நில்லுடா! வயசான காலத்துல என்னையும் உங்கம்மாவையும் இப்டி கைக் கழுவிட்டு போறியே? இதுக்காகவா உன்னைப் பெத்து படிக்க வச்சு, ஆளாக்கினோம்?”


அனு, “இந்த ப்ரெய்ன் வாஷ் பண்ற வேலையெல்லாம் இங்கே வேணாம். உங்களை யாரும் இங்கே கைக் கழுவல! மாசாமாசம் உங்களுக்கு தேவையான பணம் வந்து சேரும். மோர்ஓவர் உங்களுக்கும்தான் உங்க பென்ஷன் பணம் வருதே? அப்புறம் என்ன?” என்று ஆத்திரமாகக் கேட்டாள்.


“என்னம்மா பேசற? பணத்துக்காகவா நான் உங்க பின்னாடி ஓடி வர்றேன்? இன்னும் ஏழு தலைமுறைக்கு தேவையான பணமும் சொத்தும் என்கிட்ட இருக்குது. எனக்கு தேவை என் பிள்ளை, பேரனோட அன்பும் அரவணைப்பும் தான்மா!”


“உங்களது போலி பாசம்ன்னு தெரிஞ்சும், உங்களையெல்லாம் நினைச்சு எங்க நிம்மதியைக் கெடுத்துக்கிட்டதுதான் மிச்சம். இனி நானும் என் குடும்பமும் நிம்மதியா வாழணும்னா தனியா போனா தான் சரி வரும். நீங்க வாங்க பாஸ்கர்!”


“பார்த்துக்கோடா பாஸு… நாங்க வேணாம்னு சொல்லச் சொல்லக் கேட்காம இவதான் வேணும்ன்னு தேடிப் போய் பேசி கல்யாணம் கட்டுனியே… இப்போ பாரு உன்னையே எங்கக்கிட்டே இருந்து பிரிக்கப் பார்க்கறா! என் குடும்பம்ன்னு பிரிச்சுப் பேசறா! ஏன்மா நீயும் ஒரு பொண்ணா?” என்றவர் இன்னும் ஏதோ பேச வரும் முன், பாஸ்கரன் சொன்னான்.


“அப்பா ப்ளீஸ்… உங்க வாயால எதுவும் சொல்லிடாதீங்க! இத்தோட நூறு முறை கேட்டுட்டேன். ஆனா நீங்க விட்டேத்தியாவே இருக்கீங்க! நீங்க என் அப்பான்றதாலயும் உங்க மேல இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கறதாலயும் தான் நான் உங்க மேல கம்ப்ளெய்ண்ட் பண்ணாம இவ்ளோ பொறுமையா பேசிட்டிருக்கேன். 


உங்களுக்கு எந்த ஃபீலிங்ஸூம் இல்லாம இருக்கலாம். ஆனா தொலைஞ்சு போனது எங்க உயிர்ப்பா! என்னால எப்டி கலங்காம இருக்க முடியும்? அதுவும் அனு… அவ உங்களுக்காக தான் - பேரன், பேத்தியை உடனே பார்க்கணும்ன்னு, கொஞ்சம் கூட மூச்செடுக்க விடாம நீங்க எல்லாரும் சேர்ந்து ஒரு வருஷமா செஞ்ச டார்ச்சர்னால தான் சரொகஸிக்கு போக நினைச்சா! 


எப்டியோ உங்க ஆசையும் அவ ஆசையும் இந்த வழில நிறைவேறட்டும்ன்னு தான் நானும் அவளுக்கு ஒத்துழைச்சேன். உங்க ரெண்டு பேரைப் பத்தியும் யோசிச்ச நான், என் உயிர்ல வந்த அந்த பிஞ்சுக் குழந்தையை யோசிக்காம விட்டுட்டேன்ப்பா…” என்று குலுங்கி அழுதான்.


“அவன் போனா போகட்டும்டா பாஸு. நம்ம குல வாரிசு அர்ஜூன் இருக்கும்போது நீ ஏன் கலங்குற? அனுவைக் கூட்டிட்டு உள்ளே வா!” 


அவரின் நெஞ்சம் காய்ந்துதான் போனதோ! மகனின் கண்ணீரைக் கண்ட பின்னும் அவன் உணர்வுகள் அவருக்கு புரியவில்லையோ அல்லது புரிந்தும் சிறு பிள்ளையின் பிடிவாதமாக எண்ணி புறந்தள்ளினாரோ அவருக்கு மட்டுமே வெளிச்சம்!


“ஹ்ம்ம்! அர்ஜூன் இருக்கும்போது நான் ஏன் கலங்கணும்? ஆனா பாருங்கப்பா… இங்கே இருந்தா அனு மேல இருக்க கோபத்துல நீங்க அர்ஜூனையும் ஏதாவது செஞ்சிட்டா?” எனக் கேட்டுவிட்டு அவர் அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடிப்பதையும் திரும்பிப் பாராமல் தெரு வாசல் கதவருகே செல்ல, மீண்டும் அவன் பின் ஓடினார்.


“அடேய் தம்பி! என் பேரன்டா அவன்! என் குல வாரிசு! அவனை நான் என்னய்யா செய்யப் போறேன்? அந்தப் பய காணாம போனதுக்கு நான் என்னடா பண்ணுவேன்? நீ உள்ளே வா, நாம நிதானமா பேசுவோம்.”


அதற்கு அனு பதிலடி கொடுப்பதற்கு முன்பாக பாஸ்கரன் அவளைக் கையமர்த்திவிட்டு அப்பாவின் முன் போய் நின்றான். “சஞ்சு திரும்ப கிடைச்சதும் உங்க ஆசிர்வாதத்தோட உள்ளே வர்றேன்ப்பா!”


மகனின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தலை கவிழ்ந்தவர், அவன் விருட்டென திரும்பிப் போனதும், தெருவோர யாசகனைப் போல் அவன் போன பாதைப் பார்த்து நின்றார். இனி அர்ஜூனைப் பார்க்கவே முடியாதோ என்ற பேரச்சம் மெல்ல மெல்ல அவர் முகத்தில் வியாபித்தது.


                             *******


தன் சோனி எரிக்சன் மொபைலில் இருந்த சஞ்சுவின் சிற்சில புகைப்படங்களைக் காவல் நிலையத்தில் கொடுத்திருந்தான் பாஸ்கரன். அவர்களும் அத்தனைத் தெளிவில்லாத அந்தப் புகைப்படங்களில் ஒன்றிரண்டை மற்ற காவல் நிலையங்களுக்கு பகிர்ந்திருந்தனர். தமிழ்நாட்டில் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி பகிரப்பட்டது.


சில நாட்கள் தேடுதல் வேட்டை தீவிரமாகவே நடந்தது. ஸ்ரீரங்கம், திருச்சி, இன்னும் அதைச் சுற்றியிருந்த சில ஊர்களின் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் சஞ்சுவின் தெளிவில்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டன. தெருவாசிகளிடம் விசாரித்தப் போது யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. 


அனு தன் மாமனாரின் மேல் சந்தேகம் உள்ளது என்று வாய் வார்த்தையாக சொல்லியிருந்ததால், அவரைப் பற்றியும் அக்கம்பக்கம் விசாரணை செய்ததில், ஒன்றுக்கு நான்கு பேர்கள் அவரை அன்று ஸ்ரீஅரங்கநாதர் கோவிலில் அர்ஜூனுடன் பார்த்ததாகவும் சுமார் மூன்று மணி நேரங்கள் தங்களுடன் அங்கேதான் இருந்தார் என்றும் சொல்ல, அவர் மேலிருந்த சந்தேகம் வலுவிழந்தது.


இருந்தும் அவரைத் தீவிரமாகக் கண்காணித்தனர். அவரின் அலைபேசி பறிக்கப்பட்டு சோதனைச் செய்யப்பட்டது. அழைப்புகளில் சந்தேகப்படும்படி ஒன்றும் கிடைக்கவில்லை. அதிலுள்ள புகைப்பட தொகுப்புகள் மொத்தத்திலும் நிறைந்திருந்தன அர்ஜூனின் அசைவுகள் ஒவ்வொன்றும்! மூத்த பேரனின் புகைப்படம் ஏனில்லை என்று கேட்டதற்கு, தனக்கு இளையவனின் மேல் பிரியம் அதிகம் என்று முடித்துக்கொண்டார். அர்ஜூனைப் பார்க்க முடியாத சோகம் வேறு அவர் கண்ணில் தெரிய, அதற்குமேல் அவரிடம் விசாரிக்க ஒன்றுமில்லையென்று அவரைச் சந்தேகப்பட்டியலில் இருந்து விலக்கினார்கள்.


குழந்தைக் கடத்தலில் சந்தேகப் பட்டியலில் இருக்கும் நபர்களும் தீர விசாரிக்கப்பட்டு, சில நாட்கள் கண்காணிக்கப்பட, அதிலும் பயனில்லாமல் போனது. அத்துடன் ஸ்ரீரங்கத்தில் சிசிடிவி என்பது அப்போதெல்லாம் சில பெரிய கடைகளில் மட்டுமே தன் பகுமானத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.


திருச்சியில் சம்பவம் நடந்தது நட்ட நடுசாலை மற்றும் நடுநிசியைத் தாண்டிய நேரம் என்பதாலும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை என்றதாலும், வழக்கு சிறிது நாட்களில் வலுவிழக்க ஆரம்பித்தது. 


தற்சமயம் பாஸ்கரனும் அனுவும் திண்டுக்கல்லில் லட்சுமியுடன் தங்கியிருந்தனர். அங்கிருந்து இருவரும் ஸ்ரீரங்கத்து காவல்நிலையத்திற்கு நூறு முறை வந்து போயிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் இல்லையென்ற பதிலே கிடைக்கும். இதனால் அனு தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளானாள்.


பாஸ்கரன் சில பெரிய ஆட்களிடம் போய் நின்றான். சிலர் நன்றாக கதைக் கேட்டார்கள். ஒரு சிலர் உண்மையாகவே உதவ முன்வந்து பாஸ்கரனுடன் சென்னை வரை போய்த் தேடினார்கள். குழந்தை சென்ற சுவடு தெரியவில்லை எனச் சோர்வுடன் திரும்பி வந்தான்.


அனு உணவு, உறக்கமின்றி உருக்குலைந்து போனாள். அவளைத் தேற்றப் படாதபாடு பட்டான் அவன்.


“வேலைக்காக குழந்தை வேண்டாம்ன்னு சொன்ன! இன்னிக்கு அந்த குழந்தையும் நீ வேண்டாம்ன்னு உன்னை விட்டு போயிடுச்சு.” லட்சுமி ஆற்றாமையில் பேசினார்.


“அத்தை, ப்ளீஸ்… அவ வேணும்ன்னு எதுவும் செய்யல!”


“குழந்தையோட அருமை உனக்கு ஒருநாள் புரியும்ன்னு சொன்னேன் தம்பி. ஒருவேளை அவளுக்கு புரிய வைக்கத் தான் இப்டி ஆச்சோ என்னவோ!”


அனு பெருங்குரலெடுத்து அழுதாள். பல்லைக் கடித்து பொறுத்தான் பாஸ்கரன். “அவளுக்கு ஆறுதலா இல்லைன்னாலும் இந்த மாதிரி எதுவும் சொல்லிக்காட்டி பேச வேணாம் அத்தை!”


அன்னை‌ உட்பட சுற்றியுள்ளவர்கள் கொன்று தின்றதில், சஞ்சய்யை விழுங்கிய அந்த வேலை இனி தனக்கு வேண்டாமென அதனைத் துறந்தாள் அனு. பாஸ்கரன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கும் நிலையில் அவளில்லை. இது தனக்குத்தானே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்றாள். 


உண்மையில் அனுவைப் போன்று வேலையில் மகத்தான ஆர்வமும் மகத்தான திறமையும் உள்ளவர்கள், அதை இழக்க நேரிடுதல் என்பது உயிரைத் திருகும் வலிக்கு ஒப்பானது! அந்த வலியை அவள் சஞ்சுவைத் தன் வயிற்றில் பெறாததற்காக கொடுத்துக்கொண்டாள்.


மற்றவர்கள் அவளைப் பேச பேச மேலும் குற்றவுணர்வில் குமைந்தாள்; அர்ஜூனை மறந்தாள்; அவனை சஞ்சு என்றழைத்தாள்.


சில நாட்கள் தெளிவாகவும் பல நாட்கள் சிந்தை மங்கியும் பேச ஆரம்பித்தாள். பாஸ்கரன் தாமதிக்காமல் மனநல மருத்துவரை அணுகினான். மீண்டும் சில நாட்கள் நன்றாக இருப்பாள். அவள் அம்மா ஏதேனும் சொல்லிவிட்டால் மீண்டும் விட்டத்தை வெறித்துக்கொண்டு அமர்ந்துவிடுவாள்.


சஞ்சு அதீத சந்தோஷத்தில் அழைக்கும், ‘தங்க அம்மா’வை இனி கேட்காமலேயே செத்துப் போவேனா? எனக் கேட்டு ஒவ்வொரு இரவையும் வலி மிகுந்ததாக மாற்றிக்கொண்டாள். குற்றவுணர்வும் சஞ்சய் மேல் இருந்த தாய்ப்பாசமும் அவளை மீளவே விடவில்லை.


இதில் சிலமுறை கலியபெருமாள் அர்ஜூனைப் பார்க்கவென மங்கையுடன் திண்டுக்கல் வர, அவர்களை அடிக்காத குறையாக விரட்டியடித்தாள். மனைவியின் பண்பும் குணமும் காணாமல் போய் மூர்க்கத்தனத்தில் முதிர்ந்து நின்றவளைக் கண்டு, பாஸ்கரன் இடமாற்றமாக இருக்கட்டுமென குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தான். அங்கே அவன் தங்கை நிர்மலா இருக்கும் பகுதிக்கு தூரமாக தன் வீட்டையும் வேலையையும் அமைத்துக்கொண்டான். 


இவர்கள் சென்னைக்கு புலம்பெயர்ந்த போது சஞ்சய் காணாமல் போய் ஒரு வருடம் ஆகியிருந்தது. அப்போது அர்ஜூனுக்கு வயது ஐந்து!


கலியபெருமாள் ஒரு வருடமாக பேரனைப் பார்க்காமல் நலிந்து போனாரெனில், தன் கணவர் சஞ்சய்க்கு செய்த துரோகத்தையும் அவரால் குடும்பம் சிதறியதையும் அதற்கு தன் கையாலாகாத்தனமுமே காரணம் என்றெண்ணி வருந்தியே அடுத்த வருடம் இறைவனடி சேர்ந்தார் மங்கை. மனைவியின் இறப்பில் மேலும் ஒடுங்கிப் போனார் கலியபெருமாள்.


மங்கை இறக்கும்முன் காமாட்சியிடம் சொன்னார். “ஒருவேளை நான் போய் சேர்ந்துட்டா அனுவைப் பார்த்து நான் அவக்கிட்ட மன்னிப்பு கேட்டேன்னு சொல்லு காமு! மூத்தவளா இருந்தும் பொறுமையா இல்லாம, பாஸு சொன்னதையும் மீறி, அவளைப் பேசி பேசியே தப்பான வழிக்கு திருப்பி விட்டுட்டேன். நல்ல குணவதி. நயந்து சொல்லிருந்தா புரிஞ்சிட்டு இருந்திருப்பா!”


“அக்கா, நீ இல்லாம நான் எப்டி இருப்பேன்? மூளியா வந்த எனக்கு இருக்க இடம் கொடுத்த உனக்கு ஒண்ணும் ஆகாது. முதல்ல எழுந்து இதைச் சாப்பிடு!” 


“இல்லை காமு! அவரைப் பத்தி தெரிஞ்சிருந்தும் சஞ்சுவை அவர்க்கிட்ட விட்டுட்டு போய் பெரிய பாவம் பண்ணிட்டேன். இப்போ அவரால என் பிள்ளை ஒரு மூலைலயும் நான் மூலைலயும் கிடக்கறோம். போதும் இந்த பாவப்பட்ட வாழ்க்கை! எனக்கு மருந்தும் வேணாம்; ஒண்ணும் வேணாம்! எடுத்துட்டு போ!” என்றவரின் உயிர் அன்றிரவே பிரிந்திருந்தது.


அதன்பின்னர் அக்கா இல்லாத வீட்டில் தான் மட்டும் எங்ஙனம் வாழமுடியும் என்று காமாட்சியும், பாஸ்கரனை அழைத்து அவனுடன் வந்துவிடுவதாகச் சொல்ல, அவன் அனுவிற்கு உதவியாக இருக்கக்கூடும் என்றெண்ணி அவரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டான்.


ஆளில்லா வீட்டில், பேரனையும் கண்ணால் காண முடியாமல் பித்து நிலைக்கு சென்றார் கலியபெருமாள். அர்ஜூனின் வாசத்தையாவது உணரலாம் என்று பாஸ்கரனின் அறையில் போய் அமர்ந்தால், ‘வலிக்குது தாத்தா. இனி அர்ஜூனைத் தொடமாட்டேன். அடிக்காதே தாத்தா!’ என்று அலறும் சஞ்சுவின் குரல் கேட்கும்.


பேயைக் கண்டதைப் போல் வெளியே வந்து நிலா முற்றத்தில் ஈஸி சேரில் அமர்ந்தால், எப்போதும் தூணோரமாய் நின்று இவரையும் இவர் மடியில் இருக்கும் அர்ஜூனையும் பயப்பார்வைப் பார்க்கும் சஞ்சய், இப்போது தலையைத் தாழ்த்தி விழிகளை மட்டும் உயர்த்தி கொடூரமாக முறைத்துப் பார்ப்பான். விதிர்த்து போய் எழுந்து கொள்வார்.


மங்கை போன பின்னர் புதிதாய் சமையல் வேலைக்கு என அமர்த்தியிருக்கும் பெண், தினமும் இரண்டு வேளைகள் சமைத்து வைத்துவிட்டு சென்றுவிட, அதை எடுத்துப் போட்டு சாப்பிடுவதற்கு சமையல் உள்ளில் போய் நிற்கையில், அவர் வைத்த பாத்திரச் சூட்டைத் தாங்கவியலாமல், ‘தாத்தா சுடுது.’ என வீலென்று அலறும் சஞ்சுவின் குரலில் அடித்துப் பிடித்து வெளியே ஓடி வந்து மூச்சு வாங்குவார்.


வீட்டில் நிம்மதியில்லாமல் கோவிலுக்கு போவார். அங்கே பிரகாரத்தைச் சுற்றும்போது சஞ்சய், ‘என்னைப் பூச்சாண்டி கிட்ட கொடுக்கப் போறியா தாத்தா?’ என்று கிலியை உண்டாக்கும் பார்வையில் விழியுயர்த்திக் கேட்பான்.


எங்கு திரும்பினாலும் அவர் சஞ்சய்க்கு இழைத்த கொடுமைகளும் அதனால் அவன் கதறிய கதறல்களுமே கேட்டு அவரைச் சாகடித்தது. அந்த நாட்களில் இவர்‌ ரசித்த அவனின் ஓலக்குரல் இப்போது அவரையே ஊனும் உயிருமென கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்திருந்தது.


மகனைக் காணவில்லை என்ற அனுவின் கதறலை அலட்சியம் செய்தவர் தற்போது, “விட்டுடுடா சஞ்சு! தாத்தாவை மன்னிச்சிடுடா… என்னை உயிரோட வதைக்காதேடா…” என்று ஆளில்லா வீட்டில் அலறிக் கொண்டிருந்தார்.


மனிதன் யாருமற்ற நிற்கதியில்தான் நிஜங்களை நிறம் பிரிக்கின்றான். அப்போதுதான் சரி, தவறுகளுக்கு அப்பாற்பட்டு மனசாட்சி மடைதிறந்த வெள்ளமாய் மகத்தான பட்டியல் தயார்செய்து நீட்டும்.


கலியபெருமாள் துடித்தார்; கண்ணீர் வடித்தார்; சுயமிழந்தார்; தன்வசமிழந்தார்.  


செய்த கொடுஞ்செயல் ஆன்மாவை உலுக்கியெடுத்தே தீருமென்பது பிரபஞ்ச நியதியல்லவா?


அங்கே அவர் துடித்திருக்க, அர்ஜூனுடன் விளையாட முடியாத ஏக்கத்தையெல்லாம் தன் புதிய தங்கை பிரகதியுடன் விளையாடித் தீர்த்துக் கொண்டிருந்த அவரின் பேரன், உலகத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமும் என்னிடம்தான் என்பதாக தன் சின்னப் பற்கள் அத்தனையும் காட்டி சிரித்துக்கொண்டிருந்தான்.


வருடம் 2034

"இன்னும் இருபது நாள், பதினஞ்சு மணிநேரம், ஐம்பது நிமிஷம், முப்பத்து நாலு செகண்ட்ஸ்!” நள்ளிரவைத் தொடப் போகும் நேரத்தில் பேய்களின் நடமாட்டத்திற்கு சற்றும் சளைத்ததல்ல காதலர்களின் ‘கசமுசா கதைப்புகள்’ என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் அவினாஷ்.


பிரகதி மறுமுனையில் இடக்கையில் கன்னத்தைத் தாங்கியபடி பார்த்திருக்க, அவளருகே இருந்த அலைபேசியின் மூலம் கட்டிலின் முகப்பில் தெரிந்தத் திரையில் (projection screen) கண்சிமிட்டினான் அவன்.


“இருபது நாள் ஒண்ணுமில்ல. அஞ்சு நாள்தான். எப்டியும் இன்னும் ஃபைவ் டேஸ்ல நாங்க எல்லாரும் சென்னை வந்துடுவோம்தானே?”


“சென்னை வருவ! என்னை மட்டுமே பார்க்கறதுக்கு வருவியா?”


“மொத்தமா உங்கக்கிட்ட தான் வரப் போறேன். அது புரியலை!”


“அதுக்கும் முன்னாடி?”


“நான் அண்ணன் கிட்ட பர்மிஷன் கேட்டு வர்றேன்.”


“ம்க்கும்! அண்ணன்னுவ… அப்புறம் அக்னின்னுவ…”


அவனின் பாவனையில் “ரெண்டும் ஒருத்தர்தான் அஷ்ஷூ!” என்று நகைக்க,


“அதான்மா நானும் சொல்றேன். எப்டி சுத்தினாலும் உங்கண்ணன் கிட்ட தான் வந்து நிற்ப!”


“ஜெலஸா?”


“பின்ன என்னடி? பேசற நேரத்துல பாதி அண்ணன் டாபிக்! மீதி அக்னி டாபிக்! ஆக மொத்தம் உன் பேச்சுல ஃபுல் ஸ்பேஸ் அவருக்குதானே?”


பிரகதிக்கு அக்னிஸ்வரூபன் தன் உடன்பிறந்தவனல்ல என்று பால்ய பருவத்திலேயே தெரியும். அக்னி அவர்கள் வீட்டிற்கு வந்தபோது வசுதாவின் மூத்த மகளும், பாவனாவின் அக்காவுமான கீதாஞ்சலிக்கு எட்டு வயது. கிட்டத்தட்ட அக்னியும் அவளும் ஒரே வயது!


பதினைந்தாவது வயதில் அவளின் நீராட்டு விழாவின் செய்முறைக்கு இவர்கள் அக்னியை முன்னிருத்த, அதை வசுதாவின்‌ புகுந்த வீட்டினர் பலமாக ஆட்சேபித்தனர். அப்போது நடந்த சிறு பிரச்சினையில் பிரகதிக்கும் பாவனாவுக்கும், இன்னும் குழந்தைப்‌ பருவத்திலிருந்த சிலருக்கும் கூட அப்போதுதான் அக்னிஸ்வரூபன் வளர்ப்புக் குழந்தை என்றே தெரிந்தது. அதுவரையில் பெரியவர்கள் அதனைப் பெரிதாக பிரஸ்தாபித்துக் கொள்ளாததாலும், அக்குடும்பத்தில் யாரும் அக்னியை வேற்று மனிதனாக நடத்தாததாலும் அவனைப் பிரபஞ்சனின் சொந்த மகன் என்றே நினைத்திருந்தனர்.


அன்று தன்‌ அண்ணனின் முகத்தில் தெரிந்த வருத்தத்தில் பிரகதி அவனைக் கட்டிக்கொண்டு அழுததெல்லாம் வரலாறு! எப்படியிருப்பினும் அவன் அவளின்‌ அண்ணன் என்பதில் அவளுக்கு மாற்றுக் கருத்தில்லை. அதன்பின் அவள்‌ அதைப் பற்றி பெரிதாக சிந்திக்கவுமில்லை. ஏழு வயதில் தெரிந்துக் கொண்ட உண்மையை கிட்டத்தட்ட மறந்துதான் போனாள். 


எனவே இப்போது அவினாஷிடம் அந்த உண்மையைச் சொல்வதைப் பற்றியும் அவள் நினைக்கவில்லை. இயல்பாக உண்டான உடன்பிறந்தோனின் உணர்விலேயே அக்னியைப் பற்றி பேசினாள். அத்தனைக்கு அக்னி மேல் அழுத்தமான பாசம் கொண்டிருக்கிறாள் பிரகதி. இதோ! நாளை அவள் கணவனாக வரப் போகிறவனுக்கு பொறாமை தோன்றுமளவிற்கு!


ஆக, அவள் மூலமாக உண்மை வெளிவர வாய்ப்பில்லாமல் அவ்வழி அடைப்பட்டது. 


“கோவிச்சுக்காதீங்க அஷ்ஷூ! உங்களுக்கு எப்டி உங்க தங்கச்சியோ அப்டித்தானே எனக்கு அக்னியும்?”


“சனா எதுக்கும் என்னை டிப்பெண்ட் பண்ணவேமாட்டா! நீ எல்லாத்துக்கும் உங்கண்ணனைத் தான் தேடற!”


“நான் அவனோட குட்டித் தங்கை இல்ல… அதான் அப்டியே என்னை வளர்த்துட்டான். சரி அழாதீங்க. நான் இப்போ என்ன பண்ணனும்?”


“இப்போ எதுவும் செய்ய வேணாம். சென்னை வந்ததும் என்னைப் பார்க்க வா! தனியா! யார்க்கிட்டேயும் சொல்லாம!” கிறங்கியது அவன் குரல்.


“ஹஹ்ஹஹ… எங்கண்ணன் கூட போட்டியா? சரி வீட்டுக்கு பக்கத்துல இருக்க இடம் ஏதாவது சொல்லுங்க.”


அவள் அக்னியை மீறி வர ஒப்புக்கொண்டதே அவினாஷிற்கு மலர்ச்சியைத் தந்தது. அவளை அவள் அண்ணனிடமிருந்து பிரிக்கும் எண்ணமில்லை என்றாலும், அவள் வாழ்வில் தனக்கே முதலிடம் இருக்கவேண்டும் என்ற போட்டியுணர்வு இருந்தது அவினாஷிடம்!

                    

                       *********


"தெரியாம சொல்லிட்டேண்டி… அதுக்கு இப்டி நாலு நாளா என்னை முறைச்சிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்?” கன்னடம் கலகலத்தது அபிந்தாவிடம்!


சந்தனா இன்னும் அவளிடம் முறுக்கிக் கொண்டிருக்க, அவள் சொன்னாள். “கழுத அவன் வீடு எங்கேன்னு சொல்லுடி… போய் கால்லயாவது விழுந்து ‘தெரியாம சொல்லிட்டேன்ப்பா. ஸனாவோட ட்ரீம் பாய் நீ இல்ல! இல்லவே இல்லை’ன்னு அவன் கால்லயே அடிச்சு சொல்லிட்டு வர்றேன்.” என்றதில் சந்தனாவிற்கு தன் கோபம் மறந்தது.


முறைப்புடனே லேசாக அவளைத் திரும்பிப் பார்த்தாள். 


“சீரியஸ்லி ஸாரி ஸனா… இனி சட்டுன்னு வாய் விடமாட்டேன்.”


“பிழைச்சுப் போ!”


“ஹிஹி… தாங்க்ஸ். அப்புறம்…”


“??”


“உனக்கு வேணாம்னா எனக்கு இன்ட்ரோ தரலாம்ல? ஆளு அட்டகாசமா இருக்கான்.”


“செருப்பு பிஞ்சிடும் நாயே!” என்றதில் ஓடிப்போய் அவளிடத்தில் அமர்ந்துகொண்டாள் அபிந்தா.


இத்தனை நேரம் தோழிகளின் பேச்சுக்களில் இடம்பெற்றிருந்தது அக்னிஸ்வரூபனே! சந்தனா தன் ‘பாய் ஃப்ரெண்டைப்’ பற்றி அபிந்தாவிடம் மேலோட்டமாகச் சொல்லியிருக்கிறாள். அவளும் அவனைக் காண ஆர்வமாக இருப்பதாகச் சொல்ல, நிச்சயமாக ஒருநாள் அவனைக் காண்பிப்பதாக இவளும் சொல்லியிருந்தாள்.


அன்று அபிந்தா, ‘இவன்தான் உன் பாய் ஃப்ரெண்டா?’ என்று கேட்டபோது அக்னியின் முன் இயல்பாக இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும், அவள் சொன்னதைக் கேட்டு அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான் என்று மண்டைக் குடைச்சலாகவே இருந்தது இவளுக்கு. 


‘பொறுப்பில்லாம பாய் ஃப்ரெண்டோட சுத்தற பொண்ணுன்னு நினைச்சிருப்பானோ?’


சந்தனா யாரையும் ஒரே பார்வையில் கணித்துவிடுவாள். அவள் கணிப்பிற்கு அப்பாற்பட்டு இருந்தவன் அக்னி மட்டும்தான். முதல்முறை பார்த்தபோது ‘எப்போதும் போல்’ ஓர் அணி தலைவனைப் போல் இருக்கிறான் என்று நினைத்ததைத் தவிர, அவனைப் பற்றி பெரிதாக வேறெந்த எண்ணமும் தோன்றவில்லை. 


அடுத்த முறை நகைக்கடைக்கு செல்லும்போது இவளை அழைக்க வந்திருக்க, அன்று இவள் காரை நெருங்குகையில் முகம் திருப்பிக்கொண்டான். அதில் திமிர்பிடித்தவனாக இருக்கக்கூடும் என்று நினைத்தாள். ஆனால் அன்றே இவள் களைப்பை உணர்ந்து உணவு வாங்கி தந்து உபசரித்து அவளின் முந்தைய எண்ணத்தைக் காலி செய்திருந்தான் அக்னி. 


அடுத்த சந்திப்பு கார்மெண்ட்ஸில்! எதிர்பாராத விதமாக சந்தித்ததில் முதலில் கண்களில் ஆச்சரியத்தைக் காட்டினானே தவிர, அதன்பின் அவனிடம் ஓர் ஒதுக்கத்தையே உணர்ந்தாள். இவளாகவே முயன்று பேசினாற் போல் உணர்ந்திருக்க, இதில் அபிந்தா பேச்சும், அதையும் அவன் காதில் விழுமாறு சொல்லி தொலைத்ததிலும் அவளை அடித்து துவைத்துவிடும் அளவிற்கு ரோஷமும் கோபமும் வந்தது.


சந்தனாவிற்கு தன் சொந்த விடயங்களை வெளியாட்களிடம் பிரஸ்தாபிப்பது அறவே பிடிக்காது. அபிந்தாவிற்குமே இவளின் ‘பாய் ஃப்ரெண்ட்’ பற்றி முழுவதும் சொல்லியிருக்கவில்லை. ஆக, அவள் ஆர்வக்கோளாறில் அக்னிக்கு தெரியும்படி பேசியதில் கத்தித் தீர்த்துவிட்டவள், நான்கு நாட்களாக அபிந்தாவிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை. ‘அப்படியென்ன யார் எவரென்று தெரியாமல் சொந்த விஷயத்தைப் பொதுவில் பேசுவது?’ என்ற கோபம்!


‘அவன் நம்மை நினைத்து சிரித்திருப்பானோ?!’


‘ச்ச! நான் ஏன் அவனையே நினைச்சிட்டிருக்கேன்? அவன் என்ன நினைச்சா எனக்கென்ன?’ என்று சிலுப்பிக்கொண்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள், சந்தனா!


இசைக்கும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25