கருவறை கீதம் -26.2

 


அத்தியாயம் 26.2


காரை எடுத்தவன், வாசலில் நின்ற அவளை ஏற்றிக்கொண்டான். எதையோ நினைத்து வருந்துபவளைப் போல் வெளியே இருந்த கூட்டத்தைப் பார்த்திருந்தாள் அவள்.


“எப்போ இருந்து இப்டி இருக்கார்?” எனக் கேட்டு அவள் கவனம் கலைத்தான்.


“எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்தே இப்டித்தான் இருக்கார்.”


“ஏன்?”


சிறிது யோசித்தாள் சந்தனா. எப்படியும் நாளை தங்கள் குடும்பத்தில் இணையும் போது பிரகதிக்கு இதெல்லாம் தெரிய வரத்தான் செய்யும். அதனை அவள் அவளின் பிறந்த வீட்டில் சொல்லலாம். அத்துடன் தாத்தா வேறு இவனிடம் இவ்விதம் நடந்துகொண்டிருக்கிறார். இவனும் அனுசரணையான மனிதனாகவே தெரிகிறான். ஆக, தான் அக்னியிடம் தங்கள் சஞ்சுவைப் பற்றி சொல்வதில் பாதகமொன்றுமில்லை என்று நினைத்தாள்.


“அர்ஜூனுக்கு அண்ணன் ஒருத்தன் இருக்கான்.”


“ம்ம்! ஃபாரின்ல இருக்கறதா சொன்னாங்களே…”


“உங்கக்கிட்ட சொல்றதுல ஒண்ணுமில்லைன்னு நினைக்கறேன். அவன் ஃபாரின்ல இல்லை. சின்ன வயசுல காணாம போயிட்டான்.”


“ஓ! எப்டி?”


“சரியா தெரியல. தாத்தா ஒருமுறை மனசு சரியில்லாதப்போ, சஞ்சுவைக் கோவில்ல தொலைச்சிட்டதா பாஸ் மாமாகிட்ட சொன்னாராம். ஆனா அனு அத்தை அதை நம்பல. அவன் காணாம போனதுல ஷீ சஃபர்ட் ஃப்ரம் டிமென்ஷியா! வளர வளர எங்களுக்கு அத்தையைப் புரிஞ்சது. அவங்களும் அர்ஜூனையாவது சரியா கவனிச்சுக்கணும், நல்லபடியா வளர்க்கணும்னு தன்னோட மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செஞ்சாங்க. ஆனா சஞ்சுவை மறக்கலை! இப்போ வரை அத்தை மெடிசின் எடுத்துக்கறாங்க. மெடிடேஷன் செய்றாங்க. இல்லைன்னா மறுபடியும் அவங்க மனசு குழம்ப ஆரம்பிச்சிடும். சஞ்சுவை நினைச்சு ஏங்க ஆரம்பிச்சிடுவாங்க!”


நேற்று அர்ஜூன் அம்மாவை, ‘மாத்திரை போட்டாயா? தியானம் செய்தாயா?’ என்றெல்லாம் கேட்டதற்கு பின்னால் தான் தான் இருக்கிறோம் என இக்கணம் புரிந்தது. தாத்தாவைக் கூட இலகுவாக எதிர்கொண்டவனுக்கு அம்மா என்றால் மட்டும் படபடவென வந்துவிடுகிறது. சந்தனாவின் பக்கம் திரும்பவே இல்லை. மெதுவே காரை செலுத்தியவன் வாழ்க்கையில் முதன்முதலாக சாலையில் நீண்டு கிடக்கும் கூட்டத்திற்கும் சிக்னல் காத்திருப்பிற்கும் நன்றி சொன்னான்.


“அவன் மேல அவ்ளோ பாசமா?”


“என்ன அக்னி… எந்த அம்மாவுக்கு தன் குழந்தை மேல பாசமில்லாம போகும்?”


“ம்ம்! தாத்தா?”


“தாத்தாவுக்கு சஞ்சுவைப் பிடிக்காது. நிறையக் கொடுமைப்படுத்தினதா சொல்லுவாங்க. ஆனா அவருக்கு அர்ஜூன்னா உயிர்! சஞ்சுத்தான் காணாம போன சமயம் சஃபர் ஆனது அனு அத்தை மட்டுமில்லை; தாத்தாவும்தான்! ஏன்னா அவரால தான் என் பிள்ளை காணாம போச்சுன்னு சொல்லி அத்தை அர்ஜூனைத் தாத்தாகிட்ட காட்டமாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். அதுல அவர் ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டார்.”


“அவருக்கு ஏன் சஞ்சுவைப் பிடிக்கலை?”


சிறிது தயங்கிவிட்டு சொன்னாள்.

“உங்களுக்கு ஃபர்ஸ்ட்ல இருந்து சொன்னாதான் புரியும். சஞ்சுத்தான் சரகஸில பிறந்தவன். தாத்தா பழைய ஆள் இல்லையா? அவரால அதை ஏத்துக்க முடியலை. அத்தை அப்போவே ஐடி ஃபீல்ட்ல ஆன்ஸைட், ஃபாரின் ஃப்ரெண்ட்ஸ்ன்னு இருந்தவங்க.” என்றவள், “நான் சொல்ற சூழல் உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கறேன் அக்னி.” என அவன் முகம் பார்த்தாள்.


“ம்ம்!” என்று ஆமோதிக்க,


மீண்டும் சாலையைப் பார்த்தபடி அவள் தொடர்ந்தாள். “அதனாலதான் தாத்தாவுக்கு சஞ்சுவைப் பிடிக்கலை. அவனை ஸ்குவாலிட் கிட்’ன்னு நினைச்சவர் சின்னக் குழந்தைன்னு கூட பார்க்காம அவன்கிட்ட கடுமையா நடந்துக்கிட்டதா சொல்லுவாங்க. இதோ இப்போ தாத்தாவும் அப்டி தான் ஏதோ சொல்றார்.” என்றவள், தாத்தா சஞ்சுவிற்கு குழந்தை என்றும் பாராமல் ஏதோ பெரிதாக செய்துள்ளார் என்று நினைத்து வருந்தியவள் அக்னியிடம் சொல்லவில்லை. அது தன் தாத்தாவை அவனிடம் விட்டுக்கொடுப்பதாக ஆகுமே!


இருளில் ஆளில்லா சாலையில் திருநங்கைகள் துரத்தி வர, தன்னந்தனியாக ஓடிய ஓட்டத்தை எண்ணி இவனுக்கு சிறு வயதில் பலமுறை பயத்தில் உடல் தூக்கிப் போட்டிருக்கிறது. பதின்பருவத்தில் அந்த பயங்கள் படிப்படியாக குறைந்து, கல்லூரியை எட்டும்போது ஒன்றுமில்லாமல் போனாலும் வடுவாய், கசடாய் படிந்துவிட்டதே!


அவள் சொல்வதைக் கேட்டவன் மீண்டும் முகத்தை வெளியில் தெரிந்த கூட்டத்திடம் திருப்பி, ஆழ்ந்த மூச்சுடன் மனதின் அழுத்தத்தை வெளியேற்ற முயன்றான். 


“அர்ஜூனைக் கூட சஞ்சுவோட சேர விடமாட்டாராம். இன்ஃபாக்ட் என்னையும் அந்த மாதிரி செஞ்சதா எனக்கே கூட லைட்டா ஞாபகம் இருக்குது.”


‘நீ என்னைக் கிஸ் பண்ணதெல்லாம் எனக்கும் ஞாபகம் இருந்து தொலையுதேடீ.’


தொண்டையைச் செருமிக்கொண்டான். “உங்கத்தை செஞ்சது தப்பில்லையா? அப்போவே சரகஸிக்கு போகவேண்டிய அவசியம் என்ன வந்தது?”


அவள் குரல் ஸ்திரத்துடன் சிறிது உயர்ந்தது. “இதுல என்ன தப்பிருக்குதுன்னு சொல்றீங்க அக்னி? கேளுங்க, அத்தை ஐடி ஃபீல்ட்ன்னு சொன்னேன் இல்லையா? அவங்களுக்கு அதுல எக்கச்சக்க டேலண்ட்ஸ்! 2000ல ஐடி’யே எவ்ளோ பெரிய விஷயம்? அதுல பொண்ணுங்க அச்சீவ் பண்றதெல்லாம் சாதாரண விஷயமில்லையே… ஸோ, கெரியர்தான் ஃபர்ஸ்ட்ன்னு மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிட்டு கல்யாணம் வேணாம்னு இருந்தாங்களாம்.” என்றவள், பாஸ்கரன் அனுவை எப்படி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தானென்றும், அதன்பின் வீட்டிலுள்ளவர்கள் குழந்தைக்காக அவளையும் அவனையும் எப்படி நெருக்கி தள்ளினார்களென்றும் சொன்னாள்.


“இதெல்லாம் எனக்கெப்டி தெரியும்னு நினைக்கறீங்க? ஒரு வாட்டி அர்ஜூன் சொல்லாம கொள்ளாம ஃப்ரெண்ட்ஸோட அவுட்டிங் போயிட்டான். அன்னிக்கு நைட்டெல்லாம் மாமா அவனைத் தேடி, எங்கே இந்தப் பையனையும் தொலைச்சிடுவோமோன்னு ரொம்ப டிப்ரெஷனாகி, லீவுக்கு போயிருந்த என்கிட்ட பழைய கதையெல்லாம் சொன்னார். எனக்கே அத்தையோட பக்கம் அப்போதான் முழுசா புரிஞ்சது.”


“உங்கத்தை அப்டியென்ன அச்சீவ் பண்ணாங்க?” எதனாலோ தூண்டப்பட்டவன் போல் கேட்டான்.


சந்தனா தன் அத்தையின் பெருமைகளைப் பேசும் மும்முரத்தில் இவன் முகத்தைப் பார்க்கவில்லை. “அப்போவே… அதுவும் வெறும் நாலஞ்சு வருஷத்துலயே மேனேஜர் போஸ்ட் அச்சீவ் பண்ணிட்டாங்களாம். என்னோட எத்தனையோ ஐடி ஃப்ரெண்ட்ஸைப் பார்த்திருக்கேன் அக்னி. அவங்க வாழ்க்கைல பாதிநாள் ஸ்ட்ரெஸ்ல தான் போகும். ஃபேமிலி, ஐடி ஜாப்ன்னு ரெண்டையும் ஹேண்டில் பண்றதுலாம் எவ்ளோ பெரிய விஷயம்! அப்டியும் இங்கே அத்தையை அவ்ளோ டார்ச்சர் பண்ணிருக்காங்க. எப்பவும் பொண்ணுங்களுக்குதான் கஷ்டமெல்லாம்! ஐடி பொண்ணுங்க கல்யாணமே பண்றதில்லயான்னு கேட்கலாம். ஆனா அத்தையை மாதிரி அந்த வேலையை நேசிக்கறவங்க, திறமையுள்ளவங்க கேரியரைத் தான் ஃபர்ஸ்ட் சூஸ் பண்ணுவாங்க அக்னி!”


“அதுக்காக குழந்தை வேணாம்ன்னு சொல்லுவாங்களா?”


பாஸ்கரன் சொன்னது மட்டுமல்லாமல், தன் அம்மாவும் சித்திப்பாட்டியும் அத்தையைப் பேசுவதைப் பார்த்து வளர்ந்திருக்கும் சந்தனா, ‘இவர்களெல்லாம் அக்காலத்தில் வேலையில் கவனம் செலுத்தவிடாமல் தன் அத்தைக்கு எத்தனை அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பார்கள்’ என்று அவள் வயதிற்கேற்ப, அவள் பார்வையில் அனுவிற்காகப் பேசினாள்.


“அதுக்காக எங்கத்தையைத் திமிர்பிடிச்சவ ரேஞ்சுக்கு பேசினதெல்லாம் என்ன நியாயம்? அதுவும் அத்தை குழந்தை வேணாம்ன்னு சொல்லல! கொஞ்சம் டைம் கொடுங்கன்னு தான் கேட்ருக்காங்க. நீங்க சொல்லுங்க, கல்யாணத்தை விட, குழந்தையை விட கேரியர்தான் முக்கியம்ன்னு சொல்ற பொண்ணுங்களை அரகண்ட்ன்னு சொல்லுவீங்களா மிஸ்டர் அக்னி?


“ஹோல்ட் ஆன்! ஹோல்ட் ஆன்! டாபிக் மாறி ஃபெமினிஸம் பேசிட்டிருக்க நீ!”


“ஹ! நீங்களும் ஆம்பிளைதானே? அதான் அடிப்படையான ஒரு விஷயம் கூட ஃபெமினிஸம் மாதிரி தெரியுது உங்களுக்கு!” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.


அவள் இவனிடம் இத்தனை தூரம் இலகுவாக பேசுவதிலும், அழகாக கோபித்துக் கொள்வதிலும் இவனுள் ஓர் மெல்லிய வீணைநாதம் பரவியது. ஒவ்வொரு முறையும் தன் கடினமான மனநிலையைச் சுலபமாக மாற்றிவிடுகிறாள் மோசக் காதல்காரி! 


“சரிடி… அப்புறம் என்னாச்சு சொல்லு!” என்றவனுக்கு, அர்ஜூன் ஏன் இவளுக்கு தன் அம்மாவைப் பிடிக்கும் என்றான் என இப்போது புரிந்தது.


“அப்புறமென்ன சஞ்சுவை வீட்ல சேர்த்துக்க மாட்டேன்னு ஒரு சண்டை! சேர்த்துக்கலைன்னா பாஸ் மாமாவைப் போலீஸ் பிடிச்சிட்டு போயிடுவாங்கன்னு சொல்லி தாத்தாவை சைலண்ட் பீஸாக்கிட்டாங்க போல!” என்றவள் மேலும் அவனுக்கு தெரியாத, அந்த வயதில் புரியாதிருந்த பல பழங்கதைகளைச் சொன்னாள்.


“அப்புறம் சஞ்சுத்தானுக்கு முழுசா எட்டு வயசு கூட முடியாதப்போ அத்தையோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அத்தையும் மாமாவும் திண்டுக்கல் போயிருந்த சமயம் அவன் காணாம போயிட்டான். தாத்தா தான் காரணம்ன்னு திரும்ப ஒரு சண்டை! போலீஸ்! கேஸ்! ஆனா அப்போவும் எல்லாரோட விரல்களும் அத்தையை நோக்கியே தான் இருந்திருக்குது.” என்றவளின் குரலில் வருத்தம் மிகுந்து, ஸ்ருதி குறைந்திருந்தது.


வெளிப்புறம் பார்த்தபடி முகம் துடைப்பதைப் போல் கைக்குட்டையால் கண்களையும் துடைத்துவிட்டு குரலைச் செருமிக் கொண்டு கேட்டான். “ஏன்?”


“குழந்தை வளர்க்கவே லாயக்கில்லாதவ! வேலைக்காக குழந்தை வேணாம்ன்னு சொன்ன… இப்போ அதுவும் உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு போயிடுச்சு; அவன் இருந்திருந்தாலும் உன்னால ஒரு நல்ல அம்மாவா இருந்திருக்க முடியாது; ப்ளா ப்ளா… பேசி ரொம்ப நோகடிச்சு அவங்களை டிப்ரெஷன்ல தள்ளி, லாஸ்ட்ல குற்றவுணர்ச்சி தாங்காம அத்தை எந்த வேலைக்காக ப்ரக்னென்ஸியைத் தள்ளி வச்சாங்களோ அந்த வேலையே வேணாம்ன்னு விட்டுட்டாங்களாம்.”


இவனுக்கு அம்மாவின் அல்லல்களைக் கேட்டு கலங்கிக் கொண்டேயிருந்த கண்களும், அடைத்துக் கொண்டேயிருந்த தொண்டையும் ஒரு கட்டத்தில் வலியெடுக்க ஆரம்பித்துவிட்டது.


“அத்தைக்கு அவங்க ஃபீல்ட் மேல வெறியே உண்டுன்னு மாமா சொன்னார். ஆனா அதுக்கப்புறம் அவங்க அதைப் பத்தி இன்னிக்கு வரை ஒரு வார்த்தை கூட பேசலையாம்!”


கார் சிக்னலை முறைத்திருந்த நேரத்தில் நீரருந்தி தொண்டையைச் சற்று ஆறுதல்படுத்தியவன், மனதில் கனம் ஏற்றிக்கொண்டான். ‘என்னை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து நீ தப்பு செஞ்ச! உன்னை விட்டுட்டு போய் நான் அதை விட பெரிய தப்பு செஞ்சுட்டேன்ம்மா!’


அவள் டேஷ் போர்டில் விழிகள் நிலைத்திருக்க, பால்யங்களில் லயித்திருந்ததால் இவன் தண்ணீர் குடிப்பதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. “எங்க அனு அத்தையோட ஸ்மைல் ரொம்ப அழகா இருக்கும் அக்னி. ஆனா அவங்க சிரிப்பைத் தொலைச்சிட்டு ஒரு யோகி மாதிரி இருந்த நாட்கள் அது! எனக்கு விவரம் புரிஞ்சப்போ அவங்களைச் சிரிக்க வச்சு பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கும். அதுக்காகவே நானும் அஜூவும் ஏதாவது சேட்டைப் பண்ணுவோம். சமயத்துல அவி அண்ணாவும் சேர்ந்துக்குவான்.” என்று வருத்த முறுவல் பூத்தாள்.


கார் மீண்டும் கூட்டத்துடன் கலந்தது. இவன் முகத்தைச் சீராக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான். இவளையே கல்லூரியில் கதாநாயகியாக பார்ப்பார்கள் என்று பிரகதி சொல்ல, இவள் தன் அம்மாவிற்கு கதாநாயகி அந்தஸ்து தந்திருக்கிறாள் என்று சிறு மகிழ்வூற்று இவனிடம்!  


“ஸோ? உங்கத்தை மேல தப்பில்லன்னு சொல்ற?”


“அத்தையை மட்டும் ப்ளேம் பண்றது நியாயமில்லைன்னு சொல்றேன். அத்தை சரகஸிக்கு போனது தப்பில்லை அக்னி; கான்சீக்வன்ஸெஸை யோசிக்காம போனதுதான் தப்பு! இப்போ வரைக்கும் அத்தைக்கு யார் யார் எப்டின்னு புரிஞ்சிக்கற பக்குவமே கிடையாது. மெய்ட் கூட உன் தலைல சம்பல் அரைக்கறாங்கன்னு அஜூ திட்டிட்டே இருப்பான். அண்ட் பிடிவாதம்! சஞ்சுன்னு வந்துட்டா அத்தைக்கு அப்டியொரு அசாத்திய பிடிவாதம் வரும். இன்னஸென்ஸ் அண்ட் ஸ்டபர்ன்! இந்த ரெண்டும்தான் அவங்களோட மைனஸ்!”


‘மைனஸா இருந்தாலும் என் தங்க அம்மா’டீ!’


“ம்ம். அப்புறம்?”


“அனு அத்தைக்கு பாஸ் மாமா, நான், அவி, அர்ஜூன்னு எல்லாரும் உறுதுணையா இருந்தோம். ஆனா தாத்தா… அவர் எங்க யாரையுமே பக்கத்துல சேர்த்துக்கலை. மனசு விட்டு பேசலை! சஞ்சுத்தான் காணாம போய் கொஞ்ச நாள் நல்லாதான் இருந்ததா சொல்லுவாங்க. அப்புறம் பாட்டி டெத்!”


அக்னி புருவ சுளிப்புடன் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.


“பார்த்திருப்பீங்களே எங்க சித்திப்பாட்டி? அவங்க எங்க பாட்டி இறந்ததும் பாஸ் மாமா கிட்ட வந்துட்டாங்க. தாத்தாவையும் கூப்பிட்டதுக்கு ஸ்ரீரங்கத்தை விட்டு வர மாட்டேனுட்டார். அனு அத்தை கூட மனசு மாறி கூப்பிட்டாங்க. இவர் வைராக்கியமா முடியாதுன்னு சொல்லிட்டார். ஆனா அவரைப் பார்க்க போகும்போது, ‘சஞ்சு இங்கே நிற்கறான்; அங்கே நிற்கறான். காப்பாத்துடா பாஸு’ன்னு அழுவார். சோ அங்கே தனியா இருந்து கஷ்டப்படறதையும் பார்க்க முடியலை. இங்கே மெண்டல் ஹெல்த்க்கும் ட்ரீட்மெண்ட் உண்டு. அதனாலதான் பாஸ் மாமா இந்த ஹோம்ல சேர்த்தாங்க. அதுவும் தாத்தாவுக்கு ஸ்லீப்பிங் பில்ஸ் கொடுத்து தூங்க வச்சுதான் இங்கே கொண்டு வந்தாங்க. அப்புறமும் டாக்டர்ஸ்க்கு ஒழுங்கா கோ-ஆபரேட் பண்ண மாட்டார். பேசாமலே அழுத்தமா நிற்பார்.”


“அவ்ளோ வருஷமும் இங்கேதான் இருக்காரா?” எனக் கேட்டவனுக்கு அடங்காத வியப்பு! இந்த மனிதருக்கு ஏன் இத்தனை வீம்பு!


“ஆமா! அனு அத்தை ஒவ்வொரு முறை இங்கே தாத்தாவைப் பார்க்க வரும்போதும் கூப்பிட தான் செய்வாங்க. வரமாட்டார்! இதென்ன வீம்பு? பிடிவாதம்ன்னு நானே கூட சில நேரம் சலிச்சு போயிருக்கேன். ஆனா அதுக்கான காரணம் இப்போ உங்கக்கிட்ட சொல்லும் போதுதான் எனக்கே தெரியுது ஸ்வரூப்!”


“ஒன்‌ மேன் ஆர்மி உங்க தாத்தா.”


“அதென்னவோ உண்மைதான்!  யூ க்நோ அக்னி, ஒவ்வொரு வருஷமும் சஞ்சுத்தான் இப்போ எப்டி இருப்பான்னு துல்லியமா சொல்லுவார். அது எப்டின்னு தான் தெரியலை. ஆனா அர்ஜூன் அர்ஜூன்னு உயிரை விட்டவருக்கு ஒரு ஸ்டேஜ்ல அவனையே அடையாளம் தெரியாம போனதுதான் ஆச்சரியம்!”


“புரியலை.” இவனுள் சிறு திகைப்பு.


“இப்போ கூட உங்களைப் பார்த்து வாடா சஞ்சுன்னு சொல்லல? இதே மாதிரி ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பையனைப் பார்த்து சஞ்சுன்னு கூப்பிடுவார். அதனாலதான் உங்களையும் அப்டி சொன்னப்போ நான் ஷாக் ஆகல. 


அதுவும் எக்ஸாக்ட்டா சஞ்சுத்தான் வயசுப் பையனை மட்டும்தான் அப்டி கூப்பிடுவார். வேஷ்டியை ரிமூவ் பண்ணுவார். அதனாலதான் எப்பவும் ரெண்டு பேர் கூடவே இருப்பாங்க. இன்னிக்கு நீங்க சஞ்சுத்தான் மாதிரி பேசவும் மனசுல இருக்கறதெல்லாம் இவ்ளோ தூரம் வெளில வந்திருக்குது.”


“அர்ஜூனைத் தெரியாதா?” மனதைப் பிசைந்தது. 


அவனுக்காக அல்லவா இவனைத் தூக்கியெறிந்தார்! இப்போது இவனின் படிப்படியான வளர்ச்சி தெரிகிறதாம்! ஆனால் அர்ஜூன் என்றால் கண்மூடிக் கொண்டு விஷத்தையும் அருந்துபவருக்கு அவனைத் தெரியவில்லையாம்!


கர்மா சகலத்தையும் கணக்கு வைத்துக்கொண்டே கழித்துக் கொள்ளுமோ!


“ம்ம், மத்த எல்லா விஷயத்துலேயும் ஓரளவு தெளிவா தான் இருப்பார். ஆனா அர்ஜூன்னு வந்துட்டா மட்டும் அவர் தோள்ல தூக்கி வச்சிட்டு நடக்கற குழந்தைதான்! அவனே நேர்ல வந்து நான்தான் அர்ஜூன்னு சொன்னா கூட அடையாளம் தெரியாது. ஆனா இப்பவும் அவன் பேரையே சொல்லிட்டிருப்பார். புத்தி பேதலிச்சு நிற்கும்போதும் தன் பேரையே சொல்றார்ன்னா, தன் மேல இந்த மனுஷனுக்கு எத்தனை பிரியம்ன்னு அர்ஜூனே கூட நிறைய நேரம் கலங்கிருக்கான்.”


“பாதெடிக்!” 


“அதெல்லாம் ஒண்ணுமில்லை. தாத்தாவுக்கு எத்தனை சொல்லியும் புரியலைன்னதும் அந்த ஹிப்போ, தான் அர்ஜூனோட தம்பி அஜய்ன்னு சொல்லி தினமும் வந்து அவரோட அரட்டையடிச்சிட்டு போவான். இப்போ தாத்தா பாஸ் மாமாவுக்கு மூணு பசங்கன்னு நம்பிட்டு இருக்கார்.”


“ஹ்ஹாஹாஹா….”


“பட் ஐ வொண்டர் ஸ்வரூப்! உங்களுக்கு எதுவும் தெரியலைன்னா கூட எப்டி அப்டியே எங்க சஞ்சுவாவே அடாப்ட் ஆகிட்டீங்க?” எனவும் இவனுக்கு பக்கென்றானது!


இவன் ரோபோவுக்கு ரோல்மாடலாக இருந்து, எங்கும் உணர்வுகளை வெளிக்காட்டவே இல்லையே… பின் எப்படி?


இவள் ஏன் இத்தனை பெரிய அறிவுவாளியாக இருக்கிறாள்!


இசைக்கும்...

Comments

  1. அப்போ சனா சீக்கிரமே கண்டுபிடிச்சிருவாபோல, ம்ம்... எப்டி தெரிஞ்சிகிறானு பார்ப்போம். சனி, ஞாயிறு லீவு விட்டுடாதீங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி 💗💗 சனி, ஞாயிறு லீவுதான். திங்கள் வருகிறேன்👋👋

      Delete

  2. Arivali kku takku kammi thaan. Arjun thaan killadi. Correct ah kandupidichan. Waiting for next update

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25