கருவறை கீதம் -30

 


(Next UD is on Wednesday.)


அத்தியாயம் 30


“நான் சொன்னது என்னாச்சு?”


“டன்!” 


“தாங்க்ஸ்.” என்று அலைப்பேசியை முடக்கிய அக்னிஸ்வரூபன் பெற்றோரின் அறைக்குச் சென்று நிரஞ்சனாவிடம், “போகலாம்மா!” என்றான். 


இன்று காலையில்தான் திருமண வரவேற்பு நடந்து முடிந்திருந்தது. மாலையில் தேனிலவிற்கு புது ஜோடியை ஹவாய் தீவிற்கு அனுப்பியிருந்தான் அக்னி. அவ்வளவு தான்! இனி நாளைக் காலை பிரகதிக்காக ஜோஜூவிடம் பார்த்து வைத்திருந்த வீட்டை அனைவருடனும் போய் பார்த்து, பேசி முடித்துவிட்டு, நாளை மாலை புறப்பட்டு தாங்களும் ஊர் போய் சேர வேண்டியதுதான் என்று நினைத்திருக்கையில், அனுராதா இவர்களைத் தங்கள் வீட்டிற்கு வரவேண்டுமென வற்புறுத்தி அழைத்தாள்.


இடைப்பட்ட நாட்களில் நிரஞ்சனாவுக்கும் அனுவுக்கும் ஒருமையில் அழைக்கும் அளவிற்கு நல்ல நட்பு உருவாகியிருந்தது. பிரபஞ்சனும் பாஸ்கரனும் தான் ஏற்கனவே பெயர் சொல்லி அழைக்குமளவிற்கு பழகியிருந்தனரே! அதன்பொருட்டு தான் அனு இவர்களை வீட்டிற்கு அழைத்திருந்தாள்.


நிரஞ்சனா தன் மாமியார் அபிராமியிடம், “மாப்பிள்ளையோட அம்மாவை விட என்னால அனுகிட்ட ஈஸியா இன்ட்ராக்ட் ஆக முடியுது அத்தை! ஷீ இஸ் இன்னஸென்ட் அண்ட் கைண்ட் ஹார்ட்டட்!” என்று சொன்னதைச் சலனமற்று பார்த்திருந்தான் அக்னி.


“பாஸ்கர் ரெண்டு நாளாவது வந்து தங்கிட்டு போகணும்ன்னு சொல்றார். நீ என்ன சொல்ற அக்னி?” என்று பிரபஞ்சன் இவனைக் கேட்க,


“ம்ம்… நீங்க இருந்துட்டு வாங்களேன்ப்பா. நான் கிளம்பறேன்.” என்று பட்டும்படாமல் சொல்ல,


அபிராமி பொரிந்து தள்ளினார். “என்னடா நினைச்சிட்ட இருக்கே உன் மனசுல? நிச்சயத்துக்கு முதல் நாளும் இப்டித்தான் வேலை இருக்குதுன்னு ஓடிட்ட? நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். எல்லாரையும் ஒரே பார்வைல தள்ளி வைக்கற! அந்த அனு உன்கிட்ட பேச வந்துட்டு தயங்கி தயங்கி உன் முகத்தையே பார்த்துட்டிருக்கா! என்னம்மான்னு கேட்டா குறைஞ்சிடுவியாடா நீ? என்னைக்கும் நாம மனுச மக்களை அனுசரிச்சு நடந்துக்கணும் அக்னி!”


“அத்தை! அவன் சுபாவமே அதுதான்னு தெரியுமில்ல? இங்கே வந்து என்னவோ புது மனுஷங்களோட ஒட்டாம இருக்கான்.” என மகனுக்கு பரிந்து வந்தாள் நிரஞ்சனா.


“இனி அவங்க புது மனுஷங்க இல்லை. பிரகதி வீட்டுக்காரங்க! அதை ஞாபகத்துல வை!” என்றார் முறைப்பாக!


“ரிலாக்ஸ் யங் லேடி! போகலாம்.” என்றவன் பிரபஞ்சனிடம், “அவங்கக்கிட்ட சொல்லிடுங்கப்பா! இங்கே தேர்ட் அம்பயர் வேற ஃபுல் ஃபார்ம்ல இருக்காங்க!” என்று சொல்லி சூழ்நிலையை இலகுவாக்கிவிட்டு வெளியே சென்றதும் முதல் வேலையாக அழைத்தது அர்ஜூனைத் தான்!


“இங்கே எல்லாரும் உங்க வீட்டுக்கு வரணும்ன்னு சொல்லிட்டிருக்காங்க.”


“உன் வீடு! நம்ம வீடு!” என்று திருத்தினான் இளையவன்.


நொடி நேர மௌனத்திற்கு பின் சொன்னான் அக்னி. “அங்கே… ம்ம்… சைல்ட்ஹூட் ஃபோட்டோஸ் இருந்தா ரிமூவ் பண்ணனும்.”


அவனும் சிறிது மௌனத்திற்கு பிறகு, “சரி!” என்றிருந்தான்.


அதைத் தான் இப்போது அர்ஜூனிடம் உறுதிபடுத்திக் கொண்டு வந்தான் இவன். போகும் வழியெல்லாம் அக்னியின் நெஞ்சம் கனம் கொண்டிருந்தது. இனி மறைப்பதில் அர்த்தமில்லைதான்! ஆனாலும் நிரஞ்சனா, பிரபஞ்சன், அபிராமியின் எதிர்வினை எப்படியிருக்குமோ என்று நினைத்துதான் கலங்கிப் போனான். அவனால் அவர்களின் துன்பத்தை, கண்ணீரை, வலியைக் காணவே இயலாது. 


ஏகாந்தமாகப் பறந்து திரிந்து கொண்டிருக்கையில் துப்பாக்கி ரவைத் துளைத்து, விழுந்து துடிதுடிக்கும் பறவைப் போல் துடித்துப் போவாள் நிரஞ்சனா. அவனால் அதனை எப்படி சகிக்கமுடியும்?


அதேநேரம் அனுவின் சோர்ந்த முகம், இவனை ஆவலோடு ஆசையாகக் காணும் அந்த நேச முகம், இத்தனை வருடங்கள் கடந்தும் தன்னை நெஞ்சில் சுமந்துக் கொண்டிருக்கும் அந்த ஆசைமுகம் நினைவில் வந்து நெஞ்சை வலிக்கச் செய்தது. இவனாலுமே இனி அனு இல்லாமல் நாட்களை நகர்த்தி வாழ்ந்துவிட முடியும் என்று தோன்றவில்லை.


கார் அந்த பின்மாலைப் பொழுதின் சென்னை கூட்டத்தில் திணறி இருமியவாறு நகர்ந்து கொண்டிருந்தது. அனைவரும் இத்தனை நேரம் அமைதியாக இருப்பதை உணர்ந்து சுதாரித்தான் அக்னி. 


“யங் லேடி! அங்கே போய் அரட்டையடிச்சிட்டு இருக்காம டின்னர் முடிச்சிட்டு, டேப்லெட்ஸ் எடுத்துக்கிட்டு தூங்கணும் என்ன?”


“உங்கம்மாதான் அந்த அனுவோட சேர்ந்து வெட்டி அரட்டை அடிச்சிக்கிட்டு இருப்பா! அவளை யாரும் ஒண்ணும் சொல்றது கிடையாது.”


“என்ன இருந்தாலும் உங்க எனர்ஜிக்கு ஈக்குவலாக முடியுமா? நீங்க திருச்சில ஆரம்பிச்சு பேங்களூர்ல முடிக்கவே விடிஞ்சிடும்.” என விடாது கலாய்க்க,


வழக்கம்போல் தன்னைத் தாங்கி பேசும் தன் குழந்தையைப் பெருமிதமாகப் பார்த்திருந்தாள் நிரஞ்சனா.


பாஸ்கரனின் பங்களா விசாலமான மூன்றடுக்குகளைக் கொண்டிருந்தது. அதன் பிரம்மாண்டத்தில் இவர்களிடம் சிறிதே மலைப்பு! அவன் அப்பாவைப் போல் வீடுகள், மனைகள், வணிக வளாகங்கள் என்றே முதலீடு செய்திருந்த பாஸ்கரன் பொருளாதார ரீதியாக உயர்தரத்தில் தான் இருந்தான்.


வீட்டின் பிரதான வாயிலிலேயே இவர்களுக்காகக் காத்திருந்தாள் அனு. கார் உள்ளே நுழைவதைப் பார்த்துவிட்டு பாஸ்கரனும் வந்துவிட, சந்தனா அவன் பின்னால் வந்தாள். சித்திப் பாட்டியும் கூட தன் இயந்திர சக்கர நாற்காலியுடன் வாசல் வரை வந்திருந்தார்.


சந்தனா இவர்கள் வருவது தெரிந்தால் ஏதேனும் காரணம் சொல்லி நழுவிவிடுவாள் என்று ஏற்கனவே கணித்திருந்த அர்ஜூன், மூச்சுக் காட்டாமல் மண்டபத்தில் இருந்தே அழைத்து வந்துவிட்டான். உண்மை தெரிய வரும்போது அவளில்லை என்றால் எப்படி? அவளும் தன் அத்தையுடன் மேலும் ஒருநாள் இருந்துவிட்டு ஊருக்கு கிளம்ப நினைத்து, அர்ஜூன் அழைத்ததும் கேள்விகளின்றி வந்துவிட்டாள். இங்கே வந்ததும்தான் அனுவின் பரபரப்பில் அவர்கள் வருவது தெரிந்தது. அதற்காக அலட்டிக்கொள்ளவுமில்லை.


பாவனா சொன்னதைக் கேட்டதிலிருந்தே அர்ஜூன் சந்தனாவைக் கவனிக்க துவங்கிவிட்டான். இயல்பாக இருப்பதைப் போல் தெரிந்தாலும், உன்னிப்பாகப் பார்த்தால் அக்னியைத் தவிர்ப்பது தெரிந்தது. இதோ இப்போதும் மற்றவர்களை வாய் நிறைய அழைத்தவள், அக்னியை ஏறிட்டும் பார்க்கவில்லை. சாதாரணம் போல் முன்னால் பாட்டியின் கைப்பிடித்து நடந்துவிட்டாள்.


காரை நிறுத்திவிட்டு வந்த அக்னி எதையும் எதிர்கொள்ளும் திடம் வேண்டுமென்று உள்ளூர உண்டான படபடப்புடனே வீட்டினுள் கால் வைத்தான். அம்மாவின் மஞ்சள் வாசனை முகத்தை வருடுவதாகத் தோன்றி அவனின் ஏக்கங்களுக்கு கூட்டல் கணக்கு போட்டது.


இரவில் அனைவரும் பேசியபடி உணவருந்தினர். நிரஞ்சனா அனுவுடன் பாந்தமாகப் பொருந்திப் போனதைக் கண்டு மகன்கள் இருவரும் மௌனப் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டனர்.


உணவு முடிந்ததும் சந்தனா தயார் செய்து வைத்திருந்த மூன்று அறைகளில், அபிராமியை ஓரறையில் தங்க வைக்கப் போய்விட்டாள். அர்ஜூனும் அக்னியை அழைத்துப் போகிறேன் பேர்வழியென்று ஓரறைக்கு தள்ளிக்கொண்டு போனான்.


ஸ்டோர் ரூம் போல் இருந்த அந்த அறையைக் கண்டு பிரமித்து நின்றுவிட்டான் அக்னி. அங்கே பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன, அர்ஜூன் மறைத்து வைத்த சஞ்சய்யின் சிறு வயது புகைப்படங்கள்! பழைய மாடல் அலைப்பேசியில் தெளிவில்லாமல் எடுத்திருந்தவற்றை ஹெச்டி செய்திருந்தான் அர்ஜூன். நான்கைந்து தான் இருந்தது. அதுவே வகை வகையாக, விதம் விதமாக பிரிண்ட் செய்து ஃப்ரேம் செய்யப்பட்டிருந்தது.


அவற்றில் அவனுடன் இன்னும் வயதில் சிறியதும் பெரியதுமாய் நிழலுருவ ஆட்கள் வேறு இருந்தார்கள். சில புகைப்படங்கள் இவனைத் தூரமாகவும் அவர்களை முன்னிலைப்படுத்தியும் இருந்தது. அனைத்து புகைப்படங்களும் காத்திருப்பு ஒன்றை மட்டுமே மைய கருவாகக் கொண்டு வரையப்பட்டிருந்தது.


“இதெல்லாம் அம்மா டிஸைன் பண்ணது. ஷேடோல இருக்கறது ஒவ்வொரு வயசுல இருக்கற நான், அத்தான், சனா! சிலதுல அம்மா, அப்பாவும் இருப்பாங்க.” என்றவன், மற்றொன்றில் இரு ஆண்கள் மறுபக்கம் திரும்பி நிற்பதைக் காட்டினான்.


அந்த நிழலுருவங்களின் பின்பகுதியைக் கண்டு, “இட்’ஸ் மீ?” எனக் கேட்ட அக்னிக்கு அவன் கண்களை நம்பவே முடியவில்லை. தற்போது அவன் எப்படி இருக்கிறானோ அதே போன்றே உயரமும் உருவமும் தோள்களும் தோரணையும் கொண்டிருந்தனர் அவர்கள்.


“ம்ம், நீதான்! உன்னைத் தேடிட்டு இருக்க மாதிரி இருக்கறவர் அப்பா.”


“ஓ! அம்மா இஸ் வெரி டேலண்டட் இன் டிசைனிங்!” என்றான் ஒவ்வொன்றையும் ஆர்வமாக பார்த்தபடி!


“டிஸைனிங்ல மட்டுமில்லை. எந்த வேலையும் பிடிச்சிருந்தா அம்மாவோட டெடிகேஷனும் பர்ஃபெக்ஷனும் எக்ஸ்ட்ரீம்தான்!” எனவும், தம்பியை நிமிர்ந்து பார்த்தான் இவன்.


அண்ணன், தம்பியின் விழிகள் அர்த்தத்துடன் பேசிக்கொண்டன. தகவல் தொழில்நுட்ப வேலையோ, மகனுக்காக மாமனாருடன் மல்லுக்கு நிற்கும் வேலையோ, அந்த மகனைத் தொலைத்த பின்னும் கண் துஞ்சாமல் கரைந்து நிற்கும் வேலையோ… எதிலும் ஆதாரமாக இருக்கும் அந்த அளவில்லா அர்ப்பணிப்பும் நேர்த்தியுமல்லவா அவளை இன்றளவிலும் ஆட்டிப் படைக்கிறது!


அர்ஜூன் ஒரு பெரிய பெட்டியைத் திறந்து காட்ட, அதில் சஞ்சயின் உடைகள், விளையாட்டு சாமான்கள், பள்ளியில் படிக்கும்போது உபயோகித்த பொருட்கள் இருந்தன. அவனின் பள்ளி டைரியைக் கூட எடுத்து வைத்திருந்தாள் அனு. அதில் மங்கியிருந்த இவனின் மழலை எழுத்துக்கள் இவனைக் குற்றம் சாட்டுவதாக உணர்ந்தான்.


“அம்மா ரூம்ல தான் இருந்தது. நைட் அதைப் பார்த்து ரொம்ப அழறாங்கன்னு டாக்டர் அவங்க கண்ல படாம வைக்கச் சொல்லிட்டார்.”


அம்மாவிற்காக கண்ணீர் உகுத்தான் இவன். “ஸாரி ஃபார் ஹெர் அர்ஜூன்…”


அவனைத் தோள் தட்டி ஆசுவாசப்படுத்தினான் சின்னவன்‌.


பிரமிப்பு விலகாமல் கேட்டான் அக்னி. “இதையெல்லாம் சோஷியல் மீடியால போட்ருந்தாலே எப்பவோ கண்டுபிடிச்சிருக்கலாமேடா?”


“ரியலா கண்ணு முன்னாடி நிற்கற உன்னையே உண்மையை ஒத்துக்க வைக்க நாலு டன் நாஷ்டா துன்ன வேண்டியிருக்குது! மோர்ஓவர் இதை மீடியாவுல போட்டா மீசை வச்ச எல்லாவனும் வந்து நான்தான் சஞ்சய் பாஸ்கர்ன்னு சொன்னா, அம்மா அத்தனைப் பேரையும் தத்தெடுத்துக்கிட்டு என் கைல திருவோட்டைக் கொடுத்துடுவாங்க!”


விளையாட்டாகப் பேசினாலும் அவன் சொல்வதில் உள்ள உண்மைப் புரிந்தது. அப்படியே அர்ஜூன் இவைகளைச் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து, அது இவன் பார்வைக்கு கிடைத்திருந்தாலும், இவன் தன் பூர்வீக வேர் தேடி வந்திருப்பானா என்பது சந்தேகம்தான்! அத்துடன் என்னதான் அர்ஜூன் விசாரித்தறிந்தாலும், சொத்துக்களுக்காக வேறொருவன் போலி ஆதாரத்துடன் உள்ளே நுழைந்து, அதனையும் அனைவரும் நம்பி, அம்மா அவனைச் சீராட்டுவதை… கருமம்! நினைக்கவே சகிக்கவில்லை. 


அத்துடன் சந்தனாவையும் அவனிடம் தூக்கிக் கொடுத்திருந்தால்..! நினைத்த மாத்திரத்தில் நெஞ்சுவலி வந்தது அக்னிக்கு! நெஞ்சின் இடப்பக்கத்தை அழுத்திக்கொண்டான்.


அர்ஜூன் அண்ணனின் முகத்தில் என்ன கண்டானோ! “ஃப்ரஷ் ஏர்?” எனக் கேட்க,


“இண்டீட்!” என்றவனை, மொட்டை மாடிக்கு அழைத்து செல்ல படியேற, 


திருப்பத்தில் ஏறும்போது, “அர்ஜூன் இன்னும் தூங்கப் போகல?” என்ற அனுவின் குரலில் எட்டிக் கீழே பார்த்தான். தோட்டத்தினருகே நின்றிருந்தாள் அவள். இவர்கள் மாடியேறுவது பலகணி வழியாகத் தெரிந்தது.


“நீ இந்நேரத்துக்கு இங்கே என்னம்மா பண்ணிட்டிருக்கே?” என அதட்டினான் மகன்.


மனிதர்களை வெகுளித்தனத்துடன் அணுகும் அனு, ஏனோ அக்னியின் விடயத்தில் மட்டும் ஆழமாக சிந்தித்து நிதானமாக செயல்பட்டாள். பட்ட அடியை மறக்காத அவளுள்ளம் தற்போது விழித்துக் கொண்டிருக்க வேண்டும். 


அதனாலேயே அவனைக் காண்கையில் எழும் தன் உள்ளத்துக் குமுறலை இதுவரை பாஸ்கரனிடம் கூட சொல்லியிருக்கவில்லை. சொன்னால் வசவு சொல் கேட்க நேரிடுவதுடன், உள்ளுக்குள் எடுக்கும் மாத்திரைகளின் அளவும் அதிகரிக்கப்படும் என புரிந்ததாலேயே கணவனிடம் சொல்லவில்லை.


‘நல்லவேளை முன்பே சொல்லியிருந்தால் தற்போது அவர்களைத் தங்கள் வீட்டிற்கு அழைக்கலாம் எனக் கேட்டதற்கு மறுப்பு சொல்லியிருப்பார் மனிதர்’ என்று நினைத்து அவள் அறிவை அவளே மெச்சிக்கொண்டாள்.


உண்மையில் இத்தனை நாட்கள்  அக்னியின் விழிகளை மிக அருகே கண்டு அலைபாய்ந்து திரிந்த அனுவின் மனம், தற்போது தங்கள் வீட்டில் அவன் மூச்சுக்காற்றின் அண்மையில் சந்தோஷமாக சாந்தமடைவதை உணர்ந்தாள். உணவு பரிமாறும் போது புதிதாய் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்டிருக்கிறதா என தினமும் பார்க்கும் சிறுமியைப் போல் அவன் முகம் பார்த்து நின்றிருந்தாள். 


அப்போது மனதைக் கட்டுப்படுத்தி இயல்பாக இருந்தவளுக்கு, அவர்களை நன்முறையில் உறங்க அனுப்பி வைத்தப் பின்னர், அதற்கு மேல் முடியாமல் மூச்செடுக்க இங்கே வந்துவிட்டாள்.


அதைச் சொன்னால் அர்ஜூனும் மாத்திரையை வாயில் திணித்து, உறங்குமாறு அறைக்குள் தள்ளி பாஸ்கரனையும் சேர்த்து திட்டுவான்.


ஆதலால் அவன் நம்பும்படியாக கையிலிருந்த அலைப்பேசியை உயர்த்திக் காட்டினாள். “நாளைக்கு காலைல பால் அதிகமா வேணும். அதான் கிருஷ்ணாவை வரும்போதே வாங்கிட்டு வரச் சொல்லி சொல்லப் போறேன்.” 


கிருஷ்ணவேணி சமையலறையில் உதவும் பணிப்பெண்!


“சரி, இப்போ எட்டிப் பார்ப்பேன். தூங்கப் போயிருக்கணும்.” என்று எச்சரித்துவிட்டு போனவனைப் பார்த்து சிரித்துக்கொண்டாள். 


அந்த அரை வெளிச்சத்தில் அவன் பின்னால் தன்னிடம் தலையசைத்துவிட்டு சென்ற அக்னியின் அசைவுகளில் அப்படியே பாஸ்கரனின் உடல்மொழி! 


அதைக் கண்டு ஆர்ப்பரிக்கும் உள்ளத்தை யாருக்கும் சொல்லாமல் அடக்கி வைக்க முயன்றாள். ஏனென்றே தெரியாமல் விழிகளில் வழியும் கண்ணீர், உள்ளம் சொல்வது உண்மை என்றதை அப்போது அனு உணரவில்லை. கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே போனாள்.


மாடியின் சுவர்ப் பகுதியில் பூச்செடிகளுக்காக நீண்ட தொட்டிகள் நாற்புறமும் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் வரிசைக்கிரமமாக தலையாட்டிக் கொண்டிருந்த அழகழகான வாசமலர்கள் அந்த ராப்பொழுதின் ரம்மியத்தை மேலும் ரசனைக்குரியதாய் மாற்றியிருந்தது. அவ்விடத்தைத் தாண்டி விளக்கைப் போட்டுவிட்டு வெளிச்சத்தில் போய் நின்றார்கள்.


மொட்டைமாடி இருள்தான் சந்தனாவின் விருப்பம். அர்ஜூன் வேண்டுமென்றே விளக்கைப் போட்டுவிட்டு, ரசனைக்கெட்ட ஜென்மமே என்ற அவளின் வசைமொழியில் இன்பம் காண்பான். சிரிப்பு வந்தது.


சற்றுநேர மௌனத்திற்கு பின் அண்ணனிடம் கேட்டான். “நீ சனாவைப் பத்தி சொன்னது நிஜமா?”


“எது?”


“நாலஞ்சு மாசம் முன்னாடியே அவளைப் பார்த்திருக்கேன்னு? உனக்கு அவளைப் பிடிச்சிருக்குதுன்னு?”


பதிலுக்கு அண்ணனின் இதழ்கள் அழகாய் விரிவதை அர்ஜூன் நம்பமாட்டாமல் பார்த்தான். “ரியலி?”


“ம்ம்!”


“இது தெரிஞ்சிருந்தா அன்னிக்கு நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணிருந்திருக்கமாட்டேன். எங்கே நீ எஸ்கேப் ஆகிடுவியோன்னு நினைச்சு கல்யாணத்துக்கு முன்னாடி அவ மனசு உனக்கு புரியணும்னு தான் பேச சொன்னேன்.”


“ம்ம்! அப்புறம் புரிஞ்சது.”


“நீ அவளை எதுவும் சொன்னியா என்ன?”


“இல்லையே! ஏன்?”


“அவ உன்னை அவாய்ட் பண்றாளாம்! உன் அத்தை மவ என்கிட்ட சண்டைக்கு வர்றா!” என அலுத்துக்கொள்ள,


மௌனமாக நிலவை வெறித்தான் அக்னிஸ்வரூபன்.





“என்னாச்சு? மேபீ ஷி டஸ்ன்’ட் லைக் யூ?” 


சந்தனாவின் அசைவுகளைத் தெள்ளெனப் புரிந்து வைத்திருக்கும் அர்ஜூன், அவளுக்கு அக்னியைப் பிடித்திருக்கிறது என்றே கணித்தான். ஆனால் அவனை ஏன் தவிர்க்கிறாள் என்ற காரணம்தான் புரியவில்லை. 


இவன் பார்வை நிலவிடமே நிலைத்திருந்தது. “நோ! ஷி லைக்ஸ் அக்னிஸ்வரூப் வெரி மச்!”


“ஸோ?” 


இளையவனுக்கு புரியவில்லை. பிடித்திருந்தால் ஏன் தவிர்க்க வேண்டும்?


இப்போது தம்பியின் முகம் பார்த்தான். “அவளோட முட்டாள்த்தனத்துக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து கொடி பிடிச்சதால அவளைப் பொறுத்தவரை, அவ சஞ்சுவோட பொண்டாட்டி! சஞ்சுவோட பொண்டாட்டி அக்னியை எப்டி லவ் பண்ணுவா? அதையும் மீறி அவளுக்கு அக்னி மேல லவ் வந்தா அதுக்கு பேர் என்னன்னு புரிஞ்சுக்கோ அர்ஜூன்!”


அர்ஜூனுக்கு திடுமென யாரோ உச்சந்தலையில் அடித்தாற் போலிருந்தது.


“அந்த பேருக்கு ஆளாக விரும்பாத சந்தனா, சஞ்சுவுக்கு ஹானஸ்டா இருக்க விரும்புறா! அப்டி நேர்மையா இருக்கணும்னா அவ மனசு அலைபாயக் கூடாது. அது அக்னிக்கிட்ட பேசினா முடியுமா? அதான் அவாய்ட் பண்றா!”


அர்ஜூன் திகைப்பும் திணறலுமாக நிலைத்த விழிகளுடன் பார்த்தான்.


“இப்போவாவது புரியுதா? அவளுக்கு நல்லது பண்றதா நினைச்சு, அவளோட கிறுக்குத்தனத்துக்கு தூபம் போட்டு இந்த கில்ட்டி ஃபீலிங்கை தான் ப்ரசெண்ட் பண்ணிருக்க நீ!”


அவளின் பதின்பருவ அபிலாஷைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறோமோ என்று தற்சமயம் சிந்தித்தான் அர்ஜூன்.


ஆனால் இன்னமும் சஞ்சுவின் மீதான அவளின் மிதவாத காதல் மிதந்து கிடக்கிறதே! எத்தனை முறை அவளின் காதலின் அடர்த்தியை நினைத்து ஒரு தோழனாக பிரமித்திருக்கிறான் இவன்! அனுவிற்காக இல்லையென்றாலும் சந்தனாவிற்காக எப்படியும் சஞ்சுவைக் கண்டறிந்தே தீரவேண்டும் என்ற வெறியில் சுற்றிய நாட்கள் எத்தனையோ உண்டே! அதன் பலனல்லவா இன்று அவன் முன் நிற்கிறது! 


எனவே அடித்துச் சொன்னான் அர்ஜூன். “ஆனா, எனக்கு தெரியும்! அவ உன்னை… ஐ மீன் சஞ்சுவை ரொம்ப லவ் பண்றா! அது அம்மாவோ தாத்தாவோ சொன்னதுனால இல்ல. அது ஒரு அடமெண்ட்டான கேரக்டர். யார் சொல்றதையும் கேட்காது. எந்த விஷயத்துலலேயும் அவளே மனசு வச்சா தான் உண்டு.”


“பெருமைதான்!”


“நானென்ன பண்ணட்டும்? அவக்கிட்ட இது செட்டாகுதுன்னு எத்தனையோ முறை சண்டை போட்டிருக்கேன். அப்பாவையே வாயடைக்க வச்சிடுவா! அவ லவ்ல அவ்ளோ ஸ்ட்ராங்கா இருப்பா! அதான் உன்னைத் தள்ளி வைக்க நினைக்கறா போல!”


“அது காதல் இல்லடா; பாசம்! யோசிச்சு பாரு, நியாயமா பார்த்தா திடீர்ன்னு வந்து நிற்கிற என் மேல உனக்கும் அவினாஷ்க்கும் பொறாமையும் கோபமும்தான் வந்திருக்கணும். ஆனா ரெண்டு பேரும் என்னை அவ்ளோ தேடறீங்க. ஏன்?”


“ஏன்? எங்களுக்கு பாசம் இருக்கக்கூடாதா?”


“அஃப்கோர்ஸ்! குழந்தைகளை ஹேண்டில் பண்ற விதத்துல அம்மா ஒரு சுப்பீரியரா இருந்திருக்கணும். அவங்க எப்டி உனக்கும் அவினாஷ்க்கும் என் மேல ஒரு பாசத்தை உருவாக்கி வச்சிருக்காங்களோ, அதே மாதிரிதான் உங்க கூட வளர்ந்த அவக்கிட்டேயும் சொல்லிருப்பாங்க. உரிமையுள்ளவங்றதால விவரம் புரியாத வயசுல அது அப்டியே மனசுல பதிஞ்சிருக்குது. அது ஒருவித அராஜகமான, அழுத்தமானப் பாசம்!”


உண்மைதானோ என்று தோன்றியது இளையவனுக்கு. இன்றும் சஞ்சுவின் மேல் இவனுக்கு சிறு பொறாமையும் வராததுடன், நான்கு வயதிற்கு பிறகு பார்த்தே இராதவனின் மேல் பாசம் மட்டும் வருகிறதென்றால், அதற்கு காரணம் தன் அம்மா தானல்லவா? 


“இதெல்லாம் நான் ப்ரபோஸ் பண்ற வரைக்கும், அவளுக்கும் என் மேல ஒரு டைலமா வர்ற வரைக்கும் அவளுக்கே புரிஞ்சிருக்காது. இனி புரிஞ்சாலும் கூட சஞ்சு பொண்டாட்டியா இருக்கறவ அக்னியைத் திரும்பிப் பார்க்கமாட்டா!”


“அப்போ நாம உண்மையைச் சொல்லிடலாம். சஞ்சுவும் அக்னியும் ஒருத்தர்தான் அப்டீன்னா அவளுக்கு இந்த ஸ்ட்ரகிள் இருக்காதுல்ல? இன்னும் நாம எதுக்காக காத்திருக்கணும்?”


தயங்கினான் அக்னி‌. “நான் இன்னும் கொஞ்சம் யோசிக்கணும்.”


“எதுக்கு? உண்மையை ஒத்துக்கறதுக்கா?”


“அப்டியில்ல அர்ஜூன்! எல்லாத்துக்கும் நான் ரெடியா தான் இருக்கேன். அதுக்கான வேலைகளும் போயிக்கிட்டிருக்குது. ஆனா கொஞ்சம் தள்ளிப் போடலாம்ன்னு தோணுது.”


“என்ன வேலை? எதுக்கு தள்ளி போடணும்? எப்டியும் அவி அத்தான் உங்க வீட்டுக்கு வந்தா உண்மைத் தெரியத்தான் போகுது. இன்னும் எத்தனை நாளைக்கு பெங்களூர்ல நீயும் சென்னைல நானும் உன் ஃபோட்டோவை மறைச்சு வைக்கமுடியும்?” 


“வேற வழியில்லை. ப்ளீஸ் அர்ஜூன்… அம்மாவுக்கு (நிரஞ்சனா) என் மேல பாசம் அதிகம்.” இறைஞ்சினான் இவன்.


“அம்மாவுக்கும் (அனு) உன் மேல பாசம் அதிகம்.” என்றானவன் இமைக்காமல்!


“சூழ்நிலை கைதியா நிற்கறேண்டா நானு!”


“புரியுதுண்ணா… ஆனா… தெரியறதுக்கு முன்னாடி எப்டியோ! இப்போ நீதான் சஞ்சுன்னு தெரிஞ்சதுக்கப்புறம் உண்மையை எவ்ளோ நாள் மறைக்க முடியும்ன்னு நினைக்கற?”


அப்போது பின்னால் பூச்செடிகளுக்கானக் கட்டிலிருந்து சிறு கல்லொன்று ‘தட்’டென்று உருண்டு விழும் சப்தம் கேட்டதில் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.


இசைக்கும்...

Comments

  1. ayayo ipdi mudichitingale athu yaaru Sana.. Anu... illa niranjana manda odanjurum 3 naal la seekirama podunga ka next epi

    ReplyDelete
    Replies
    1. Thank you Vaasu🎈🎈 3naal illa. Only 2days dhan💗💗

      Delete
  2. Yarunnu seekiram sollunga pa.. Sandhana maari thanae?

    ReplyDelete
    Replies
    1. Thank u 💗💗 Today epi update panniten. Padichitu sollunga 🪻🪻

      Delete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25