கருவறை கீதம் -31

 



அத்தியாயம் 31 


பூச்செடிகளுக்கானக் கட்டிலிருந்து சிறிய கல்லொன்று உருண்டு விழுந்ததையடுத்து, அண்ணன், தம்பி இருவரும் திரும்பிப் பார்க்க, இருளில் இருந்து மெல்ல வெளிச்சத்திற்கு வந்தாள் அனுராதா. 


மீண்டும் அக்னியை அருகே ஒருமுறை கண்டுவிட்டால் இன்றிரவு தூக்க மாத்திரைக்கு வேலை வைக்காமலும் கணவனைத் தொந்தரவு செய்யாமலும் நிம்மதியாக தூங்கிவிடலாம் என்று தோன்றவே, அர்ஜூனுக்கு சந்தேகம் வந்து விடாதபடி இருவருக்கும் கற்கண்டு பால் எடுத்துக்கொண்டு வந்திருந்தாள் அவள். வந்தவள் அர்ஜூனின் கடைசி உரையாடலை மிகத் தெளிவாகக் கேட்டிருந்தாள். 


அப்போதுதான் பிடிமானத்திற்காகக் கை வைக்க, அங்கிருந்த கல்லொன்று உருண்டோடி வந்து, அந்த நிசப்தப் பொழுதில் அவள் மக்களின் கவனத்தைக் கலைத்தது.


அம்மாவைக் கண்டதும் அர்ஜூன் சாந்தமான பார்வையுடன் அப்படியே நிற்க, “ம்மா!” எனப் பதற்றத்துடன் அவளருகே ஓடி தள்ளாடியவளைப் பிடித்திருந்தான் சஞ்சய்.


“சஞ்சு!” கண்ணீர் தளும்பிய கீச்சுக்குரல் மிகமிக மெலிதாக ஒலித்தது.


அம்மாவின் குரலில் தன்‌ பெயரைக் கேட்டவன் புன்னகைக்க முயன்றபடி, “எஸ்ம்மா! உன் சஞ்சு!” என்றான் இயல்பாக! 


நடுக்கம் கொண்டிருந்த அவள் கையிலிருந்து தட்டை வாங்கி அருகே வைக்க, பெருந்தேம்பலுடன் முகத்தை இரு கரங்களால் மூடிக்கொண்டு அவன் காலடியில் மடங்கி அமர்ந்துவிட்டாள் அனு.


“ம்மா!” அவள் முன் மண்டியிட்டான்.


அவள் கத்தவில்லை; கதறவில்லை. அதிர்ச்சியோ அயர்ச்சியோ அடையவில்லை. மெய்தானா என நம்பகத்தன்மையை நசுக்கிப் பார்க்கவில்லை.


ஒவ்வொரு முறையும் அக்னியை, அவன் விழிகளை அருகில் காணும்போதும், இருதயம் கூப்பாடு போட்டு அடிவயிற்றில் ஓர் சுக கனத்தைத் தந்திருந்ததே! ஜன்னலுரசும் மரத்தின் இளங்குயில் ஒன்றின் இன்னிசையை ரசிப்பதைப் போலவே உள்ளம் இன்புற்றிருந்ததே! அதனாலல்லவா இன்றைய தூக்க மாத்திரையின் வேலையை அவன் கண்களைச் செய்ய வைக்க எண்ணி, இப்போது அவசியமே இல்லாமல் பால் டம்ளரைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்திருக்கிறாள்!


ஆக ஏற்கனவே அவள் அடிமனதிற்கு தெரிந்திருந்த உண்மை, இப்போது வெளிப்பட்டதில் அவள் பதற்றம் கொள்ளவில்லை. 


இந்த க்ஷணத்தை, மகனின் அண்மையை, அது தரும் அடர்ந்த நிம்மதியை நெஞ்சம் விம்ம ஆழ்ந்து அனுபவித்தவள், உதடுகள் நடுங்க ஈர விழிகளுடன் இளைய மகனைப் ஏறிட்டாள். புன்னகைத்த இளையவன் கண்ணீர் கண்களுடன் இமைகள் சிமிட்டி, இதுதான் வழமை என்பதைப் போல் அவள்முன் குனிய, நன்றியாக ஓர் நெற்றி முத்தத்தைப் பரிசளித்தாள் அனு. 


பார்த்திருந்த இவன் கண்களில் சட்டென்று கோர்த்துக்கொண்டது ஓர் பொறாமை கங்கு! ஆனாலும் அமைதியாகப்‌ பார்த்திருக்க, அவன் விழிகளைப் படித்தவள் தாமாகவே அவன் பின்னந்தலைச் சாய்த்து உச்சந்தலையில் முத்தமிட்டாள். 


மூடிக்கொண்ட 

விழிகளின் வழி 

ஒழுகி ஓடியது -அவன் 

பெருந்துயரின் சிறுதுளி!


அம்மாவை மெதுவாகத் தோளணைத்து எழுப்பி நிறுத்த, கரங்கள் நடுங்க அவன் முகத்தை வருடியவளின் முசுமுசுவென்ற குரல் உடைந்துடைந்து வெளிவந்தது. “லாங் ஜர்னி… டிராவல்ட் அ லாங் ஜர்னி வித் அவுட் யூ, சஞ்சு!”


“ஐ’ம் ஸாரிம்மா!” என்றபோது,


“அஜூ பேபி, இங்கே பாரேன்…” என்று எப்போதும் போல் கத்திக்கொண்டு கால்கள் தரையில் பாவாமல் ஓடி வந்தாள் சந்தனா. 


அலைப்பேசியில் தங்கள் தோழியொருத்தி திடீர் திருமணம் என்று பதிவேற்றியிருந்த புகைப்படத்தைக் கண்டு, அதை அர்ஜூனிடம் காட்டுவதற்தாக அவனறையில் தேடிவிட்டு, அவன் அங்கில்லை என்றதும் தோட்டத்தில் பார்த்தாள். அங்கே மாடி விளக்கின் வெளிச்சம் விழ, உடனேயே குதித்துக்கொண்டு வந்தாயிற்று.


வந்தவள் அக்னியின் கரங்களுக்குள் தன் அத்தை நிற்பதைக் கண்டு கேள்வியாகப் பார்த்தாள். இருவரின் முகங்களும் விகசித்திருந்தன.


அனு அவளைக் கண்டதும், சஞ்சுவின் முகம் பார்த்து, “சனா?” என வினவ,


“தெரியும்.” என்றான் அவன்.


“உனக்கு…”


“மை ப்ளஷர் ட்டூ!” 


பூவாய் மலர்ந்தது அனுவின் முகம்! 


சந்தனமாரிக்கு இருவரும் என்னப் பேசுகிறார்கள் என்று புரியவில்லை.


அனு அழுதபடியே, “சனாக்குட்டி, வாழ்க்கை முழுசும் உன்னை நினைச்சு குற்றவுணர்வுலயே செத்துடுவேனோன்னு அத்தை பயந்திட்டிருந்தேண்டா!” என்று அவள் கரத்தை அழுந்தப் பற்றி, அவளை அக்னியின் அருகே நிறுத்தி இருவரின் கரங்களையும் பிணைத்து வைக்க,


“அத்தை!” என்று அதட்டல் போட்டவள், அத்தைக்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டது என்று கையை உருவிக்கொண்டு அர்ஜூனைப் பார்க்க, அவன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நீர் தேங்கிய கண்களுடன் அனுவைப் பார்த்திருந்தான்.


‘என்னவாயிற்று இவனுக்கு?’


சந்தனா உள்மனம் சொன்ன உண்மையை நம்பாமல் பக்கவாட்டில் திரும்பி, “மிஸ்டர் அக்னிஸ்வரூப், டோண்ட் மிஸ்டேக்! அத்தைக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை.” என,


அம்மாவின் மீதிருந்த பார்வையைத் திருப்பாது இடவலமாகத் தலையசைத்தவன், “ம்ஹூம்!” என்றான்.


அவ்வளவுதான்! அனு பெரும் விம்மலுடன் தன் மூத்த மகனின் மார்பில் சாய்ந்திருந்தாள். இத்தனை வருடங்களில் யார் யாரோ தன் மனநிலைக் குறித்து கேலியாகச் சொன்னதெல்லாம் மகனின் இல்லையென்ற ஒற்றைத் தலையாட்டலில் மறைந்து போனது. கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.


தன் மார்பில் சாய்ந்தவரை அக்னி இரு கரங்கொண்டு அணைத்துக்கொண்டான். “என் அம்மாவுக்கு ஒண்ணுமில்லை. ஷி’ஸ் டாம்ன் குட்!” என்றவனின் குரலும் உணர்ச்சிவசத்தில் நடுங்கியது.

 

சந்தனா பேச்சற்று நின்றிருந்தாள். தாத்தாவிடம் நடந்து கொண்டதைப் போல் அத்தையிடமும் அவரின் மனநிலையை ஈடுகட்ட இப்படி பேசுகிறானோ என்று எண்ணமிட்டாலும், அக்னியின் முக விகசிப்பும், அர்ஜூனின் அமைதியும் எதையோ உணர்த்த முற்பட்டது.


அர்ஜூன் அவளருகே வந்து தோளில் கையிட, அதிர்ச்சி விலகாமல் அவனைப் பார்த்தாள். அவன் சற்றே தலைசாய்த்து, இதழ் வளைத்து பாவனையாக புருவம் உயர்த்தி மற்ற இருவரையும் காட்ட, அவளுக்கும் கண்கள் கலங்கும்போல் இருந்தது.


முடிவிலியாய் நீண்ட காத்திருப்பு முற்று பெற்றுவிட்டதா? இவள் நெஞ்சில் சுமக்கும் மொட்டுக் காதல் முகிழ்த்தேவிட்டதா?


“அஜூ?” கிசுகிசு குரலில் கேள்வியாக அழைத்தவளின் கரம் அர்ஜூனின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டது.


அனு சஞ்சயிடமிருந்து பிரிந்து இவளருகே வந்து புரிய வைக்க முயல,


அப்போது, “எல்லாரும் தூங்க போகாம இங்கே என்ன பண்ணிட்டிருக்கீங்க?” என்றபடி பாஸ்கரன் அங்கே வந்தான். உறங்கப் புறப்பட்டதால் அணிந்திருந்த கண்ணாடிக்கு ஓய்வளித்திருந்தான்.


“பாஸ் மாமா!” என்ற சந்தனா தன் கருவிழிகளை இடவலமாக அசைத்து, பாஸ்கரனின் இரு கண்களையும் அளவெடுத்துக் கொண்டு, எடுத்த அளவுகள் சரிதானா என அக்னியின் கண்களைக் கண்டு பரிசோதித்துவிட்டு மீண்டும், “பாஸ் மாமா!” என்றாள் சிறுகுழந்தையாக!


“என்னடா? மாமாவைக் கண்ணாடி இல்லாம பார்க்க பயமாயிருக்கா?” என்று சிரிக்க,


அங்கே அவன் மட்டுமே சிரிப்பதை உணர்ந்து மற்றவர்களைப் பார்த்தவனின் விழிகள் சந்தனா, அர்ஜூனின் கரத்தை விடாமல் இறுக்கியிருந்ததையும் அவள் கண்ணீரும் அதிர்ச்சியுமாய் விழிப்பதையும் கேள்வியாக நோக்கியது.


“என்னாச்சுடா? மொட்டை மாடில பேய் இருக்குதுன்னு சொல்லி பயமுறுத்தினானா இவன்?”


“பேய் இல்லை பாஸ்கர்! நம்ம சஞ்சுவைப் பார்த்துதான் அரண்டுட்டா!” என்ற அனு மந்தகசிப்புடன், பொங்கும் விழிநீரைத் துடைத்துக்கொள்ள, 


இப்போது பாஸ்கரனுமே அவளை ஆழ்ந்து பார்த்தான். சூழ்நிலையும் அத்தனை இறுக்கமாக தானே இருந்தது!


“நம்ம சஞ்சு, பாஸ்கர்!” என அக்னியின் கரம்பிடித்து காட்ட,


சந்தனாவைப் போலவே நம்பாமல் அதட்டினான் அவன். “அனு! டேப்லெட் போட்டியா? தூங்கலாம் வா! ஸாரி தம்பி!”


“அப்பா!” -சஞ்சய் பாஸ்கர்.


பாஸ்கரனுக்கு சில நொடிகள் மூச்சு நின்றுவிட்டாற் போலிருந்தது. நகர நினைத்திருந்தவன் விழி திருப்பி பார்த்தான்.


“ஐ’ம் சஞ்சய் பாஸ்கர்!” என்றதில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டான் பாஸ்கரன். 


கண்ணீர் எதிரிலிருப்பவனைப் பார்க்கவேண்டி கூப்பிடாமலேயே ஓடி வந்தது. பக்கவாட்டில் அர்ஜூனைத் திரும்பிப் பார்க்க ஆமோதிப்பாகத் தலையசைத்தான் அவன்.


நின்றிருந்த சுவாசம் வேக வேகமாக வேலை செய்ய ஆரம்பிக்க, அதிர்ந்து நின்றவாறே வேக மூச்சுக்களை எடுத்துக்கொண்டு தன் மூத்த மகனை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு, அதே வேகத்தோடே அவனை இறுக அணைத்துக் கொண்டான். இருபத்திரண்டு வருடங்களாக அடக்கி வைத்திருந்த அழுகையை இருபதே நொடிகளில் சுத்திகரித்து விடுபவன் போல் சத்தமின்றி மகனின் தோளை நனைத்தான்.


அனு ஒருபுறம் மகனின் கையணைப்பில் கண்ணீர் வடித்தாள். யாரும் கத்தி கூப்பாடு போடவில்லை. நிலவொளியில் மௌனக் காற்றைச் சுகித்தபடி இவர்களின் விசும்பல்களை வேடிக்கைப் பார்த்திருந்தது அந்த மொட்டைமாடி.


கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் கடந்த பின், பாஸ்கரன் நிமிர்ந்தான். அதுவரை அவனையும் சஞ்சய்யின் ஒரு கரம் சுற்றியிருந்தது. அவனின் வலக்கரத்தைப் பற்றிக்கொண்ட பாஸ்கரனின் கை நடுக்கம் இன்னும் நின்றபாடில்லை.


ஆச்சரியமாக அனுராதா தெளிந்திருந்தாள். அநாவசிய உணர்ச்சி தளும்பல்களுக்கு இடங்கொடாமல் நிமிர்ந்து நின்றவளின் கண்களில் ஒளி வீசியது. தன் மகனுக்காக தன் மாமனாரிடம் அறப்போராட்டம் நிகழ்த்திய அனு மீண்டிருந்தாள்.


கண்களைத் துடைத்துக் கொண்டு புன்சிரிப்புடன் இளையவர்களின் புறம் திரும்பினாள். “சனா, உன் சஞ்சுத்தான் வந்துட்டான். வா, வந்து அவனைக் கூப்பிடு!”


“?!”


“வாடீ! சஞ்சு, சனாவுக்கு நீ’ன்னா ரொம்ப இஷ்டம் தெரியுமா? குழந்தையா இருக்கும்போது சஞ்சுத்தான், சஞ்சுத்தான்னு உன் பின்னாடியே சுத்துவாளே ஞாபகம் இருக்குதா? இப்பவும் உன் மேல அவ அன்பு மாறலை சஞ்சு!”


சந்தனா அர்ஜூனின் முகம் பார்த்தாள். தன் மனம் அக்னியிடம் தடுமாறியிருந்தாலும் கூட, பிரகதியின் அண்ணனாக அறிமுகமான ஒருவனை, இத்தனை நாட்கள் ‘மிஸ்டர் அக்னிஸ்வரூப்’ என்ற அளவில் நிறுத்தி வைத்திருந்த ஒருவனை சட்டென அத்தான் என்று அழைக்க வரவில்லை. அதிலும் அத்தை தன் உள்ளத்தை அவனிடம் கடைப்பரப்புவதில் நிரம்பவே சங்கோஜமாக உணர்ந்தாள். அத்துடன் இவள் வேறு அவனிடம் ஏதேதோ உளறிக் கொட்டியிருக்கிறாளே!


‘ஐயோ பெருமாளே!’


ஆசிரியரிடம் போக அஞ்சி, அம்மாவின் கரத்தை விடாது நிற்கும் குழந்தைப் போல் அர்ஜூனின் கையைக் கெட்டியாகப் பிடித்து நின்றிருந்தாள்.


பாஸ்கரன் அர்ஜூனிடம் கேட்டான். “உனக்கு எப்போடா தெரியும்?”


“நிர்மா அத்தை பிரகதியை, அவ ஃபேமிலியைப் பத்தி விசாரிக்க சொன்னப்போ தான்! அதுல அவளோட அண்ணன் ஃபாஸ்டர் சைல்ட்ன்னு ரிசல்ட் வந்ததுல தான் எனக்கு முதல் சந்தேகம் வந்தது டாடி. ஏன்னா அவி அத்தானும் நம்ம டிடெக்டிவ்வும் சஞ்சு பேங்களூர்ல தான் இருக்கணும்ன்னு மார்க் பண்ணிருந்தாங்க.


ஆனா அப்போ கூட நான் இப்டி இருக்கும்ன்னு சீரியஸா நினைக்கலப்பா. ஜஸ்ட் அக்னியோட பாஸ்ட்டைக் கொஞ்சம் நோண்டினேன். அப்போதான் எனக்கு ஷாக்கிங்கா இருந்தது. அக்னிஸ்வரூப்ன்ற பேர்ல இவன் அங்கே போய் சேர்ந்த தேதி, மாசம் எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாடி காட்டுச்சு. ஆனா ஃபோட்டோ நம்ம சஞ்சுவோடது!  அப்புறம்ம்ம்…”


கேட்டுக் கொண்டிருந்த அக்னியின்… சஞ்சுவின்(ரெண்டுல உங்களுக்கு பிடிச்ச பேரைச் சொல்லிக்கோங்கப்பா) இதழோரம் சிறு புன்னகை தவழ்ந்தது.


“என்னடா?”


“ஸாரி டாட்! நமக்கு எவிடென்ஸ் வேணும்னு பெங்களூர்ல இவன் காருக்கு சின்னதா ஒரு ஆக்ஸிடெண்ட் பண்ணி விட்டுட்டேன்.”


“டேய்!” -அனு.


“யோசிக்காம செய்ய மாட்டேன்ம்மா! இட் வாஸ் நாட் அ டிராஜிக் ஆக்ஸிடென்ட்! ஹாஸ்பிடல் இருக்க ஏரியாவா பார்த்து, ஸ்பாட்டுக்கு பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடல்க்கு தான் போவான்னு பிரிடிக்ட் செஞ்சு, அங்கே இருக்க ஒரு நர்ஸைக் கரெக்ட் பண்ணி, ப்ளட் டெஸ்ட் எடுக்க வச்சேன். அதை வச்சு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து… அவ்ளோதான் டாடி!”


சஞ்சுவைத் தவிர்த்துக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு மலைப்பாக இருந்தது. அர்ஜூன் இரண்டு மாதங்களுக்கு முன்பு அடிக்கடி செய்த பெங்களூர் பயணங்களெல்லாம் சந்தனாவைக் காணத் தான் என்று இவர்கள் நினைத்திருக்க, இளையவன் சத்தமில்லாமல் எத்தனை வேலைகளை முடித்திருக்கிறான்!


சஞ்சய், “ம்ம்! எவிடென்ஸ் வச்சு கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு என்னை மிரட்டினதையும் சொல்லேன்!” என்றான் கிண்டலாக!


இப்போது பாஸ்கரனின் பார்வை மூத்த மகனிடம் திரும்ப, அவன் சொன்னான். “எனக்கும் அவினாஷ் ஃபேமிலியை விசாரிக்கும்போது தான் தெரிஞ்சதுப்பா. இதனால கல்யாணத்துல குழப்பம் வந்துட வேணாம்ன்னு தான் மேரேஜ் முடியற வரை வெய்ட் பண்ணேன்.”


“பிரபுவுக்கு…”


“யாருக்கும் இன்னும் தெரியாது. நாளைக்கு தான் சொல்லணும்.”


பெருமூச்சுடன் மனைவியைப் பார்த்தான். அவள் சொன்னாள். “நான் எல்லாத்துக்கும் ரெடியா இருப்பேன்ங்க. எப்பவும் ரஞ்சியோட மனசை ஹர்ட் பண்ண மாட்டேன்.”


அவளின் தெளிவில் பாஸ்கரன், அர்ஜூன், சந்தனாவிற்கும் பெருத்த ஆச்சரியம்தான்! மனைவியை இப்படி பார்க்க பாஸ்கரனின் மனம் நிறைந்தது. ‘அவளின் விசும்பலை நிறுத்த எவனொருவனால் முடியுமோ, அவனை நான் சாகும் முன் கண்ணில் காட்டிவிடு இறைவா!’ எனப் பரம்பொருளிடம்‌ யாசிக்காத நாளில்லை. அவனின் யாசிப்பின் பலனாக ‘அவன்’ வந்தே விட்டான்.


மனம் நிறைந்திருக்க, கண்களும் நிறைந்தது. அப்படியே அனுவை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான். அவனின் தோள்கள் குலுங்கியது.


“எனக்காக இத்தனை கண்ணீரைச் சேர்த்து வச்சிருந்தீங்களா பாஸ்கர்?” எப்போதும் கணவன்தானே அவளைச் சமாதானம் செய்து தூங்க வைப்பான்! இன்று சிறு குழந்தையாய்த் தேம்புபவனை அவள் தேற்றினாள். 


அவர்களைப் பிரித்துவிட்டு, இருவரையும் தோளுக்கொருவராய்ச் சேர்த்தணைத்துக் கொண்டு, “இனி அழ வேணாம்ப்பா!” என்ற சஞ்சய் பாஸ்கரின் விழிகளும் கலங்கியது.


மீண்டும் ஓர் பெரும் பாசப் போராட்டம்!


அர்ஜூன் அம்மாவின் தெளிந்த முகத்தைக் கண்டு, இலக்கை அடைந்துவிட்ட ஆசுவாசத்தில் இருந்ததால், சந்தனா அவன் டீ-ஷர்ட்டின் இடக்கைப் பகுதியில் மூக்கைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்தும் கூட சும்மா இருந்தான். அவள் இன்னும் அர்ஜூனின் கையை விட்டிருக்கவில்லை.


ஒரு வழியாக பாஸ்கரன் தேறிக் கொண்டு சந்தனாவைப் பார்க்க, கண்ணீரில் கலங்கியிருந்த அவள் முகம் கலவரத்தைப் பிரதிபலித்தது. அவள் மனதிலிருந்த உயிரற்ற ஓவியம் முழு உருவம் பெற்று, உயிர் சுமந்து, அவள் முன் நிற்பதில் ஏற்பட்ட முதற்கட்ட அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை. அதற்குள் பெரியவர்களின் அடுத்த நகர்வு என்னவாக இருக்குமென்று ஊகிக்க முடிந்த அந்த அறிவுப்பெண்ணால் அதனைத் தடாலடியாக ஏற்கவும் இயலவில்லை.


தயக்கமோ! தடுமாற்றமோ! என்ன கண்றாவியோ! நம் பாஷையில் அதற்கு பெயர் ‘ஸ்டார்டிங் டிரிபிள்’!


அர்ஜூனிற்கு அவளின் நிலை சிரிப்பை வரவழைத்தது. அவனுக்கு அவளைக் கேலி செய்தே காலி செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பல்லவா?


பாஸ்கரன் மருமகளின் முகத்தைக் கண்டு என்ன நினைத்தானோ! “ரெண்டு பேரும் போய் தூங்குங்க. காலைல பேசிக்கலாம். கூட்டிட்டு போ அர்ஜூன்!”


சட்டென அர்ஜூனின் கரத்தை விட்டுவிட்டு போய்விட்டாள் அவள். “அடிப்பாவி!” எனச் சிரித்தவன் அவள் பின்னோடு போனான். 


“அண்ணி! அண்ணி! அண்ணி!” என ராகம் பாடியவாறு படியிறங்க கால் வைத்தவனை, 


“போடா ஹிப்போ!” என மீண்டும் வெளியே தள்ளியிருந்தாள்.


“அவளுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடு அர்ஜூன்!” என்று பாஸ்கரன் மகனைக் கண்டிக்க, தோள் குலுக்கிவிட்டு போனான் அவன்.


நள்ளிரவைத் தொட்டால் இருளுக்கு பங்கம் வராதென்று மெல்ல நகர்ந்து, பன்னிரண்டைத் தொட்டு சல்லாபம் செய்தது கடிகார முள்.


“நாமளும் போகலாம் அனு.”


சஞ்சயின் முகம் பார்த்தவாறே, “நான் நிறைய பேசணும்.” என்றாள் அவள்.


“அவன் தூங்க வேணாமாடீ?” என்ற பாஸ்கரன் மகனிடம் கண்ணைக் காட்ட, 


அவன் சொன்னான். “இனி தினமும் நிறைய பேசலாம்மா! நான் எப்பவும் உன் கூடவேதான் இருப்பேன்.”


முகத்தில் சிறு ஏமாற்றம் கவிழ, “சரி!” என்றுவிட்டு நகர்ந்தாள்.


பாஸ்கரன் மீண்டும் மகனின் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டான். “சஞ்சு, காலைல கேட்கறதுதான் சரி! ஆனா கேட்காம ராத்திரி தூங்க முடியும்ன்னு தோணலை.”


“கேளுங்கப்பா!”


கண்ணீர் குரலில் கேட்டான். “வீட்டுல இருந்தவன் எப்டி காணாம போனன்னு ஞாபகம் இருக்குதா சஞ்சு?”


சந்தனாவின் உபயத்தில் ஏற்கனவே தாத்தாவின் வாய்மொழி பற்றி கேட்டிருந்ததால், தயார் செய்து வைத்திருந்த பதிலைச் சொன்னான் மகன்.


“தாத்தா கூட கோவிலுக்கு போனப்போ… சில டிரான்ஸ்ஜென்டர் கிட்ட மாட்டிக்கிட்டேன். அவங்க என்னைத் திருச்சிக்கு கொண்டு போயிட்டாங்க. அப்போ அந்த ஊர் திருச்சின்னு கூட எனக்கு தெரியாது. அங்கே அவங்கக்கிட்ட இருந்து எஸ்கேப் ஆனப்போ தான் அப்பாவைப் பார்த்தேன்.”


“ஹ்ம்ம்!”


“என்னப்பா?”


“அப்போ அவர்தானா? எங்கப்பா… எங்கப்பா தான் உன்னை ஏதோ செஞ்சுட்டதா அனு சொல்லிட்டே இருப்பா! முதல்ல நான் அதை நம்பல. அப்புறம் அவர் ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கும்போது அவரே என்கிட்ட ஏதேதோ உளறினார்.”


ஒவ்வொரு முறையும் சஞ்சுவைப் போன்ற பையனைப் பார்க்க நேரிட்டால், ‘நான் செய்ததைப் நீயும் எனக்கு செய்து விடு!’ என்று சொல்லி அவர் வேட்டியை களைவதிலிருந்து பாஸ்கரனுக்கு ஒரு ஊகம் இருந்தது. அப்போதெல்லாம் தன் குழந்தையை எண்ணி உயிர் துடிக்க அது உண்மையாக இருந்து விடக்கூடாதென்றே வேண்டிக் கொள்வான். ஏன் அவினாஷ், அர்ஜூனுக்கும் கூட ‘சைல்ட் அப்யூஸ்’ என்ற வகையில் புரிந்திருக்கலாம். 


“ம்ம்! சந்தனா சொன்னா!”


“எங்கப்பா பத்தியா?”


“உங்கப்பா என் தாத்தா இல்லையா?”


மகனின்‌ அந்த ஒரே கேள்வியில், “சஞ்சு…” என்ற பாஸ்கரன் மேலே பேச திராணியற்றவனாக அவன் காலடியில் அமர்ந்துவிட்டான்.


சட்டென தரையில் ஒரு காலை மடித்தமர்ந்த சஞ்சய் அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான். “அப்பா ப்ளீஸ் கன்ட்ரோல் யோர்ஸெல்ஃப்!”


அவனும் கட்டுப்படுத்த தான் நினைக்கிறான். முடியவில்லையே! அனு சொன்னதைப் போல் இத்தனை வருடங்களாக தேக்கி வைத்திருந்த கண்ணீர் விடுதலை பெற்று மகனின் காலை நனைக்கவே நினைக்கிறது.


இத்தனை வலிகளுக்கு பிறகும், வருடங்களுக்கு பிறகும் ‘என் தாத்தா’ எனும் மகன் எப்பேற்பட்ட மாட்சிமை பொருந்தியவனாக இருக்க வேண்டும்! அப்படிப்பட்டவனின் காலை கண்ணீரில் நனைப்பதில் தவறொன்றுமில்லை என்று நினைத்தான் பாஸ்கரன். அந்த நிறைகுணத்தின், ஜீவகாருண்யத்தின் பால்யங்களை இழந்ததுவே தனக்கும் அனுவுக்குமான மகத்தான தண்டனையாக தோன்றியது இக்கணம்!


“அவர் மேல எனக்கு நிறையவே கோபமிருக்குது. ஆனா ஒரு மகனா அவர்க்கிட்டேயும் ஒரு தகப்பனா உன்கிட்டேயும் தோத்துட்டேன் சஞ்சு.”


“இல்லப்பா. ரெண்டு உறவுகளுக்கு நடுவுல இருக்க பந்தமும் பாசமும் அன்பும் அக்கறையும் அழியாம கிடக்கற வரை இங்கே யாரும் தோற்கறதில்லை. உங்களைப் பத்தின கவலையும் பிள்ளைப் பாசமும் இப்பவும் தாத்தா கிட்ட இருக்குது. நான் உங்க கைப்பிடிச்சு நடந்த நாட்கள்ல, இறுக்கிப் பிடிச்ச என் ஃபிங்கர்ஸ்ல எனக்கான பூரண அன்பை எழுதிருக்கீங்கப்பா. இந்த முப்பது வயசுலயும் அது அழியாம தான் இருக்குது. யூ வோன் மை ஹார்ட் தென் அண்ட் நௌ!” என தன் நெஞ்சத்தைத் தொட்டுக் காட்டினான். 


“சஞ்சு… சஞ்சு…” எனப் புதல்வனின் கைகளில் குழந்தையாய்ப் புகலிடம் தேடி தேம்பிய பாஸ்கரன், முயன்று மூச்சை இழுத்துக்கொண்டு கேட்டான். “அவர்… அவர் உனக்கு என்ன செஞ்சார்ன்னு முழுசா சொல்லுவியாப்பா?”


சலனமற்று சொன்னான். “அம்மாவைத் தவிர எனக்கு எதுவும் ஞாபகம் இல்லைப்பா! தாத்தாவைப் பத்தி சொல்லணும்னா அவருக்கு என்னைப் பிடிக்காது. அர்ஜூனைத் தொட விடமாட்டார்.”


பாஸ்கரன் பேசவில்லை. ‘நீ சொல்லப் போவதில்லையா?’ எனும் கேள்வியை இமைவழி கடத்தினான்.


தனக்கு உயிர் கொடுத்திருக்கும் மனிதர் உடைந்தழுது தன் காலடியில் கிடக்கையில், சிறு வயதில் தனிமையில் தாத்தாவிடம் அடிவாங்கினேன் என்று எப்படி சொல்லுவான் இவன்? சொன்னால் மட்டும் அனைவரின் வலிகளும் மறைந்துவிடுமா என்ன?


“ப்ளீஸ்ப்பா… இனி நடக்கறதைப் பத்தி யோசிப்போம். அம்மா உங்களைத் தேடுவாங்க.”


“சஞ்சு…” வளர்ந்த மகனிடம் அதற்கு மேல் அழுத்திக் கேட்க இயலாமல், ‘சொல்லிவிடேன்…’ எனும் கெஞ்சல் பார்வைப் பார்த்தான் பாஸ்கரன்.


“ஆல்மோஸ்ட் ட்வெண்டி ட்டூ இயர்ஸ்… ஸாரிப்பா, ஞாபகம் இல்லை.” 


“ஹ்ம்ம்!” எனத் தரையை வெறித்த, இயலாமை சுமந்த அப்பாவின் முகத்தைக் கண்டவன், அவரை எழுப்பி அறைக்குச் செல்லுமாறு அனுப்பினான். 


தளர்ந்த நடையுடன் போகும் அப்பாவின் மேல் ஆதூரமாக நிலைத்தது இவன் பார்வை. ‘உங்க அப்பா மேல கோபமிருந்தாலும் உங்க கஷ்டத்தைச் சொல்லி அவரை நோகடிக்காம இன்னிக்கு வரை அவரை நல்லவிதமா பார்த்துக்கறீங்க. உங்க பையன் நான் மட்டும் எப்டிப்பா என் கஷ்டத்தைச் சொல்லி உங்களுக்கு வலியைக் கொடுப்பேன்?’


ஆழ்ந்த சுவாசமெடுத்தவன் ஏதோ தோன்ற மீண்டும் பாஸ்கரனை அழைத்தான். “அப்பா!”


அவன் குரலில், அந்த அழைப்பில் கத்தி அழத் தோன்றிய மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு திரும்பிப் பார்க்க, விழிகளில் ஆழியின் அடர்த்தியாய் ஏக்கத்தைத் தேக்கிக்கொண்டு கேட்டான் மகன். “அம்… அம்மா வேணும்.”


அம்மாவின் சேலைத் தலைப்பைப் பற்றிக் கொள்ளும் பிராப்தம் இந்த ஜென்மத்தில் கிடைக்குமா என்று ஏங்கியிருந்த சஞ்சய், இப்போது அது நிறைவேறியதில் மகிழ்ந்தாலும் நாளை வரப் போவதை எண்ணி கலக்கமும் உண்டானது. அதற்கு பாஸ்கரனின் ஒத்துழைப்பும் வேண்டுமே!


ஒவ்வொரு பிறந்தநாளின் போது, பள்ளி, கல்லூரி போட்டிகளின் வெற்றிகளின் போது, வேலையில் சேர்ந்து முதல் சம்பளம் வாங்கியபோது, தொழிலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டபோது என சஞ்சய் அனுவைத் தேடிய நேரங்கள் ஏராளம் உள்ளன. இனியாவது அந்த தேடல்களுக்கு அர்த்தம் கிடைக்கவேண்டும் என்ற வேண்டுதல் இவனிடம்!


மகனின் மனதை அவன் கண்களில் தெரிந்துகொண்ட பாஸ்கரனிடம் பிரமிப்பு! அனுவும் இப்படித்தானே கிடந்து தவித்து வந்தாள்! இரு இதயங்களும் தூரங்களைக் கடந்து மௌன மொழியில் பேசிக்கொண்டனவா என்ன? ஆனால் தற்போது மகனைத் தாங்கள் மட்டும் சொந்தம் கொண்டாடிவிட முடியாதே? இதில் இன்னும் எத்தனைக் குழப்பங்கள் வருமோ! 


பிரபஞ்சன், நிரஞ்சனா, அபிராமி என அவர்களின் நற்குணங்களை மனதினுள் அலசிக்கொண்டிருந்த பாஸ்கரன் வெளியே நிர்மலமான பாவனையில், “உன் மூச்சுக்காத்தை உணர்ந்துடணும்னுதான் அவ மூச்சையே சுமந்துட்டிருக்கா! மே ஆல் தட் ஹேப்பன்ஸ் பீ வெல், சஞ்சு.” என மகனுக்கு வேண்டியதை மறைமுகமாகச் சொல்லிவிட, 


கண்கள் கண்ணீருடன் பளபளத்தன மகனுக்கு. “தாங்க்ஸ் டாட்.”


“சீக்கிரம் போய் தூங்கு!” எனத் தோள் தட்டிவிட்டு நகர்ந்துவிட,


இவன் மனக் குழப்பங்களையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, ஏகாந்த மனதுடன் தரையில் அமர்ந்து அங்கிருந்த பூத்தொட்டிச் சுவற்றில் சாய்ந்து, ஒரு காலை நீட்டி, பின்னால் தொட்டியின் மேல் இரு கரங்களையும் விரித்தாற் போல் வைத்துக்கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்திருக்க, இடக்கை நுனியில் தட்டுப்பட்டது அனு கொண்டு வந்த பால் டம்ளர்கள் அடங்கிய தட்டு!


அதனை மெதுவே எடுத்து, அர்ஜூனுக்குரியதையும் சேர்த்து துளிதுளியாய்ப் பருக, ரோஜா இதழ்களும் கற்கண்டும் இன்னும் வேறெதோ பொருட்களும் சேர்த்து அவனின் அம்மா தயாரித்திருந்த அந்த பானம், தொண்டைக்குள் இனிப்பாய் இறங்கி அவன் நெஞ்சுக்கூட்டை நிறைத்தது.


இசைக்கும்...


நேரம் ஒதுக்கி அனுவையும் சஞ்சுவையும் வாசிக்கற அனைவருக்கும் ஸ்ரீயின் நன்றிகள் 💌💌 கதை இதுவரை எப்படி போயிருக்குதுன்னு உங்க அபிப்பிராயம் சொல்லிட்டு போவீங்களாம்🪻🪻

Comments

  1. Unga update oda last paragraph la irunda kalkandu paal mathiri, manasukku niraiva irukku indha update. Thathava kaati kodukama irundhu, agni sorupamai jolikiran sanjay.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25