ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -16
அத்தியாயம் 16
கல்யாணம் ஆகி நேற்றோடு ஒரு வருடம் ஆகிறது. அதாவது போன வருடம் மருத்துவமனையில் வைத்து, ராஜீவன் பன்னீர் பூ செயினை என் கழுத்தில் போட்ட ஒரு விசேஷமான நாள்.
போன மாதமே ராஜீவன், 'உனக்கு எங்கேனும் போக விருப்பமா யமுனா?' என்று கேட்டதற்கு வேண்டாமென மறுத்துவிட்டேன். நாங்கள் ஹனிமூன் என்று எங்கும் போகவில்லை. அந்நேரங்களில் கால் சரியாக வேண்டும் என்று ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டான். இப்போது அது போன்ற இடங்களுக்கு போக எனக்கு விருப்பமில்லை.
இங்கு வந்து முதல்முறை பூரத்திருவிழா நடைபெறும் வடக்குண்ணநாதன் சிவன் கோவிலுக்கும் அம்மன் கோவில்களுக்கும் போனேன். இங்கே அத்திருவிழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். ஏழு நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட யானைகளோடும் செண்ட மேளம், கொட்டு மேளம் மற்றும் பஞ்சவடிய இசையோடும் அந்த தேக்கன் காடு மைதானமே புல்லரித்து போயிற்று.
அந்த வடக்குண்ணநாதன் சிவன் கோவில், ராஜா கடற்கரை, மிருகக்காட்சிசாலை, சக்தி தம்புரான் அரண்மனை, வியூர் சிறை பூங்கா என திருச்சூரிலேயே அத்தனை அழகுகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த ஊரையே கேரளாவின் கலாச்சார நகரம் என்று தான் சொல்கிறார்கள். இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியும் இங்குள்ளது.
ஆனால் எனக்கு இப்போது எங்கும் போக வேண்டாம். மட்டுமல்லாது, எனக்கு ஹனிமூன் என்றால் அது ராஜீவனின் வாசத்தை முழுமையாக நிரப்பிக் கொண்டிருக்கும் எங்கள் அறை மட்டும்தான்! அவனின் தழுவலான அணைப்பில் அவன் கழுத்தடியில் என் முகத்தை அழுத்தி, அவன் வாசனையோடு அந்த ஆஃப்டர் ஷேவ்வின் மணத்தையும் நுகர்ந்து கொண்டே என் மொத்த ஜென்மத்தையும் தீர்த்துக் கொள்ளலாம் போலிருக்கும்.
ஆக, இந்நாளில் எனக்கு வேறெங்கும் போக வேண்டாம். என் ஒரே ஒரு விருப்பமான இரவின் நீட்சியில், அடர்மழையின் மிச்சத்தில், ஆளில்லா சாலையில் கால் நோக நோக நடக்க வேண்டும் என்பதை மட்டும் சொன்னேன்.
சிரித்துக் கொண்டவன், "நீ சொன்ன உடனே வர்றதுக்கு மழை என்ன ராஜீவனா?" எனவும்,
"எப்ப வருதோ அப்ப கூட்டிட்டு போங்க!" என்றதோடு சரி!
ஆனால் மிகச் சரியாக நேற்றிரவு வந்த மழை நானே எதிர்பாராதது.
ராஜீவனுக்கும் ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும்.
"ஹேய் யமுனா, டெல் மீ ஃபர்ஸ்ட்! நீ என்னை விட இந்த மழையைத் தான் அதிகமா லவ் பண்றியா? அதென்ன நீ நனையணும் சொல்றப்பலாம் கரெக்டா வந்துடுது?" முதன்முதலாக என் மீதான பொஸசிவ்வோடும், மழை மீதான பொறாமையோடும் பேசினான்.
மழை மேல்தான் அதீத காதல் என்றால் என்ன செய்வானாம்? குறும்பு மாறாமலேயே சொன்னேன். "கொஞ்சம் அப்டித்தான்."
"ஓஹோ! ஏற்கனவே மழைல நனைய பிடிக்காது. இப்ப நீ இப்டி வேற சொல்லிட்ட…" என்று பற்களை நறநறக்க, பதறித் தான் போனேன் நான்.
கொஞ்சம் கிடைத்த சலுகைக்கும் வேட்டு வைத்துக்கொண்டேன் போலவே! "அச்சோ நான் சும்மா சொன்னேன் ராஜீவன். யமுனாவுக்கு உங்களை விட அதிகமா யாரையும் பிடிக்காதாம். உங்க இடத்துக்கும் வேற யாரும் வரவும் முடியாதாம்!" உணர்ந்துதான் சொன்னேன்.
துரை சற்று மலையிறங்கினார். மீண்டும் மலையேறும் முன் கிளம்பிவிட எண்ணி கார் சாவியை எடுக்க, வேகமாக பிடுங்கிக்கொண்டவன், "உனக்கு நடக்க தானே செய்யணும்? நான் சொல்ற இடத்துல போய் நடக்கலாம், வா!" என்றவன், அடுத்து செய்த காரியம் என் பொறுமையைப் பெருமளவில் சோதித்தது.
வருமுன் காக்கிறேன் பேர்வழி என்று சமையலறையில் காய்ச்சலுக்கு கஷாயம் செய்ய சொல்லிவிட்டு, நேரே மருத்துவமனைக்கு அழைத்துப் போய், என் உடல்நிலையைப் பரிசோதித்து மழையில் நனையப் போகிறோம் என்று சொல்லி, அதற்கு அங்கிருந்த செவிலியர்களின் வியந்த பார்வைகளையும் நமுட்டுச் சிரிப்புகளையும் கண்டுகொள்ளாது, மருந்தை வாங்கி என் வாயில் ஊற்றி என நேற்று ராஜீவன் செய்த அலப்பறைகள் அளப்பரியது.
என் முறைப்புகளோ, சலிப்புகளோ எதுவும் அவனிடம் எடுபடவில்லை. தேமே என்று இருந்துவிட்டேன். நமக்கு காரியம் ஆக வேண்டுமல்லவா?
இப்படி தான் இனிமையாய் ஆரம்பித்தது எங்களின் நேற்றைய மழைப் பயணம். ஆனால் முடிவில் நேர்மாறாக மாறிப் போகும் என்று நாங்கள் நினைத்திருக்கவில்லை.
ராஜீவன் அழைத்துச் சென்ற இடம் ஊரைவிட்டு தள்ளியிருந்தது. மழையில் ஆட்களின் நடமாட்டத்திற்கான அறிகுறியே இல்லை. சாலையைத் தாண்டி இங்கொன்றும் அங்கொன்றுமாக மரங்கள் நிறைந்த இடமாக, ஆனால் காடு போலவும் இல்லை. பக்கத்தில் சிறு கிராமங்கள் இருக்க வேண்டும்.
நான், ராஜீவன், பெய்யென பெய்யும் மழை! ஹய்யோ! இதைவிட இந்த யமுனாவிற்கு வேறென்ன சொர்க்கம் கிடைத்துவிட முடியும்?
'நீயும் நானும் ஒண்ணானா
ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா…' என்று இறங்கி ஆட்டம் போட வேண்டும் போலிருந்தது.
ஆனால் சற்று நேரம் இருவரும் காரை விட்டு இறங்கவில்லை. இருவரிடையேயான மௌனத்தைப் பின்னால் வந்த கார் ஹார்னின் சப்தம் இட்டு நிரப்ப முயன்று, பலவீனமாய் தேய்ந்து தோற்றுப் போனது.
இவனென்ன இறங்கவிடுவானா இல்லை, இப்படியே வேடிக்கைக் காட்டிவிட்டு திரும்பிவிடுவானா? என என் ஏக்கங்கள் கோடைக்கால பூக்களாய் பெருகியது. மெதுவே நானே பாவம் போல் அழைத்தேன்.
"ராஜீவன்…"
இப்போது தானா இந்த பளீரென்ற மின்னல் தன் பகுமானத்தைக் காட்ட வேண்டும்?
நான் நினைத்ததையே தான் கேட்டான். "கண்டிப்பா நனையனுமா யமுனா? இங்கிருந்து பார்த்தா மட்டும் போதாதா?"
"இதுக்கெல்லாம் போய் யாராவது பயப்படுவாங்களா? ப்ளீஸ் இன்னிக்கு ஒருநாள் மட்டும்! இனி எப்பவும் கேட்கவே மாட்டேன். ப்ளீஸ்ஸ் ராஜீவன்…"
ஐயாவிற்கு சடுதியில் முகம் இறுகிப் போனது. "இறங்கு!"
"நீங்க?"
"நான் வராம எப்டி?" என்றபடி அவனும் இறங்க கார் ஹெட் லைட், இன்டிகேட்டரைப் போட்டு விட்டு இறங்கி நடந்தோம்.
முதல்துளியை முகத்தில் ஏந்திய அந்த விநாடி எனக்குள் மறைந்திருந்த துள்ளல், சட்டென மின்னல் வேகத்தில் வெளிவந்தது. ஒடிந்த காலை மறந்து நட்ட நடுரோட்டில் இரு கைகளையும் விரித்து, ஆட்டம் போடப் போனவளை அதே வேகத்தில் தடுத்து தூக்கிக்கொண்டான்.
இந்த கால் ஏன் இப்படி ஆனது என்று முதன்முறையாக அழுகை வந்தது. ராஜீனிடம் அன்றொரு நாள், 'என்றும் எனக்கு சுய பச்சாதாபமே கிடையாது' என்றதையும் மறந்து அழுது தொலைத்தேன். "என்னால வேகமா ஓட முடியாதா ராஜீவன்?"
"எவ்ளோ வேகமாக ஓடணும் சொல்லு. இப்டியே ஓடலாம்." என்று என் ஐம்பத்து மூன்று கிலோவையும் தூக்கிக் கொண்டு ஓடிக் காட்டினான்.
"போதும். இறக்கிவிடுங்க!"
அதன்பின் பக்கவாட்டில் சென்ற ஒரு விசாலமான, மேடான மண் பாதையில் நடந்தோம். டார்ச்சை உயிர்ப்பித்து சுற்றும் முற்றும் பார்த்து எரிச்சலைக் கிளப்பினான். விஷ ஜந்துக்கள் அவன் யமுனாவைக் கடித்து விடுமாம்!
அந்த அன்புத் தீவிரவாதியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, காதல் பற்றை ஊட்டினேன். இருவரும் விரல் பிடித்து, மழை குடித்து எங்களின் காதலுக்கு தீரா பிரியத்தை நிரப்பிக் கொண்டோம்.
இமை மேல் ஊர்ந்து விழுந்த திவலைகள் நெஞ்சில் சிலுசிலுப்பாய் பரவசமூட்டியது. மூக்கின் நுனியில் பெருந்துளி தந்து, புல்லாக்கு மாட்டி அழகு பார்த்தாள் மழையன்னை.
ராஜீவன் மழைநீர் சொட்டும் சிகையோடு ரசிக்க மறந்த ஓவியத்தைப் போல் என்னை பார்த்திருந்தான்.
"நனைந்து நனைந்து
மழையைப் பரிசுத்தமாக்கினாள்,
என் யமுனா!"
என்ன இது? கவிதையா? ஹைக்கூ'வா? ராஜீவன் கவிதை சொன்னானா? எனக்காக? எனக்காகவா சொன்னான்? என்னைப் பார்த்தா சொன்னான்? நெஞ்சம் பரவசத்தில் பொங்கியது.
நான் கிரகிக்கும் முன்னமே என் இதழ்கள் இறுக்கி, மூளைக்கு தடங்கல் ஏற்படுத்தினான். என் கழுத்தில் வாழத் துடித்த அவன் அதரங்கள், "வீட்டுக்கு போயிடலாமா யமுனா?" என்று சிணுங்கல் மொழி பேசின.
எனக்காக ஒரே ஒரு கவிதை சொல்லேன் என்று இத்தனை நாட்களும் எப்படியெல்லாம் கேட்டிருப்பேன்? சிரித்து சிரித்தே மழுப்பியவனை இன்று இந்த மழை குழையச் செய்துதான் விட்டது போலும்.
அவனோடான அந்த மழை நடையில் ஆத்ம திருப்தியடைந்தவள், "போகலாம் ராஜீவன்!" என்றேன்.
அதுவரை என் ஆசை, மழை, என் ராஜீவன் என எல்லாம் கவிதையாகத் தான் இருந்தது. ஆனால் நாங்களிருவரும் காரை சமீபிக்கையில், யாரோ அழும் குரல்!
குரல் வந்த திக்கில் தேட, மழையில் வெடவெடத்துப் போய் நின்றிருந்தாள் ஒரு பெண். பெண் என்றும் சொல்ல முடியாத, சிறுமி என்றும் சொல்ல முடியாத பருவம் எய்திய சிறு பெண்ணவள்!
ராஜீவன் டார்ச்சோடு அவளை நெருங்க, அரக்கனைக் கண்டதைப் போல் அலறினாள். நானும் அருகே செல்ல என்னிடுப்பைக் கட்டிக் கொண்டு, "வேண்டாம் வேண்டாம்! போகச் சொல்! போகச் சொல்!!" என்பதாக மலையாளத்தில் அரற்றினாள்.
"நதீ, நதீ! இவிட ராஜீவ் சேட்டன்!" என்று ராஜீவன் தன் முகத்தில் வெளிச்சத்தைக் காட்டியதும், இன்னுமே பயந்து என்னோடு ஒடுங்கிக்கொண்டாள். அவன் அவளின் பெயர் சொல்லி அழைத்ததில், அந்த கிராமத்தில் ராஜீவனுக்கு யாரோ தெரிந்தவர்களின் வீட்டுப் பெண் என்று புரிந்துகொண்டேன்.
அவளை சமாதானம் செய்து காரில் ஏற்றி அழைத்து வரும் போதே மயக்கத்திற்கு போய்விட்டாள். ராஜீவன் நேரே டாக்டர் மைதிலியின் கிளீனிக்கிற்கு வண்டியை விட்டான்.
அங்கே அரைமணி நேர பரிசோதனையின் பின் மைதிலியிடம் பேசினோம். அநேகமாக எல்லா இடங்களிலும் நாம் கேள்விப்படும் விடயமே! Child abuse!
அதுவே எங்களுக்கு அதிர்ச்சி தானென்றாலும், அதைவிட பெரும் அதிர்ச்சியொன்றை தந்தார் மைதிலி. அது… இந்த குழந்தையின் வயிற்றில் இன்னொரு குழந்தை இருக்கிறதாம். மைதிலியே கொந்தளித்துக் கொண்டிருந்தார். செவிலியர்கள் உடைந்து அழுதனர்.
அவளுக்கு வயது பனிரெண்டிலிருந்து பதினான்கிற்குள் இருக்கலாம். ஆக தயக்கத்தோடே கேட்டேன். "இவ்ளோ சின்னப் பொண்ணுக்கு எப்டி குழந்தை..?"
அதற்கு டாக்டர் சொன்னதின் சாராம்சம் இதுவே - பொதுவாக மாதவிடாய் மற்றும் கருமுட்டை ஒன்பது, பத்து வயதிலிருந்தே உருவாகலாம். நபருக்கு நபர் வேறுபடும். ஆனால் அவர்களது உடல் ஒரு குழந்தையை சுமந்து பிரசவிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்காது. இந்தக் காலகட்டத்தில் கருவுறுதல், கருக்கலைப்பு, பிரசவம் என்பது போன்ற அனைத்தும் அவர்களின் உடல்நலத்தை பாதிக்கும்.
ராஜீவன் முகம் இறுகி, கண்களில் செவ்வரியோடி வெறி பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான். நான் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கக் கைகளை மூடி இறுக்கியிருந்தேன். எந்நிலையிலும் நாம் உடைந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை வெளிப்படுத்தக் கூடாது என்பது ராஜீவன் எனக்கு சொல்லித் தந்திருக்கும் பாடங்களில் ஒன்று! அது எனக்கு பரீட்சித்துப் பாராமலேயே கை வந்திருக்க வேண்டும். அப்படித் தான் மைதிலியின் டேபிளில் இருந்த இரத்த அழுத்தம் சரிபார்க்கும் கருவியையேப் பார்த்திருந்தேன்.
அன்றாட செய்திகளில் படித்திருந்த நிகழ்வு கண்முன் அரங்கேறியிருந்ததில் உள்ளமெல்லாம் பதறி வெலவெலத்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்நிலையிலும் அந்த சின்னவளை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்றே சிந்தனை போனது.
தனக்கு என்ன நடந்திருக்கிறது என்றே தெரியாமல், தன்னுயிர் இனி பிழைத்திருக்குமா என்றும் புரியாமல் கிடக்கின்றாள், மனதினில் நிலாச்சோறு ஆக்கி விளையாடும் சின்னவள்.
தானாய் முகிழ்த்திருக்க வேண்டிய அரும்பை அரக்கனின் அரிவாள் அறுத்தெறிந்து இரத்தம் சொட்ட சொட்ட பலமுறை தேன் குடித்திருக்கிறது என்கிறார் டாக்டர் மைதிலி.
எத்தனை முறை வலி பொறுத்தாளோ! எத்தனை முறை ரணமேற்றாளோ! எத்தனை முறை அருவெறுப்பில் நெளிந்தாளோ!! இறைவா!
இது பெண் இனத்துக்கான சாபம்; ஆண் இனத்துக்கான அசிங்கம்! இவர்களைப் போன்றவர்கள் மனித இனமல்ல; மனித ஈனம்! நாய்கள் கூட வயதறிந்து தானே இணையைத் தேடுகின்றன?
விவரம் தெரிந்த பிள்ளைகள் தற்கொலை செய்கின்றனர். விவரமறியா பிஞ்சுகள் இன்னமும் வீதியில் விளையாடிக் கொண்டிருக்கின்றனவே! பெற்றோர்கள் விழி வட்டத்திற்குள் வைத்து பெண்பிள்ளைகளை வளர்க்க வேண்டாம்; அவர்களின் தொந்தரவுகளையும் மன உளைச்சல்களையும் பகிரும் அளவிற்கு தோழன், தோழியாய் இருக்கலாம்.
அவளின்… ராஜீவன் 'நதீ' என்றழைத்த நதியாவின் சின்னஞ்சிறு வயிற்றில் இருபத்தியோரு வாரக் கரு, 'இங்கே இடப்பற்றாக்குறை' என்று அனத்திக் கொண்டிருக்கிறதாம். ஒரு குழந்தையைச் சுமக்கும் அளவுக்கு அவளின் உடல் போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. குழந்தையும் அக்குழந்தைக்குள் இருக்கும் குழந்தையும் ஆபத்தான நிலையில்தான் இருக்கின்றனர். மைதிலி சொல்ல சொல்ல எவனென்று கண்டு வெட்டிப் போடும் வேகத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரின் உயிரும் அலைந்தது.
அவள் மயக்கத்தில் ஏதோ உளருகின்றாள் என்று செவிலியர் சொல்ல, டாக்டரோடு நாங்களிருவரும் நதியாவைப் பார்க்க போனோம்.
அவள் புலம்பியதன் தமிழர்த்தம் - 'ராஜீவ் அண்ணாகிட்ட சொல்லிடாதீங்க, நான் ஒழுங்கா ஸ்கூலுக்கு போறேன். தயவுசெஞ்சு ராஜீவ் அண்ணாகிட்ட சொல்லிடாதீங்க!'
நான் பிரயத்தனப்பட்டு நிறுத்தி வைத்திருந்த கண்ணீர் கன்னம் தாண்டி ஓடியது. ராஜீவன் சட்டென்று வெளியேறிவிட்டான். அவளின் நெற்றியை வருடி தூங்கச் செய்துவிட்டு நானும் வெளியேற, அங்கே மரியம் அம்மா எங்களுக்கு மாற்று உடுப்போடு நின்றிருந்தார்.
என்னோடு தானே இருந்தான்? எப்போது அவருக்கு தகவல் தெரிவித்திருப்பான்? அவனிடம் பேசும் தைரியமற்று உடைகளை மாற்றி வந்தேன்.
"நீங்க ஏன் வந்தீங்க? டிரைவரை மட்டும் அனுப்பிருக்கலாம்ல?" என்று கேட்டவனுக்கு ஏதோ பதில் சொல்லி கொண்டிருந்தார் மரியம் அம்மா.
சற்று நேரத்திற்கு பிறகு அவள் கண்விழிக்கிறாள் என்று சொன்னார்கள்.
எழப் போன என்னை அமர்த்தி சொன்னான். "யாருன்னு கேட்டு சொல்லு யமுனா!"
"இப்பவே எப்டி ராஜீவன்? கொஞ்சம் ரெகவர் ஆகட்டுமே?"
"ஏய்!! போய் கேளுன்னு சொல்றேன்ல?"
இவனின் கத்தலில் அங்கிருந்த இரண்டொருவர் திரும்பிப் பார்த்தனர். அப்ப்பா!! இதுவரை ராஜீவனிடம் இத்தனை கோபத்தை நான் பார்த்ததேயில்லை. தன்னிடம் உதவி தேடி வரும் அனைவருக்கும் கருணை பொழியும் ஆண்தேவதை அவன்.
இதற்குள் பெண்ணின் அம்மா பெரும் கூச்சலோடு வர, அவரை இப்போது அறைக்குள் அனுமதித்தால் சின்னவள் பயப்படலாம் என்று செவிலியர்கள் உள்ளே விடவில்லை. அவர் ராஜீவனிடம் போய், 'என் பிள்ளைக்கு என்னானது?' என்று கேட்கையில், அவன் என்னைக் கண்களால் மிரட்டினான்.
வேறுவழியின்றி உள்ளே போய் அவளிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்துக் கேட்கையில் அவள் சொன்னாள். அடிக்கடி அவளின் பெரியப்பா அவரின் தேயிலை தோட்டத்திற்கு அவளை அழைத்துப் போவாராம்.
…..என்னால் அவள் சொன்னதை எழுத முடியவில்லையே…. சின்னஞ்சிறு பறவையைத் தடவி தடவி விஷம் குடிக்கச் செய்ததை எங்ஙனம் விவரிப்பேன்? பட்டுப்பூச்சியொன்றைத் துடிக்கத் துடிக்க நசுக்கியிருப்பதை எங்ஙனம் விவரிப்பேன்?
ஏதோ தவறான விளையாட்டை பெரியப்பா விளையாடுகிறார் என்று புரிந்து திமிறியவளை, 'நீதான் படிக்கப் பிடிக்காமல் தோட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று அழைத்து வந்தாய். இதை ராஜீவனிடம் சொன்னால் உன்னை இனி படிக்க வைக்க மாட்டான்.' என்று ஒவ்வொரு முறையும் மிரட்டியிருக்கிறார். அதனால்தான் ராஜீவனைப் பார்த்து அப்படி பயந்தாள் போலும்.
எத்தனை முறை அழைத்துச் சென்றார் என்று அவளிடம் கேட்க என் மனதில் வலுவில்லை. மைதிலி தான் சொன்னாரே, பலமுறை இரையாகியிருக்கிறாளென்று!
நதியாவிற்கு அப்பா இல்லை. கூலி வேலைக்கு போகும் அம்மாவால் இரண்டு பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியவில்லை. அவர்களின் படிப்பிற்கு எங்கள் டிரஸ்டின் மூலமாக உதவுவது ராஜீவன் தான் என்று அவள் சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது.
இன்றும் தங்கள் வீட்டிற்கு பெரியம்மாவும் பெரியப்பாவும் வருவது தெரிந்துதான் வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறாள். அவர்கள் கிளம்பியதும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டு போகலாம் என்று இவள் நினைத்திருக்க, திடுமென மழை வந்துவிட்டது. பயந்து போனவள் மரத்தடியில் ஒதுங்கி நின்றிருக்கிறாள். நேரம் ஆக ஆக அச்சம் அதிகமாகி அழுகையில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. ராஜீவனைப் பார்த்ததும் உண்மை தெரிந்துவிடுமோவென பயமும், இரவில் சாப்பிடாததும், மசக்கையுமாக சேர்ந்து மயங்கியாயிற்று.
அவள் அம்மாவும் இரவெல்லாம் மகளைத் தேடியிருக்கிறார்கள் போலும். அதனால் தான் ராஜீவன் தகவல் சொல்லவும் பக்கத்தில் தேடிக் கொண்டிருந்தவர்கள் உடனே வந்திருக்கிறார்கள்.
பெரியப்பாவைப் பற்றி அம்மாவிடம் சொல்லியிருக்கலாமே? என்று அவளைக் கடிந்து கொள்ள இயலாமல், கனத்த மனதோடு வெளியே வந்தவளை ராஜீவன் அணைத்துக்கொண்டான். என் முகம் பார்த்தே என் மன உணர்வுகளை அனுபவிக்கத் தெரிந்தவனல்லவா?
ஓரமாய் அழைத்துப் போய் கேட்டான். "ஏண்டா?"
அந்த ஒற்றை வார்த்தையில் உடைந்துதான் போனேன். நதியாவின் முன் அதுவரை அழ முடியாமல் தேக்கி வைத்திருந்ததை மொத்தமாய் அவன் மார்பில் கொட்டிவிட்டேன்.
"யமுனா யமுனா, அழாம யாருன்னு சொல்லு!"
"அவளோட பெரியப்பாவாம் ராஜீவன். சொப்பு சாமான் வச்சு விளையாடற சின்னப் பொண்ணைப் போய்…"
"சரி விடு, நான் பார்த்துக்கறேன். நீ அம்மா கூட வீட்டுக்கு போ!"
"அவன்… அவன் உங்கக்கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லி சொல்லி மிரட்டியே பணிய வச்சிருக்கான். நிறைய… நிறைய தடவை!" அழுகை வேறு தொண்டையை அடைத்துக் கொண்டு பேச விடவில்லை. "அவனை சும்மா விடாதீங்க ராஜீவன். எவ்ளோ பெரிசா முடியுமோ, அவ்ளோ பெரிசா தண்டிக்கணும். ரொம்ப பெரிசா!"
"விஷயம் வெளியே பரவுறதுக்கு முன்னாடி நான் போகணும் யமுனா. இல்லன்னா அவன் ஈஸியா எஸ்கேப் ஆகிடுவான். நீ இப்டி அழுதுட்டே இருந்தா உன்னை விட்டு நான் எப்டி போவேன்? ஆல்ரெடி அவங்கம்மா பொண்ணைக் காணும்ன்றதை, வீட்டுக்கு மூத்தவர்னு அந்தாள்கிட்ட தான் சொல்லிருப்பாங்க."
"இல்ல, நான் அழல. நீங்க போங்க. நான்… நதியா கூட இருக்கறேன்."
"அவளை அவங்கம்மா…" என்று ஏதோ சொல்ல வந்தவன், "சரி இரு!" என்றுவிட்டு கிளம்பினான்.
மரியம் அம்மாவும் அன்றிரவு வீட்டிற்கு போக மறுத்துவிட்டார்.
Comments
Post a Comment