சீதையின் பூக்காடு - 2

 

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 2 


அந்த காட்டிற்குள் இதுவரை தூறிக்கொண்டிருந்த வானம் இப்போது கடும் மின்னல் வெட்டுக்களோடு கனத்த மழையை பொழிய ஆரம்பித்துவிட்டிருந்தது. 


சோஃபாவில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன், ஆரவியின் அலைபேசி அழைத்ததும் கலவரமாய் நிமிர்ந்து பார்த்தான்.


"ஓ! மை பேட்டரி இஸ் கன்னா டை!" என்றவாறே, பரபரப்பாய் அழைப்பை ஏற்றவள் சிக்னல் கிடைக்கிறதா என்று பார்த்துக் கொண்டே, "அம்மா! எங்க இருக்கேள் எல்லாரும்?" எனக் கேட்க,


"என்னடி இது கேள்வி? கிளம்பறச்சே உன்னான்ட சொல்லிட்டு தானே வந்தோம்?" என மறு கேள்விக் கேட்டார் ஆரவியின் அன்னை பரமேஸ்வரி.


"ஆமா… ஆனா திடீர்னு…" என்று தன்னிலையை சொல்ல வந்து விட்டு, பின் சற்றே நிதானித்து, "அது வந்து... ம்மா! பாட்டி எப்டி இருக்கா?" என்று கேட்டாள்.


"ம்க்கும்! உன் பாட்டிக்கு என்ன? நன்னா கல்லுகுண்டு மாதிரி உட்கார்ந்துண்டு வர்றவா போறவாகிட்ட எல்லாம் என்னைக் குறையடிச்சிண்டு இருக்கா."


"வாட்?! வாட் ஆர் யூ ஸேயிங்?" என்று அதிர்ந்தவள், அலைபேசியை கீழே நழுவ விட்டுவிட்டாள். பின், சுதாரித்து அரக்க பரக்க எடுத்து மீண்டும் காதில் வைத்தாள்.


"ம்மா…"


"ஆரவி! என்னடி ஆச்சு நோக்கு? உன் பாட்டிய சொன்னா நோக்கும் கோவம் வர்றதா? நீ ஒருத்தி தான் நம்மாத்துல நேக்கு சப்போர்ட் பண்ணுவ? இப்ப நீயும் உன் தோப்பனாரோட சேர்ந்துண்டு, உன் பாட்டி பக்கம் போயிட்டியோ? பகவானே!"


"அம்மா! அம்மா!! ப்ளீஸ் கொஞ்சம் நிறுத்தேன்."


"பாரேன். நான் கால் பண்ணி சொல்ல வந்ததையே மறந்து போனேன். ஆரவி! கேளேன்!! உன் மன்னிக்கு விவாஹம் நடந்து அவ புக்காத்துக்கு போறதுக்கு இன்னும் வாரம் இருக்குதோன்னோ? அதுக்குள்ள உன் தோப்பனார் ஆத்து ஆளுங்க பண்ற அல்டாப்பு இருக்கே… அம்மம்மா! தாங்கலடி நேக்கு!" 


"அம்மாஆ... இப்ப நீ பேசறத நிறுத்தப் போறியா இல்லயா?"


"இன்னிக்கு என்னடி ஆச்சு நோக்கு? நான் கிளம்பறச்ச நன்னா தானே இருந்த? அப்புறம் ஆரவி! நான் சொன்னேனோல்லியோ? அதே தான்டி. உன் தோப்பனார் ஆத்து ஆளுங்க நகைநட்டெல்லாம் அள்ளி போட்டுண்டு நடைமாடும் நகைக் கடையா மாறி, கூ...ட்டமா சுத்திண்டு இருக்கா. ஓவர் அலப்பறை தெரியுமோ? நான் மட்டும் சளைச்சவளா என்ன? உன் விவாஹத்துக்குனு வாங்கி வச்சிருந்த வைர அட்டிகை கூட கொண்டு வந்திருக்கேன். அதை நான் போட்டுண்டு வெளிய வந்ததும் உன் அத்தையம்மா மூஞ்சி போன போக்கை நீ பார்க்கணுமே… அய்யிய்யய்யோ ஒரே மூச்சுலயே பிராணனனையே விட்டுடுவா போல..." என்று பரமேஸ்வரி இன்னும் தன் புகுந்த வீட்டு கதைகளைக் கூற ஆரம்பித்தார். திடீரென அவரின் பேச்சு நின்று அருகில் ஒரு ஆணின் குரல் கேட்டது.


"பரமி! என்ன? நம்மாட்கள் எல்லாம் அங்க இருக்கா. இங்க வந்து உன் பொண்ணுண்ட குசுகுசுனு என்னத்த கதையளந்துண்டு இருக்க? எங்காத்து மனுஷாளப் பத்தி பேசலனா நோக்கு தூக்கமே வராதே! அம்மா உன்னைத் தேடிண்டு இருந்தா. போ முதல்ல! இரு! இரு!! அந்த மொபைல என்னான்ட தந்துட்டு போ! இனி ஒரு வாரம் கழிச்சு ஊருக்கு போறச்ச வாங்கிக்கோ. அதுவரை என்கிட்டயே இருக்கட்டும்."


"அராஜகம் பண்றேள்ன்னா நீங்கோ! என் பொண்ணுண்ட பேசறது ஒண்ணு தான் நேக்கு ஆறுதலே!! அதையும் கெடுக்கறேள். வந்த இடத்துல ரசபாசம் ஆக வேணாமேனு பார்க்கறேன். நம் அகம் போனதும் வச்சுக்கறேன் உங்கள!" என்று விட்டு நகர்ந்ததும்,


"குழந்தை! என்னடி பண்ற?" என்று மகளிடம் கேட்டார் பரமானந்தம்.


"ப...பப்ளிஷரப் பார்க்க வந்தேன்ப்பா!"  


மகளின் குரலில் வேறுபாட்டை உணர்ந்தவர், "என்னடி நன்னா இருக்கியோன்னோ?" என்று கேட்க,


"ம்ம் ப்பா! மழை வர்ற மாதிரி இருக்கோன்னோ… அதான் கொஞ்சம் குளிர்!" எனவும் சற்று நிம்மதியானார் பரமானந்தம்.


"சரி சரி! காலாகாலத்துல ஆத்துக்கு போ! நேரமே சாதம் வடிச்சு சாப்பிட்டு தூங்கு! சும்மா அந்த லேப்ல கதை எழுதறேன், கண்றாவி எழுதறேன்னு உட்கார்ந்துண்டே தூங்காத. நான் வேணும்னா கமலா மாமிய நோக்கு துணைக்கு வர சொல்லட்டுமா?"


"வேணாம்பா. ஐ கேன் மேனேஜ்."


"சரி! அம்மாவும், பொண்ணும் இனி அடுத்த வாரம் பேசிக்கோங்கோ! உன் அம்மா மொபைல் என்னான்ட தான் இருக்கும். எதுவும்னா நானே கால் பண்றேன். நீயே சும்மா சும்மா பண்ணாத. என்னடி? புரிஞ்சதோன்னோ?"


"ஹ்ம்ம் பா!"


அலைபேசியை வைத்து விட்டு, குழம்பிய முகத்தோடு மெதுவாக அவனெதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்தாள் ஆரவி. சுருங்கிய புருவங்களோடு இருந்தவளை அழைத்தான். 


"என்னாச்சு?"


"மொதல்ல இது எந்த இடம்னு சொல்லுங்கோ!"


"நானே இப்ப தான கண்ணு முழிக்கறேன்? ஏன்? என்னாச்சு?"


"சம்திங் ஹேப்பன்ஸ் ராங் ஹியர்..." என்றாள், நிமிர்ந்து வீட்டை பயப்பார்வை பார்த்துக் கொண்டே!


பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான்.


"யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா."


"ஓ!"


"ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?"


"எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?"


"மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?"


"நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்கனு கூட யோசிக்கலயா நீங்க? ஏதோ ஒரு அந்நோன் கால் வந்ததும் கிளம்பி வந்துடறதா?" என்று கேட்கவும் மலங்க மலங்க விழித்தாள் ஆரவி.


"அப்டியே வந்தாலும் ஃபர்ஸ்ட் எய்ட் பண்ற நேரத்துக்கு உங்க வீட்டாளுங்க பாட்டிய ஹாஸ்பிடலுக்கே கூட்டிட்டு போயிருக்க மாட்டாங்களா என்ன?" என்று அவன் பேச பேசவே தான் ஆரவிக்கு தன் மடத்தனம் புரிந்தது. 


இருந்த பதட்டத்தில் எதையுமே சிந்திக்கவில்லையே? பிடிக்காத பாட்டி ஆயினும் உள்ளிருந்த பாசம் சிந்திக்கவிடாமல் இழுத்து வந்துவிட்டதோ?


"சரி இப்ப பேசினவங்ககிட்ட சொல்லிருக்கலாமே? அவங்களால வர முடியலனா கூட ஹெல்ப்புக்கு யாரையாவது அனுப்புவாங்க தானே?"


"இல்ல! தேவையில்லாம அவாள ஏன் கலவரப்படுத்தணும்னு தான்…"


அதுவும் ஒரு காரணம் தானெனினும், உண்மையில் தான் வீட்டிலில்லாமல் வேறு எங்கோ காட்டிற்குள் மாட்டிக்கொண்டது தெரிந்தால் அவளின் சொந்தக்காரர்களின் வீண் பேச்சுகளுக்கு ஆளாக நேரிடும் என்பதாலேயே தற்போது ஆரவி எதையும் தன் பெற்றோரிடம் கூற முற்படவில்லை. இங்கிருந்து வெளியே செல்ல வழியேயில்லை என்பது தெரிந்திருந்தால் சொல்லியிருப்பாளோ என்னவோ?!


"ம்ம், அதுவும் சரி தான்!" என்று ஆமோதித்தவன், "ஆனா யார், ஏன் இப்டி பண்ணனும்? நம்மகிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கறான்?" என்றான், சிந்திப்பவனைப் போல தாடையை உயர்த்தி!


"ம்ம்! நம்மகிட்ட இருந்து யாரோ ஏதோ எதிர்பார்க்கறா. இல்லனா… ஒருவேளை… க..கடத்தல் கேங் எதுவும்..?" மனதின் கலக்கம் விழிகளில் பிரதிபலிக்க, தொண்டையடைத்துக் கொண்டு வார்த்தைகள் வெளிவராமல் திக்கினாள் ஆரவி.


"ப்ச் கூல்! கடத்தறவன் இப்டி தான் கை, காலை ஃப்ரீயா விட்டு வச்சிருப்பானா?"


"ஆமால்ல? வாங்கோ முதல்ல இங்க இருந்து கிளம்புவோம். இனி ஒரு நிமிஷம் கூட என்னால இங்க இருக்க முடியாது." 


இருவரும் எழுந்து ஹாலைக் கடந்து வரவேற்பறைக்கு வந்தனர். கதவு மூடியிருந்தது. திகைத்து போய் விரைந்து சென்று மூடியிருந்த கதவை கைகள் வலிக்குமளவு தட்டினர். இதுவரை சற்று நிதானமாகவே இருந்தவனுக்கும், ஐந்து நிமிடங்களாக தட்டிய பின்னும் திறக்காததால் பதற்றம் தொற்றிக்கொண்டது.


"ஹலோஓ!!! ஓப்பன் தி டோர்!!!" வீடு அதிரும் மட்டும் கத்தியவாறே கதவைத் தட்டினான். உயர்ந்து நின்றிருந்த அந்தக் கால உறுதி வாய்ந்த தேக்கு மரக்கதவு திறக்கமாட்டேனென பிடிவாதமாய் நின்றது. இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்கும் போது வெளியில் இருந்து யாரோ ஒருவர் சத்தமில்லாமல் கதவைப் பூட்டியிருக்க வேண்டும்.


பின் வேறு வழி இருக்கிறதாவெனப் பார்க்க அவன் மாடிக்குச் சென்றான். இவளும் பின்னேயே ஓடினாள். எங்கும் வெளியே செல்ல வழியில்லை. 


மீண்டும் கீழே வந்தனர். ஓய்ந்து போனவர்களாய் தொப்பென்று சோஃபாவில் அமர்ந்தனர். அவன் ஆரவியின் அலைபேசியை வாங்கி யாருக்கோ அழைக்க முயன்றான். ஆனால் அது அவன் கரங்களில் பரிதாபமாக தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது.


"சட்!" என்று நெற்றியில் அறைந்து கொண்டவன், "பவர் பேங்க் இல்லையா?" என எரிச்சலுடன் கேட்க,


"வண்டில லேப்டாப் பேக்'ல வச்சிருக்கேன்." என்று பாவமாக உரைத்தாள்.


வேறு சார்ஜர் எதுவும் இருக்கிறதா என்று அங்கிருந்த கார்னர் ஸ்டாண்ட், டிவி ஸ்டாண்ட் என மற்ற இடங்களையும் அலசியவர்களுக்கு பூஜ்யமே மிஞ்சியது. 


வண்டியை போர்டிகோவில் நிறுத்தியிருந்தாலும் இந்த வேகமான மழையினால் தன் தோள் பையினுள் உள்ள மடிகணினி நாசமாகி விடுமோ என அது வேறு ஆரவிக்கு உள்ளூரக் கவலையாக இருந்தது. 


அவன் பதட்ட மிகுதியில் நகத்தைக் கடித்து துப்பிக்கொண்டிருந்தான்.


"இப்ப என்ன பண்றது?" - ஆரவி.


"ஒண்ணும் பண்ண முடியாது. இன்னிக்கு நைட் இங்க தான் இருந்தாகணும் போல."


"நோ நோ... நெவர்! என்னால முடியாது."


"மாமி! இனி யாராவது வந்து ஹெல்ப் பண்ணனும். நம்ம இங்க இருக்கறத யாருக்காவது தெரியப்படுத்தணும்; அண்ட் தென் வீ கேன் கோ அவர் ஹோம்." 


"ஹ்ம்ம்! பட், ஐ கான்'ட் ஸ்டே ஹியர்!" நெற்றி சுருங்க கலக்கத்தோடு சொன்னாள்.


"நோ அதர் வே! தேர் இஸ் நோ ஒன் வித் அஸ். யாரும் வராம வி ஆர் நாட் கோயிங் எனிவேர்!" என்றான் முடிவாக!


ஆரவி பதிலில்லாமல் அழுகைக்கு கண்களை வாடகைக்கு விட்டாள்.


"அழாத மாமி! இப்ப வெளியே போனாலும் இந்த மழைல எப்டி வீட்டுக்கு சேஃபா போய் சேர முடியும்? நைட் இங்க ஸ்டே பண்ணிட்டு காலைல வெளியேறுறதைப் பத்தி யோசிக்கலாம். என்ன?" என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே மின்சாரம் தடைபட்டு, இன்வெர்ட்டரின் உதவியோடு நான்கு குழல் விளக்குகள் மட்டும் எரிந்தன.


படபடப்போடு சுற்றும் முற்றும் பார்த்தவள், இப்போது தான் அந்த ஹாலின் நீள, அகலங்களை நன்றாக கவனித்தாள். வீட்டின்‌ முன்புறம் வலப்பக்கம் சமையலறை. இடப்பக்கம் ஓர் அறை, இருபுறமும் உயர்ந்து சென்ற மாடி படிகளுக்கு பின்னால் வலது, இடது என இரண்டு அறைகள் மற்றும் ஒரு சிறிய அறை சற்று மறைவாக இருந்தது. அங்கு இருந்த அத்தனை விளக்குகளையும் சேர்த்தால், இத்தனை நேரம் குறைந்தது பத்து விளக்குகள் எரிந்திருக்கும் போலும். 


மின்சாரம் தடைபட்டு மீண்டும் விளக்குகளுக்கு உயிர் வந்த, இடைப்பட்ட சில நொடிகளில் ஆரவி அரண்டு விட்டாளென அவள் முகத்தைப் பார்த்து கவனித்தவன் அவளிடம் மென்மையாக பேச முற்பட்டான்.


ஆனால் அவள் கரகரவென கண்களில் வழிந்தக் கண்ணீரைத் துடைக்கவும் தோன்றாமல், சிறு குழந்தையென தேம்பி அழ ஆரம்பித்தாள். 


கடுப்பானவன், "ப்ச்! ஹலோ மாமி! செத்த அழறத நிறுத்தறேளா?" என்றான்.


"ம்ம்ம்ம்ம்… ஹ்ம்ம்ம்ம்… நோக்கு அழுகை வரலயா? ஹ்ம்ம்ம்ம்…. ஹாஆஆஆஆ.."


"ஏய் ச்சீ! அழுகைய நிறுத்து!! என்னையும் உன்னை மாதிரி பச்சபேபியா அழ சொல்றியா? எப்டியோ வந்து மாட்டிக்கிட்டாச்சு. அடுத்து என்ன செய்றதுன்னு பார்க்கறத விட்டுட்டு, என்னமோ உன்னை கற்பழிக்கற மாதிரி கண்ணீர் விட்டு கதறிக்கிட்டு இருக்க?" என்று கத்த,


அடுத்த கணம் ஆரவியின் கண்ணீர் சுரப்பிகள் தன் வேலையை நிறுத்திவிட்டது. கண்ணீர் சுரப்பிகள் மட்டும் தான் வேலையை நிறுத்தியது. அது வேலையை நிறுத்திய நொடி அவளின் பயத்தை சுரக்கச் செய்யும் கார்டிசோலும், அட்ரலினும் தங்கள் வேலையை செம்மையாக செய்தன. கடைசி சொட்டு நீரை உதிர்த்துவிட்டு பயத்தை ஏந்தி அவனை சந்தித்தது அவள் விழிகள்!


அதிலும் எரிச்சலானவன், "ஹலோ! ஹலோ!! என்ன? ரேப்பிங்-க்கு ரெடியாகற வில்லனைப் பார்க்கற மாதிரியே லுக்கு விடற? எனக்கு இப்ப செமயா பசிக்குது. சத்தியமா உன்னை ரேப் பண்ற ஐடியா இல்ல. காட் இட்!" என்று எழுந்து கிச்சன் இருக்கும் திசையில் திரும்ப,


"அப்போ சாப்பிட்டதுக்கப்புறம் ரேப் பண்ணுவேளா?" என்றவளின் சின்னதாகிப் போன குரல் முழுவதும் பயத்தில் தோய்ந்து வெளிவந்தது.


பூக்கும்🌻🌺 

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)