சீதையின் பூக்காடு - 11.2

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 11.2

"மொட்டை மாடிக்கா? வேணாம் விபு! இப்ப தானே அங்கிருந்து வந்தேன்?" குரலில் நடுக்கத்தை வெளிப்படுத்தாமல் இருக்க பிரயத்தனப்பட்டாள்.

பாதி படி ஏறியிருந்தவன் நின்று திரும்பி, "பரவால்ல பேபி. நான் தான் கூட இருக்கேன்ல? மேல ஏற முடியாதுனா சொல்லு. தூக்கிட்டு போறேன்." என்று டீ-ஷர்ட் ஸ்லீவ்ஸை மேலேற்றியவாறே மீண்டும் நான்கு படிகள் கீழிறங்கினான்.

"மேல ஏற முடியாம இருக்கறதுக்கு நான் ஒண்ணும் கிழவி இல்ல. மழை வேற பெஞ்சிண்டு இருக்கறதேனு தான் சொன்னேன்." மேலே அந்த பெண் இருந்தால் என்ன செய்வது? என்ற அச்சம் இவளிடம்!

"மழைல நனைஞ்சா ஒண்ணும் கரைஞ்சிட மாட்டோம். இப்ப வர்றியா என்ன?" நினைத்ததை உடனே முடிக்க வேண்டும் என்ற வேகம் அவனிடம்! 

விட்டால் அவன் கீழே வந்து தன்னைத் தூக்கி செல்லும் அபாயம் இருந்ததால் ஆரவி, தானே மேலேறினாள். 'பிடிவாதக்காரன்!' என்று மனதோடு திட்டியும் கொண்டாள்.

தன் பின்னே புது மணப்பெண்ணைப் போல தயங்கி வருபவளை முறைத்துவிட்டு நடந்தான் அவன். 

மழை தூவானமாய் தூறிக்கொண்டிருந்தது. கருத்திருந்த மேகங்கள் கலைந்து, பூமிக்கு வெளிச்சத்தை அனுப்பிக் கொண்டிருந்தன. 

மேலே வந்ததும் முதலில் ஆரவியின் கண்கள் ஊஞ்சலின் அருகே தேட, அந்த பெண் ஓர் ரோஜா செடியினருகே நின்றிருந்தாள். அப்போது இவளைப் பார்த்து புன்னகைக்க முயன்றவள், இப்போது எந்த எதிர்வினையும் புரியாமல் அமைதியாக இருந்தாள்.

இப்போது ஆரவி பயத்தை சற்று ஓரங்கட்டி விட்டு அவளை அளவெடுப்பது போல் பார்த்தாள். என்ன ஒரு அழகு! இவள் கண்களில் தான் எத்தனை தேஜஸ்! நிச்சயம் ஐந்தரை அடி உயரம் இருப்பாள். இந்தி நடிகை தீபிகாவின் சாயலில் இருந்தாள். அந்த அழகான நாசியும், உதடுகளும்… ஏன்? நிறமும் கூட அப்படியே ஒத்துப்போனது. வெள்ளை மற்றும் மெஜந்தா நிற சுடிதார் அணிந்திருந்தாள்.

இருவரின் பார்வைகளும் மௌனங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தன. ஆரவி அவளைப் பார்த்தவாறே முன்புறம் நின்றிருந்த விபுநந்தனின் அருகே சென்றாள். கைப்பிடி சுவர் முழுவதும் எனக்கே எனக்கென்று சுவரை மறைத்து சுற்றி வளைத்திருந்தது சந்தனமுல்லைக் கொடி! 

"என்னாச்சு விபு?"

"இங்கே இருந்து இந்த கொடியை பிடிச்சிக்கிட்டு கீழ இறங்க முடியுமா பார்க்கலாம். ஆனா, கொடி வேர் எங்கேருந்து ஆரம்பிக்குதுன்னு தெரியலயே…" என்றான், தலையைத் தட்டிக் கொண்டே! என்னவோ எல்லாம் தெரிந்து அதை மறந்துவிட்டாற் போன்ற பாவனை!

"என்ன?! கீழ இறங்கப் போறோமா?" என்றவாறே தனக்கு பின்னால் திரும்பிப் பார்த்தாள். இப்போது அந்த பெண் ஊஞ்சல் சங்கிலியை ஒட்டினாற் போல் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

இவன் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாய் கீழே எட்டிப் பார்த்தவாறு நடந்தான். 

"வீட்டுக்கு முன்னாடி தான் கொடி வச்சிருப்பா'ன்னு என்ன நிச்சயம்? இந்த பக்கம் கூட இருக்கலாமோன்னோ?"

"அது… ம்ம்! இருக்கலாம். நீ கீழ போய் கிச்சன்ல இருந்து பெரிய கத்தி ஏதாவது எடுத்துட்டு வா."

"ம்ம்!" தலையாட்டி விட்டு திரும்பியவள், அரூபப் பெண்ணைப் பார்த்தவாறே வாசல் நிலையருகே வந்தாள். 

அவள் கண்களில் இருந்த கேள்வி வார்த்தைகளாய் வெளிவந்தது. "போறியா ஆரவி?"

அந்த இரண்டே இரண்டு பரிதவிப்பான வார்த்தைகளைக் கேட்ட ஆரவி குழந்தையாய் விழித்தாள். இன்று காலை வரை வெளியேறுவதைப் பற்றியே சிந்தித்து, விபுநந்தனையும் சந்தேகித்து, இப்போது அவனே வெளியேற ஓர் வழி கூறினால் கை, கால் உடைந்தாலும் பரவாயில்லை என மகிழ்ச்சியாக கீழிறங்குவதை விட்டு விட்டு, மட்டியைப் போல் இப்படி ஓர் அரூபத்திற்கு இரக்கம் காட்டிக் கொண்டிருக்கிறாளே?!

தான் என்ன உணர்கிறோமென புரியாமல் விழித்தாள் ஆரவி. 

'ஆரவி! நீ ஒண்ணும் ராகவா லாரன்ஸ் இல்ல, பேய்க்கு கம்பெனி குடுக்கறதுக்கு! போ! போய் கத்தி எடுத்துட்டு வா!' புத்தி இடித்துரைத்தது. ஆனால் புத்தியின் சொல்லை இவள் மனம் என்று கேட்டிருக்கிறது? இந்த வீட்டிற்குள் நுழையுமுன்பும் கூட புத்தி எச்சரிக்கை விடுத்தது. அதை அலட்சியப்படுத்தி உள்ளே வந்து சிக்கிக்கொண்டாள்.

"மாமி! இங்கயே நின்னு என்ன பண்ணிட்டு இருக்க? கத்தி கொண்டு வா! அப்டியே உன் மொபைல், வேற திங்க்ஸ் இருந்தாலும் எடுத்துட்டு வந்துடு!" 

கேட்ட ஆரவிக்கு அந்த வீட்டின் மீதான ஏதோ ஓர் பந்தம் பட்டென்று உடைந்து விழப் போகும் தருணமாய்த் தெரிந்தது. மீண்டும் அப்பெண்ணைப் பார்த்தாள். 'ஓ! போறியா? சரி போ!' என்று சின்ன கோபத்தோடும் சுருங்கிய முகபாவனையோடும் ஊஞ்சலில் அந்தப் புறம் திரும்பி அமர்ந்துகொண்டாள்.

'பாருடா! பேய்க்கு கோவம் கூட வர்றது!'

"ஆரவி!" அங்கிருந்தவாறே கத்தினான் நந்தன்.

"ஹான்? விபு! நேக்கு உடம்புக்கு ஏதோ போல பண்றது. இவ்ளோ உயரத்துல இருந்து கீழ இறங்கணும்னு நினைச்சாலே வயித்தைப் புரட்டிண்டு வர்றது விபு." பாடம் முடிக்காத சிறுமியாக காரணம் சொன்னாள்.

"ஏய்!! என்ன? என்னைப் பார்த்தா கிறுக்கன் மாதிரி தெரியுதா உனக்கு?"

"........"

"வெளிய போக வழி இருக்கா பாரு பாருன்னு உசுர வாங்கின? இப்ப ஒரு வழி கண்டுபிடிச்சா பயமா இருக்கு சொல்ற? என்ன நினைச்சிட்டு இருக்க மனசுல? எதையும் சொல்லியும் தொலைய மாட்டேங்கிற!" என்று இன்னும் இன்னும் கத்தித் தீர்த்துவிட்டான்.

பின் அவளின் சிணுங்கலான முகத்தைப் பார்த்து கொஞ்சமாய் கோபம் தணிந்தவன், "வீ ஹேவ் ட்டு டூ திஸ், ஆரவி! இதுக்கு மேல இங்கே இருந்தா நீ மெண்டல் ஆகிடுவியோனு எனக்கு பயமா இருக்குது பேபி மாமி." என்று தன்னுள்ளத்தை மறைக்காமல் கூறினான்.

"ஹாஹா… தன்னைப் போல் பிறரையும் நினைன்னு சொல்லிருக்காங்களாம். அதுக்காக உன் கூட மாட்டிக்கிட்ட என்னையும் அப்டியே நினைக்கறது நியாயமே இல்ல விபு!" எனவும், அவன் துரத்துவதைப் போல் பாவனை செய்ய, கீழே ஓடியே போனாள்.

ஆரவி போகவில்லை என்றதில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளின் முகம் மகிழ்ச்சியில் வானவில் வண்ணமென ஜொலித்தது.

ஆரவி கீழே சென்றதும், தன் சிவப்பு நிற சட்டையைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டு, கைப்பிடி சுவர்களில் படர்ந்திருந்த கொடிகளை சற்று ஒதுக்கி விட்டு மெதுவாக மேலேறிய விபுநந்தன், தூரமாய் பார்த்தவாறே சட்டையைத் தூக்கி வேகமாக சுழற்றினான்.

ஆம்! நேற்றே மேலே வந்த போது தூரத்தில் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்டிருந்தான். அங்கே ஏதேனும் சிறிய ஊர் இருக்கவேண்டும். நூற்றில் ஒன்றாய் யாரேனும் தன்னை கவனித்துவிட மாட்டார்களா என்ற நப்பாசையில் தான் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான். இப்படி ஐந்து நிமிடங்கள் சென்றதும் திரும்பி சட்டென்று ஓரே தாவலில் உட்புறமாக குதித்தான்.

இவனின் கிறுக்குத்தனத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அரூபப் பெண் பதறிப் போனாள். மேலே நின்றிருந்தவனைப் பிடித்திழுக்கக் கூட தன்னால் முடியவில்லையே என்பது போல் இயலாமையில் அவனை சுற்றிச் சுற்றி வந்தவள், அவன் கீழே இறங்கியதும் தான் நிம்மதியாக உணர்ந்தாள். 

எனில்? அன்று அவன் உறங்கச் செல்லும் போது அவனருகில் அமர்ந்து முத்தமிட்ட ஜீவன் இவள் தானோ?
 
உன் பரிதவித்த பார்வையில் 
அவளுக்குள் ஓர் பரிவு!
பரிந்து வருபவளிடமும் 
அவள் மனதைப்
பறித்துக்கொண்டவனிடமும்
உனக்கேன் இத்தனை கனிவு?!

பூக்கும்🌻🌺 


Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)